தமிழர்களை மூத்த குடி என்று சொல்லும் கீழடி அறிக்கையை மறுக்கும் பாஜக அரசு

இந்திய தொல்லியல் துறை அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கீழடியில் அகழாய்வை தொடங்கி, இந்திய துணைக்கண்டத்தின் மூத்த குடி தமிழர்கள் என்று வரலாற்றை எழுத வேண்டிய சூழல் எழுந்தவுடன், அமர்நாத் அவர்களை பணியிடம் மாற்றி கீழடி அகழாய்வை இழுத்து மூடியது பாஜக அரசு. இந்திய தொல்லியல் துறை கைவிட்ட பணியினை பின்னர் தமிழ்நாடு தொல்லியியல் துறை மேற்கொண்டது. அமர்நாத் அவர்கள் இந்திய தொல்லியல் துறையிடம் அளித்திருந்த, இந்திய தொல்லியல் துறை வெளியிடாமல் வைத்திருந்த அகழாய்வு அறிக்கையை வெளியிட நீதிமன்றம் ஆணையிட்ட பின், தற்போது அதில் திருத்தம் வேண்டுமென இந்திய அகழாய்வு துறை அமர்நாத் அவர்களிடம் கேட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

கீழடி அகழ்வாய்வு நடைபெற்ற பொழுதே பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு இந்த ஆய்வை முடக்க நினைத்தது மோடி அரசு. தமிழர்களின் போராட்ட குணத்தால், பல தமிழ் உணர்வாளர்களின் உறுதியினால், அனைத்தையும் கடந்து, அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் 982 பக்கங்களில் 2023 ஏப்ரலில் இந்த ஆய்வறிக்கை இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் தான் இப்போது இன்னும் நிரூபிக்கத் தகுந்த திருத்தங்கள் தேவைப்படுவதாக கூறியிருப்பது தமிழர்களிடையே கடும் சீற்றத்தை எழுப்பியுள்ளது.  

இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் 2015-ம் ஆண்டு கீழடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு கட்ட அகழாய்வுகளில் தமிழர்களின் தொன்மையை பறை சாற்றும் ஏராளமான சான்றுகள் கிடைத்த வண்ணம் இருந்தன. இதன் ஆய்வுகள் அனைத்தும் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது. அகழாய்வு நடந்த இடங்களில் மக்களை பார்வையிட அனுமதித்து, தொல்பொருட்களைப் பற்றி அவர்களுக்கு விளக்கமளித்து நடத்தப்பட்ட முதல் அகழாய்வாக கீழடி அமைந்தது.

இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டு கண்டறியப்பட்ட ஒவ்வொரு தொல்பொருட்களும் தமிழரின் தொன்மையை பறை சாற்றின. இது சிந்துவெளி நாகரிகத்துக்கு இணையானதென்று தமிழர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் சிந்துவெளியிலும் இல்லாத வகையில் கீழடியில் சுடப்பட்ட மண்பாண்டங்கள் அதிக அளவில் கிடைத்தன. அதுமட்டுமின்றி, மண்பாண்டங்களில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. உறைகிணறுகள், வடிகால், தொழிற் கட்டுமானம், செங்கல் சுவர்கள், பவளம், பளிங்கு, கண்ணாடிப் பொருட்கள், யானை தந்தத்தால் ஆன பகடைகள், அம்புகள், சுடு மண் பொம்மை, நகர வடிவிலான வீதிகள் என அனைத்தும் தமிழர்கள் நகரமய நாகரிக வாழ்வியல் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதை  வெளிப்படுத்தியது. 

கீழடியில் ஆய்வு செய்யப்பட்ட பல அடுக்குகளிலும், மதங்களை அடையாளப்படுத்தும் வழிபாடு சார்ந்த எந்தத் தொல்பொருட்களும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் பணி மாற்றம் செய்யப்பட்டார். கீழடியில் மதம் சார்ந்த எதுவும் கிடைக்கப்படவில்லை என்பதும், தமிழர்களின் மூத்த நாகரிகம் ஆதாரப்பூர்வமாக நிறுவப்படுகிறது என்பதும் டெல்லிப் பார்ப்பனிய அதிகார மட்டத்தினால் ஏற்றுக் கொள்ள இயலாததால் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பணிமாற்ற நடவடிக்கை தமிழர்களிடையே கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது. மேலும் கீழடி ஆய்வுக்கு தேவைப்படும் நிதியும் பாஜக அரசு அளிக்கவில்லை. கடும் போராட்டத்திற்கு பிறகே சொற்ப நிதியும் வழங்கப்பட்டது.

அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட சிறிராமன் என்பவர், கீழடி தளத்தில் இனி கண்டறியப்படும் வகையிலான எந்த தொல்பொருட்களும் இல்லை என  அகழாய்வை மூடினார். இதையடுத்து கடும் போராட்டங்கள் எழுந்தன. அதற்குப் பிறகே தமிழ்நாடு தொல்லியல் துறை, கீழடியைக் கையிலெடுத்து அகழாய்வை மேற்கொண்டு நடத்தி வருகிறது. அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட 2015-17 வரையிலான ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்ததில் தான், தமிழர்களின் காலகட்டம், பண்பாட்டு அடுக்குகளின் எண், வரைபடம் போன்றவற்றில் இன்னும் கூடுதலான ஆதாரங்கள் தேவை என இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளது.  

இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள், கீழடி ஆய்வு பல கட்ட சான்றுகளின் அடிப்படையில் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது என்று கூறி, அதில் திருத்தப்படுவதற்கு ஏதுமில்லை என இந்தியத் தொல்லியல் துறைக்கு தெரிவித்து விட்டார். 

2023-ல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என 2024-ல் தனி நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்த போது, மதுரை உயர்நீதிமன்றம் 9 மாதங்களுக்குள் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. அதன் பின்னர், சு.வெங்கடேசன் உட்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதும் தான், 15 மாதங்கள் கழித்து, இந்த அறிக்கையில் திருத்தங்கள் தேவைப்படுவதாக இந்தியத் தொல்லியல் துறை கூறியிருக்கிறது.

ஆதிச்சநல்லூரில் 3150 ஆண்டுகள் முன்பாக ஈமத்தாழிகள் உடைய புதைப்பிடமும், மயிலாடும்பாறையில் 4000 ஆண்டுகள் முன்பான புதைப்பிடமும் கண்டறியப்பட்டது. ‘ஓரிடத்தில் புதைப்பிடம் இருக்கிறதென்றால் அதன் அருகில் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும், இல்லையென்றால் புதைப்பிடம் இருப்பதற்கான எந்தவித மூலக் காரணமும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்று எழுந்த எண்ணத்தை முன் வைத்து எங்கள் குழு பயணித்ததன் விளைவு தான் கீழடி’ என அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியை ஆய்வு செய்ய தேர்ந்தெடுத்த நோக்கத்தை கூறியிருக்கிறார்.

 ‘கிட்டத்தட்ட 293 இடங்களில் வைகை நதி முழுவதும் கிடைத்த ஆதாரங்களில் 100க்கு மேற்பட்ட இடங்களில்  வாழ்விடப் பகுதிகள் இருந்ததாகவும், சுமார் 80 ஆண்டுகளாக நாம் வாழ்விடப் பகுதியை சரியாக ஆய்வு செய்யவில்லை. சரியாக ஆய்வு செய்யாததால்தான் நம் செவ்வியல் இலக்கியங்களில் இருந்த, அதாவது சங்க இலக்கியத்தின் அகப்பொருள் சான்றினை பயன்படுத்தி சங்க காலத்தை கி.மு 300 – கி.பி 300 என்கின்ற கால அளவை  கொடுத்திருக்கிறார்களே தவிர, எந்த ஒரு அறிவியல் அடிப்படையிலும் கொடுக்கவில்லை’ என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார். 

ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ‘கொற்கை’ அகழாய்வில் கிடைத்த மண்பாண்டக் கீறல்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்தன. அது கி.மு 850 ஆண்டு முந்தைய கால அளவாக  கணக்கிடப்பட்டது. ‘பொருந்தல்’ அகழ்வாய்வில் கிடைத்த நெல் மாதிரிகளிலும் கி.மு 5ம் நூற்றாண்டு என்பதும் தெரிய வந்தது. அந்த நெல்மணிகள் இருந்த பானைகளிலும் தமிழி எழுத்துக் கீறல்கள் இருந்தன. இவை அனைத்தும் அமெரிக்காவின் பீட்டா மையத்தில் கார்பன் டேடிங் முறைப்படி கண்டறியப்பட்டுள்ளன.

எனவே அறிவியல் முறைப்படி சங்ககால இலக்கியங்கள் மூலமாக அறியப்பட்ட 3-ம் நூற்றாண்டை விட, அறிவியல் ஆய்வின்படி கண்டறியப்பட்ட 5-ம் நூற்றாண்டு தமிழர்களின் தொன்மை நாகரிகம் முன்னோக்கி செல்வதைத் திட்டவட்டமாகக் கூறுகிறது.

கீழடியிலும் அதே கால அளவே உறுதியாகியிருக்கிறது. ஆனால் கி.மு 3ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழர்களின் தொன்மை செல்வதற்கு வாய்ப்பில்லை என இந்தியத் தொல்லியல் அதிகார மட்டம் சொல்கிறது. இவை அனைத்தும் அசோகர் பிராமியிலிருந்தே தமிழி உருவானது என்கின்ற கருதுகோளை நொறுக்கும் படி இருப்பதனாலும், அதற்கு முன்கூட்டியே தமிழி எழுத்துக்கள் தோன்றின என்பதை ஏற்றுக் கொண்டால் வரலாறு திருப்பி எழுதப்படும் வகையில் அமையும் என்பதனாலும் இவ்வாறு இந்திய தொல்லியல் துறை சொல்வதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.

உலகிலேயே முதன் முதலில் கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழ் நிலத்தில் தான் இரும்பு காலம் தோன்றியது என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. சிந்துவெளியில் செம்பு பயன்படுத்திய போது இங்கு இரும்பை பயன்படுத்தியிருப்பதும் உறுதியானது. இரும்போடு கரிமத்தை குறிப்பிட்ட வெப்பநிலையில் உருக்கி தமிழர்கள் “எஃகு வாள்” தயாரித்திருக்கிறார்கள். அதனை சிரியாவிற்கு அனுப்பும் வணிகத்திலும் கொடி கட்டி பறந்திருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புகள் அகழாய்வுகளில் கண்பிடிக்கப்பட்ட போதும், தமிழர்களின் தொன்மையை முடக்கும் வேலைகளை செய்வதையே  இந்தியப் பார்ப்பனீயம் நினைக்கிறது. 

ஆரிய அடையாள சின்னங்களோ, சமஸ்கிருத எழுத்துகளோ கிடைக்காமல் தமிழி எழுத்தும், நகர நாகரிகமும் கீழடியில் கண்டறியப்பட்டது பார்ப்பனீயம் நிறுவி வைத்திருக்கும் வரலாற்றிற்கு ஆபத்தாக இருக்கிறது. தமிழ் நிலப்பரப்பின் அகழாய்வுகளும், தமிழின் தொல் இலக்கியச் சான்றுகளும் ஒத்துப் போகும் அளவிற்கு, பார்ப்பனீயம் கட்டமைத்து வைத்த புராண இதிகாசங்களில் காணப்படும் கற்பனை ஆதாரங்கள் எதுவும் வட பகுதிகளில் நடத்தப்படும் அகழாய்வுகளில் இல்லை. அதனை எப்படியாவது அவற்றைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான கோடிகளை ஒதுக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. அயோத்தியில் இருந்த பாபர் மசூதிக்கு கீழே இராமர் கோவில் இருந்தது என்று 2003-ல் வழங்கிய போலியான அறிக்கைக்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் அனுமதி கொடுத்ததை, உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதே  அதன் நேர்மையற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

அசோகர் கால பிராமி எழுத்துகளிலிருந்து தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றின என இதுவரை அறிஞர்கள் கூறியதற்கு மாற்றாக, அதற்கு முன்பிருந்தே தமிழி எழுத்துக்கள் இங்கு இருந்திருக்கின்றன என்பதை மண்பாண்டங்களின் கீறல்களில் வழியே உறுதியாகிறது.

இந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்னும் பாஜகவின் பித்தலாட்டமும் அம்பலமாகிறது. இதனாலேயே அகழாய்வு பணியில் இருந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்ட 2017-லிலேயே மே 17 இயக்கம் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தது.

கீழடியைப் பார்வையிட வந்த அன்றைய ஒன்றிய பாஜக பண்பாட்டுத்துறை அமைச்சரான மகேஷ் ஷர்மாவிற்கு எதிராக ஏப்ரல் 28, 2017 அன்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவள்ளுவர் சிலை முன்பு, தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடத்தியது மே 17 இயக்கம். மேலும் அக்டோபர் 7, 2019 அன்று மே 17 இயக்கத் தோழர்கள், தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட தோழமை அமைப்புகளுடன் கீழடியைப் பார்வையிட்ட தோழர். திருமுருகன் காந்தி அவர்கள், செய்தியாளர்களிடம் பேசினார். கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதற்கென்று அருங்காட்சியம் வேண்டும், இங்கு கண்டறிந்த பொருட்களை பட்டியலிட்டு வெளிப்படைத் தன்மையுடன் மக்களின் பார்வையில் வைக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தினார்.

தமிழர்களின் தொன்மை வரலாறு கீழடி கால அளவீடுகளோடு மட்டுமல்ல, இன்னும் விரிவுபடுத்தினால் அதற்கு முன்னர் செல்லக்கூடிய கால அளவு கண்டறிவதற்கான ஏராளமான சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் அளவிற்கான கீழடி ஆய்வறிக்கையை முடக்கும் சதிகளை பல மட்டங்களில் செய்யும் பார்ப்பனிய மோடி அரசின் சதியை, கீழடி ஆய்வை முன்னகர்த்திய அதே போராட்டக் குணத்துடன் தமிழர்கள் அனைவரும் இணைந்து  முறியடிப்போம்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »