என் தலைமுறை ஒரு அப்பாவித்தனமான தவறைச் செய்திருக்கிறது – ‘பெப்பே’ முஜிகா

ஜோஸ் “பெப்பே” முஜிகா லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டின் அதிபராக இருந்தவர். அடிப்படையில் ஒரு விவசாயியான அவர் 1970களில் மார்க்சிய அமைப்பில் ஒரு கெரில்லா போராளியாக செயல்பட்டார். பின்னர் 1970, 1980களில் உருகுவே இராணுவ சர்வாதிகார ஆட்சியின் போது 14 ஆண்டுகள் சிறையில் சித்திரவதை செய்து அடைக்கப்பட்டார். பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களால், விடுதலையாகி தேர்தலில் பங்கு கொண்டு விவசாயத்துறை அமைச்சர் ஆனார். பிறகு, 2010 முதல் 2015 வரை உருகுவே நாட்டு அதிபராக பதவி வகித்தார். அவர் அதிபராக இருந்த போது, 90% சம்பளத்தை நன்கொடையாக கொடுத்துவிட்டு, சிறிய வீட்டில் வாழ்ந்தார். அதனால், உலகின் மிக ஏழையான ஜனாதிபதி என்று அழைக்கப்பட்டார். அவர் தன் எளிமையினாலும், புரட்சிகர கருத்துக்களாலும் தன் நாட்டு இளைஞர்கள் மட்டுமின்றி உலகின் பல நாட்டு இளைஞர்களைக் கவர்ந்தவர்‌.

சமீபத்தில் (13-மே-2025) மறைந்த முஜிகா, “முதலாளித்துவம் என்பது வெறும் அளவற்ற சொத்துக்களை சார்ந்தது மட்டும் அல்ல; அது இடதுசாரிகள் வலிமையாக எதிர்கொள்ள வேண்டிய கலாச்சார விழுமியங்களின் தொகுப்பு” என்கிறார்.

அவர் எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதியை கட்டுரையாக்கி இருக்கிறது, Jacobin இணையதள பத்திரிக்கை. அது பின்வருமாறு,

என் தலைமுறை ஒரு அப்பாவித்தனமான தவறைச் செய்திருக்கிறது – ‘பெப்பே’ முஜிகா.

என் தலைமுறை ஒரு அப்பாவித்தனமான தவறை செய்திருக்கிறது. நாங்கள் சமூக மாற்றம் என்பதை உற்பத்தி மற்றும் விநியோக முறைகளை சமூகத்தில் முறைப்படுத்துவது என்று மட்டுமே நம்பினோம். கலாச்சாரம் என்பதன் மகத்தான பங்கை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. முதலாளித்துவம் என்பது ஒரு கலாச்சாரம்; இடதுசாரிகள் மாறுபட்ட கலாச்சாரத்தை முன் வைத்துதான் அதனை எதிர்க்க முடியும். இதனை வேறொருவிதமாக சொன்னால், ஒற்றுமை கலாச்சாரத்திற்கும், சுயநல கலாச்சாரத்திற்கும் இடையிலான போராட்டம் எனலாம்.

முதலாளித்துவத்தால் வியாபாரமாக்கப்பட்ட இசை, நடனம் போன்ற கலாச்சாரங்களைப் பற்றி நான் கூறவில்லை. அவைகளும் முக்கியம்தான்; ஆனால் நான் கலாச்சாரம் என்று சொல்வது, மனித உறவுகளைப் பற்றி, நம்மை அறியாமலேயே நம் உறவுகளை கட்டுப்படுத்தும் கருத்துக்களின் தொகுப்பைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். உலகெங்கிலும் உள்ள முகமறியாத லட்சக்கணக்கான மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் பேசப்படாத கருத்துக்களின் தொகுப்பே இது.

நுகர்வு கலாச்சாரம் என்பது அதன் ஒரு பகுதி. அது அளவற்ற சொத்துக்களை சேர்ப்பதற்கு முதலாளித்துவத்திற்கு தேவையான ஒரு நெறிமுறை. முதலாளித்துவத்திற்கு மிக மோசமான பிரச்சனை என்னவென்றால், நாம் வாங்குவதை நிறுத்துவது அல்லது மிகக் குறைவாக வாங்குவதுதான். முதலாளித்துவம் நம்மைச் சுற்றி நுகர்வு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பு என்பது வெறும் சொத்துக்களை சார்ந்த உறவுகள் மட்டுமல்ல; அது சமூகத்திற்கு பொதுவான பேசப்படாத மதிப்புகளின் தொகுப்பாகும். இந்த மதிப்புகள் உலகின் எந்த இராணுவத்தையும்விட மிக வலிமையானவை. மேலும் அவை இன்று முதலாளித்துவத்தைப் பராமரிக்கும் முக்கிய சக்தியாக இருக்கிறது.

எனது தலைமுறை, ஊடகத்தையும் சந்தை விநியோகத்தையும் தேசியமயமாக்க முயற்சிப்பதன் மூலம் உலகை மாற்ற‌விட முடியும் என்று நம்பியது. ஆனால் அந்தப் போராட்டத்தின் மையத்தில் ‘முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவது என்பது இருக்க வேண்டும்’ என்பதை நாங்கள் புரிந்து கொள்ள தவறிவிட்டோம். முதலாளித்துவ கொத்தனார்களை வைத்துக்கொண்டு நீங்கள் ஒரு சோசலிசக் கட்டடத்தைக் கட்டிவிட முடியாது. ஏனென்றால் அவர்கள் சிமெண்டை திருடுவதிலும், செங்கல்லை, கம்பிகளைத் திருடுவதிலும் தான் குறியாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டுமே செயல்படுவார்கள். ஏனென்றால் முதலாளித்துவ சமூகம் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றைப் பற்றி ஒரு திட்டவட்டமான பார்வைகொண்ட பகுத்தறிவாளர்களான எனது தலைமுறையினர், ‘மக்கள் பெரும்பாலும் தங்கள் தைரியத்தைக் கொண்டே முடிவெடுக்கிறார்கள்; பின்னர் அவர்களின் மனசாட்சி தங்கள் முடிவுகளை நியாயப்படுத்த வாதங்களை உருவாக்குகிறது’ என்பதை புரிந்து கொள்ளவில்லை. நாம் நம் ஒரு முடிவை மனசாட்சியின் மூலம் எடுக்கிறோம்; ஆனால் இங்கே கலாச்சாரம் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அது பகுத்தறிவற்ற தன்மையைத் தான் குறிக்கிறது.

உதாரணமாக, நமது இடதுசாரித் தலைவர்களுக்கு என்னவானது? இடதுசாரித் தலைவர்கள் நோய்வாய்ப்பட்டதுபோல அதே கலாச்சாரத்தில் தான் மூழ்கியுள்ளனர். அதனால்தான் அவர்களின் வாழ்க்கை முறை அவர்களின் போராட்டத்துடன் ஒத்துப்போவதாக இல்லை. ஜனாதிபதியாக இருந்தபோது நான் ஏழையாக இருந்தேன் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நான் ஏழை அல்ல. ஏழை என்றால் அவர்களுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றது என்று பொருள். இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொண்டு தன்னடக்கமாக இருப்பதே எனது குறிக்கோள். உண்மை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நிதானத்துடன் வாழக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், ஊதாரித்தனமாக இருந்தால், வீணாக்காமல் வாழ கற்றுக்கொள்ளவில்லை என்றால், இவற்றையெல்லாம் விரைவில் கற்றுக்கொள்ளவில்லை என்றால், நம் உலகம் நிலைத்து நீடிப்பது கடினம்.

பணத்தாசை நம்மை தொடர்ந்து புதிய பொருட்களை வாங்கத் தூண்டுகிறது. ஆனால் இந்த பூமியில் நிலையான வாழ்க்கை என்பது வளங்களை வீணடிக்காமல், தேவையானவற்றுடன் வாழக் கற்றுக்கொள்வது. நீங்கள் இப்போது பார்ப்பது போல, இந்தப் போராட்டம் ஒரு கலாச்சார காவியம் ஆகும். இடதுசாரிகளான நாம், நம்மிடம் இருப்பதிலிருந்து வேறுபட்ட சிந்தனைப் போக்கை உருவாக்க வேண்டும்.

இதன் பொருள் முதலாளித்துவத்துடனான நமது தொடர்பைத் விட்டு எறிவது. நம்முடைய கருத்துக்களில் படைப்பாற்றல் இல்லாமல் போய்விட்டது. முதலாளித்துவத்தைப் போலவே நாமும் ஒரு மாறுபட்ட, சமத்துவத்துடனான கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். இறுதியில், நல்ல வாழ்க்கை என்று நாம் கருதுவதை, வாழ்க்கையில் நாம் போற்றக்கூடிய மதிப்புகள், நாம் விரும்பும் லட்சியங்கள் தொடர்புடையனவாக அந்த கலாச்சாரம் இருக்க வேண்டும். அதன் எல்லைகள் பற்றிய உணர்வு இருக்க வேண்டும். ‘பெரிதாக எதுவும் இல்லை’ என்று பண்டைய கிரேக்கர்கள் சொல்வது போல இருக்க வேண்டும்.

இடதுசாரிகள் மாற்று கலாச்சார மதிப்புகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதனால்தான் நான் கலாச்சாரப் பிரச்சனை, அர்ப்பணிப்புப் பிரச்சனை மற்றும் முதலாளித்துவம் மதிக்காத வாழ்க்கையின் சில பகுதிகளை மதிப்பிடுவதில் உள்ள பிரச்சனை ஆகியவற்றை வலியுறுத்துகிறேன். நமது சமூகங்கள் செல்வத்தால் நிறைந்திருந்தாலும், அவற்றில் மிகுந்த சோகம் தான் நிலவுகிறது. நாம் அளவுக்கு அதிகமாக வாங்கிக் குவிக்கும் மக்கள் ஆனோம். நாம் உருவாக்கிய குப்பைகளினால் மூச்சுத் திணறடிக்கப்பட்ட சமூகங்கள் ஆனோம். நாம் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கத் துடிக்கிறோம். நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி, பின்னர் விரக்தியில் வாழ்ந்து, பில்களைச் செலுத்தி வாழ்கிறோம். நாம் வேறுபட்ட வாழ்க்கை முறையை முன்மொழிய வேண்டும். என்னைப் பொறுத்தவரை, இடதுசாரிகள் எப்போதையும் விட இப்போது அதிக புரட்சிகரமாக இருக்க வேண்டும்.

‘நீங்கள் நினைப்பது போல வாழ்வது’ என்பது இதன் பொருள். இல்லையெனில் நாம் வாழ்வதையே சிந்திக்க வேண்டியிருக்கும். சுயமாக நிர்வகித்துக் கொள்ளும் சமூகத்திற்கான போராட்டம், நாம் நமக்கு முதலாளியாக இருக்கக் கற்றுக்கொள்வது மற்றும் நமது பொதுவான திட்டங்களை வழிநடத்துவது தான். இந்த விடயங்கள் புதிய இடதுசாரிகளால் விவாதிக்கப்பட வேண்டும். இடதுசாரிகளின் நிரந்தர இருப்பை நான் நம்புகிறேன். ஆனால் அது முன்பு இருந்ததைப் போல இருக்காது. கடந்ததெல்லாம் கடந்துவிட்டது! காலம் மாறுவதால் இடதுசாரிகள் தனித்துவமாக இருக்க வேண்டியுள்ளது. மாற்றம் மட்டுமே நிரந்தரமானது.

புதிய புரட்சிகர திட்டங்களை உருவாக்குவதற்காக நான் எதையும் பரிந்துரைக்கப் போவதில்லை. என்னிடம் எந்த ஒரு மந்திர சூத்திரமும் இல்லை. படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் நாம் கடந்த கால ஏக்க உணர்வை அதிகமாக கொண்டு வாழும் பழைய இடதுசாரிகளைக் கொண்ட உலகில் இருக்கிறோம். அது ஏன் தோல்வியடைந்தது என்பதன் காரணத்தை கண்டறிய முடியாத இடதுசாரியாக, புதிய வழிகளை முன்னோக்கி கற்பனை செய்வதில் பெரும் சிரமம் உள்ள இடதுசாரியாக இருக்கிறோம். இது நிறைய பரிசோதனை, ஒத்திகை மற்றும் படைப்பாற்றலுக்கான சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். அதற்காக, நாம் பின்பற்ற வேண்டிய சில வரையறைகள் உள்ளன. ஏனென்றால், நான் ஏற்கனவே சொன்னது போல், என் தலைமுறை கலாச்சாரம் என்பதற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலாளித்துவத்தின் கீழ், மக்கள் கொண்டிருக்கும் பொதுவான மற்றும் சாதாரண உறவுகளில் உள்ள உள்ளார்ந்த கலாச்சாரத்தை நான் குறிப்பிடுகிறேன். இது இப்போது, அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள் மூலம்  மேலும் பல சொத்து/மூலதனக் குவிப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே பயன்படுத்துகிறது.

நமக்குள் உட்பொதிக்கப்பட்ட, நம்மைச் சூழ்ந்துள்ள கலாச்சாரம் என்பது தனிப்பட்டவர்களின லாபத்தைப் பெருக்குவதற்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அந்த கலாச்சாரம், போர் படைகளை விட, இராணுவத்தை விட மற்ற எல்லாவற்றையும் விட மிகவும் வலிமையானது. ஏனென்றால் அந்த கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ள மில்லியன்கணக்கான சாதாரண மக்களின் நிரந்தர உறவுகளைத் தீர்மானிக்கிறது.

அது அணுகுண்டை விட மிகவும் வலிமையானது. எனவே, கலாச்சார மாற்றத்தின் சிக்கலை எதிர்கொள்ளாமல் ஒரு அமைப்பை மாற்றுவது பயனற்றது. நாம் ஒரு புதிய அமைப்பு முறையையும், அதே நேரத்தில் ஒரு புதிய கலாச்சாரத்தையும், ஒரு புதிய நெறிமுறையையும் கட்டமைக்க வேண்டும்‌. இல்லையென்றால், நாம் கண்ட சோவியத் யூனியனின் நிகழ்வுகள் மீண்டும் நடக்கும். அங்கு ஒரு புரட்சிகர இயக்கம் 360டிகிரி சுற்றி வந்து அதே இடத்தில் நிற்கிறது. அந்த தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அல்லவா?

குறிப்பு: https://jacobin.com/2025/05/pepe-mujica-uruguay-capitalism-solidarity?fbclid=IwQ0xDSwKSlWJjbGNrApKUkGV4dG4DYWVtAjExAAEeIjL-OS1STrC_ZTTQB3N5OrCDgs2UBoPuYXrxS3JhM6ryIstc682qvB6nvps_aem_wJmy1WUqyG_TJs-XuTGC4g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »