உணவுக்காக காத்திருந்த குழந்தைகள் மீதும் குண்டு வீசிய இசுரேல்

மத்திய கிழக்கில் கடந்த அக்டோபர் 2023இல் தொடங்கிய போர் 600  நாட்களைக் கடந்தும் தொடர்வதால், காசாவில் கடுமையான பஞ்சமும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டு இருக்கிறது. பாலஸ்தீனியர்களுக்கான உணவு, குடிநீர், மருந்து போன்றவற்றைத் தடுப்பதன் மூலம் காசாவின் குழந்தைகளை ஜியோனிச இனவெறி இசுரேல் அரசு கொன்றழித்து வருவதும் தொடர்கிறது.

ஒரு நாட்டில் 20 சதவீத மக்கள் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டால் அதை ‘பஞ்சம்’ என்று ஆய்வாளர்கள் கூறுவர். ஆனால் பாலஸ்தீனியர்கள் இதைவிட மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு குழந்தைகள் பட்டினியாலோ ஊட்டச்சத்து குறைபாட்டாலோ இறக்கின்றனர். இசுரேல் அரசு அங்கு பசியையும் பஞ்சத்தையும் போர்க்கருவிகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

கடந்த மே 30, 2025 அன்று ரஃபாவில் உள்ள உதவி மையங்களில் உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குழந்தைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடந்த வாரங்களில் மட்டும் GHF நிவாரண முகாமை நோக்கி சென்று கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது. தற்போது உயிரிழந்தோரையும் சேர்த்து கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ஐம்பது நாலாயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்திருக்கிறது இசுரேல் அரசு.

இத்தகைய போர்ச்சூழலில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் “அடுத்த பதினொரு மாதங்களில், இந்த மோசமான நிலைமை மாறவில்லை என்றால், கிட்டத்தட்ட 17,000 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாவர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களின் உடல்நிலை மோசமாவதால் அவர்களின் குழந்தைகளும் ஆபத்தில் உள்ளனர்” என்று அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு அங்கு இசுரேல் அமைத்துள்ள காசா மனிதாபிமான அறக்கட்டளை (Gaza Humanitarian Foundation-GHF) அமைப்பும் ஒன்றாகும். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி GHF அமைப்பை இசுரேல் உருவாக்கியது. (இதை உருவாக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவும் இருந்தது.) ஒரு அரசு சாரா நிறுவனமாக, ஆயுதமேந்திய அமெரிக்க பாதுகாப்பு படையினரைக் கொண்டு ‘பாலஸ்தீனியர்களுக்கு உதவுகிறோம்’ என்ற பெயரில் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க அமைக்கப்பட்டதே இந்த நிறுவனம்.

ஐ.நா.மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதை தடுக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த GHF அமைப்பு. உண்மையில் பாலஸ்தீனியருக்கு உதவிகள் வழங்குவதாகக் கூறி, அவர்களை முகாம்களில் இருந்து வெளியே வர வைத்து, அவர்களை இசுரேல் படைகள் குறிவைத்து தாக்கும் நிகழ்வுகளே இந்த அமைப்பால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தெற்கு காசாவில் GHF விநியோக நிலையத்திற்கு அருகே 31 பாலஸ்தீனியர்கள் இசுரேலியப் படைகளால் கொல்லப்பட்டதே இதற்கு சான்று.

பிற சர்வதேச அமைப்புகள் பாலஸ்தீனியருக்கு உதவுவதைத் தடுக்கும் நோக்கிலும் GHF செயல்படுவதால் ஐ.நா.வால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை சர்ச்சைகள் காரணமாக அண்மையில் GHF அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜேக் வுட் ராஜினாமா செய்திருக்கிறார். “(GHF அமைப்பினால்) மனிதநேய கொள்கைகளை நிறைவேற்ற முடியவில்லை” என்று கூறி அவர் பதவி விலகியிருப்பது இசுரேலின் அடக்குமுறை நடவடிக்கைகளால்தான் என்பது தற்போது தெளிவாகி இருக்கிறது.

அவரைப் போன்றே நார்வே ஏதிலிகள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஜான் எகிலேண்ட் அவர்களும் GHF-ஐ விமர்சித்துள்ளார். GHFன் பின்னணியில் அமெரிக்காவின் முன்னாள் CIA உறுப்பினர்கள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய கணக்கெடுப்பின்படி, இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா.தெரிவித்துள்ளது. இவர்களுக்காக கடந்த வாரம் 93 லாரிகளில் உணவும் உதவிப்பொருட்களும் GHF மையத்திற்கு வந்ததாக இசுரேல் தெரிவித்தது. ஆனால் லாரிகள் காசா எல்லையை வந்தடைந்தாலும் இதுவரை எந்த உதவிப்பொருட்களும் விநியோகிக்கப்படவில்லை என்று தற்போது ஐ.நா. தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்புகளிடம் இருந்து எந்த உணவும் உதவிகளையும் பாலஸ்தீனியர்கள் பெற்று விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் இசுரேல், கடந்த வாரத்தில் மட்டும் GHF அருகே இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தி இருக்கிறது. ‘விட்காஃப் படுகொலை’ என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க-இஸ்ரேலிய ஆதரவு அமைப்பான GHF-ஐ மூட வேண்டும் என்ற குரல்கள் உலகெங்கும் வலுத்து வருகின்றன.

இவ்வாறு இனவெறி காரணமாக காசாவில் உணவுப் பஞ்சம் இசுரலால் திட்டமிடப்பட்டு செயற்கையாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலர் குரல் கொடுத்ததும் மக்களுக்கான போதிய உணவும் தண்ணீரும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

அண்மையில்  ‘Freedom Flotilla Coalition’ எனும் தன்னார்வலர்கள் அமைப்பு தற்போது காசாவிற்கு உதவிப்பொருட்களுடன் கப்பல் ஒன்றை அனுப்பி இருக்கிறது. காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உட்பட பதினோரு சமூக ஆர்வலர்கள் இசுரேலின் எதிர்ப்பையும் மீறி அந்தக் கப்பலில் பயணிக்கின்றனர். ஆனால் இசுரலோ “இந்தக் கப்பலையும் தடுத்து நிறுத்துவோம்” என்று மிரட்டல் விடுகிறது. (கடந்த 2010 ஆம் ஆண்டில், இதே போன்ற உதவிக் கப்பல் ஒன்றில் பயணம் செய்த ஒன்பது பேரைக் இசுரேல் கொன்றிருக்கிறது). இவ்வாறு உலகின் எந்த மூலையிலிருந்தும் காசாவிற்கு உதவிப்பொருட்கள் வராமல் தடுத்து வைத்திருக்கிறது இசுரேல்.

மின்சாரத்தைத் துண்டித்து, ஊடகத்தை தடை செய்து, மருத்துவர்களை கைது செய்து இசுரேல் செய்யும் இனப்படுகொலை நிகழ்வு சர்வதேச நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அமெரிக்காவின் துணையோடு மீண்டும் மீண்டும் போர்க்குற்றத்தைத் தொடர்கிறது இசுரேல். இசுரேல்-காசா இடையே நிரந்தர போர்நிறுத்தம் செய்ய ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை (4 ஜூன் 2025) அன்று அமெரிக்கா தனது வீட்டோ (veto) தடுப்பைச் செய்திருக்கிறது. ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட14 நாடுகள் வாக்களித்த ஐ.நா. தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு முறியடித்திருக்கிறது அமெரிக்கா. இதன் மூலம் போர் இன்னும் பல நாட்களுக்குத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனக் குழந்தைகள் இறப்பதற்கு அமெரிக்காவும் ஒரு முக்கிய காரணியாக மாறி இருக்கின்றது.

ஏகாதிபத்திய நாடுகளின் போர்வெறி உச்சத்தை அடைந்திருக்கும் வேளையில் குழந்தைகளைக்கூட எதிரிகளாக சித்தரிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாலஸ்தீன நில ஆக்கிரமிப்பிற்காக தொடங்கிய போர், இசுரேலின் இனவெறியாலும் ராணுவ ஆக்கிரமிப்புகளாலும் பச்சிளம் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் கொல்கிறது. எல்லா போர்களும் ஏகாதிபத்திய நலன்களால் கட்டுப்படுத்தப்படும் சூழல் தொடர்கிறது. மனிதநேயத்தை நிலைநிறுத்த சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி முன்னெப்போதையும் விட தற்போது இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »