
கோவை நகரத்தின் ஈக வரலாற்றை நினைவு கூறும் வகையில், பொதுக்கூட்டங்களை தொடர்ச்சியாக மே 17 இயக்கம் நடத்துகிறது. அவ்வகையில் ஜூன் 15, 2025 அன்று நடைபெறவிருக்கும் கோவை மறந்த விடுதலைப் போரின் நான்காம் ஆண்டின் வீரவணக்கப் பொதுக் கூட்டத்தைப் பற்றி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஜூன் 05, 2025 அன்று முகநூலில் பதிவிட்டவை.
பள்ளிக்கூட காலங்களில் விமானபடை பயிற்சி கல்லூரி, தரைப்படை தளம் என அமைந்திருக்கும் கோவையின் ‘ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்ட்ஸ்’ பகுதியில் சைக்கிளில் செல்லும் போதெல்லாம் இவற்றை பெருமையுடன் பார்ப்பதுண்டு. தரைப்படை, விமானப்படை மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் கப்பற்படை தளமான அக்ராணியும் அங்குண்டு. பள்ளியில் கப்பற்படை சார்ந்த நேவி -என்.சி.சி எங்கள் பள்ளியில் உண்டு. இதில் இணைந்த இருந்த 9, 10ம் வகுப்பு காலத்தில் நாட்டிற்கு போராடும் படையில் நாமிருக்கிறோம் எனும் பெருமையுடன் இந்த இராணுவ நகருக்குள்ளாக வலம் வருவோம். கடல் பகுதியே இல்லாத கோவையில் எப்படி கப்பற்படை தளம் இருக்க முடியுமெனும் கேள்வி அச்சமயத்தில் இருந்தது. இக்கேள்வியை கேட்டால் வாத்தியாரிடம் அடிவாங்கலாம் எனும் பயமும் உண்டு. பின்னர் கல்லூரி காலத்திலும் என்.சி.சியில் முதல்தர கேடட்டாக இருந்த சமயத்தில்கூட கோவையில் இவ்வளவு பெரிய இராணுவ தளம் இருப்பதற்கான காரணம் விளங்கியதில்லை. பெரும் விமானப்படை பயிற்சி தளம், தரைப்படைத்தளம், ஆயுத பயிற்சி தளம் என்று கோவையிலும், அதைச் சுற்றியும் தளங்கள் இருப்பதை குறித்து ஒருமுறை கல்லூரி என்.சி.சி கேம்ப்பில் வகுப்பெடுத்த இராணுவ தளபதி ஒருவர் தென்னகத்தின் முக்கியத்துவத்தை குறித்து சொன்னார். அவர் பேசியதில் பாதி மட்டுமே அன்று புரிந்தது. இலக்கியம், அரசியல் என அலைந்து திரிந்து இவ்விடயம் மறந்தே போனது.
2017 குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த சமயத்தில் மருதுபாண்டியர் குறித்து விரிவாக வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னதாக ஒரு பொதுக்கூட்டத்திற்காக மருது சகோதரர்கள் குறித்து வாசித்ததிலிருந்து மாறுபட்ட செய்திகளை இதில் காணமுடிந்தது. பின்னர் 2018ல் வேலூர் சிறையில் இருந்த சமயத்தில் பேராசிரியர் ராஜய்யன் எழுதிய பாளையக்காரர்கள் புரட்சி குறித்தும், ஞானய்யாவின் இந்திய விடுதலை போரில் இசுலாமியர்கள் (தமுமுகவின் தோழர் ஏஜாஸ் இந்த நூலை சிறையில் வாசிக்கக் கொடுத்தார்) பங்கு பற்றிய நூலையும் வாசித்த பொழுது கோவையில் நடந்த போர் குறித்த குறிப்புகளை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.

2017 சிறைக்கு பின்னர் தோழர் கே.எம்.சரீப் அவர்கள் தஞ்சையில் நடத்திய திப்பு சுல்தான் வீரவணக்க கூட்டத்திற்காக குறிப்புகளை எடுத்த சமயத்தில் திப்பு சுல்தானின் படை நகர்வுகள், போருக்கான ஆதரவு சக்திகளை திரட்டுதல் ஆகியவற்றை அறிய இயன்றது. குறிப்பாக அவரது நெப்போலியனுடனான தொடர்பையும், ஜெக்கோபியன் சங்கத்துடனான தொடர்புகளையும் அறிந்த சமயத்தில் இதனுடன் மருது சகோதரர்களின், தமிழக பாளையக்காரர்களின் இணைப்பை குறித்தும் வாசிக்க இயன்றது. இவையனைத்தும் பாளையக்காரர்களின் புரட்சியின் சமூக-பொருளாதார காரணிகளை விளக்கியது.
இதற்கு முன்னதாக ஈழ சிந்தனையாளர், போரியல் ஆய்வாளர் தராகி சிவராமின் கட்டுரைகளில் நிலம் மற்றும் அதன் இராணுவ முக்கியத்துவம் குறித்த கட்டுரைகளின் வாயிலாக புது பார்வைகள் கிடைத்திருந்தன. தராகி சிவராமின் புகழ்பெற்ற புகைப்படமான ஆனையிரவு போர் நினைவு படத்தை நாம் அறிவோம். புலிகளின் ஆனையிரவு போரின் இராணுவ முக்கியத்துவமும், போரியல் யுக்தி குறித்தெல்லாம் தராகி சிவராமிடம் நாம் அறியலாம். இந்த பார்வையுடன் தமிழக பாளையக்காரர்கள் புரட்சியை இணைத்து பார்க்கும் வாய்ப்பு வேலூரின் சிறையில் கிடைத்தது, ஒரு நெகிழ்வான நிகழ்வு.

தென்னகத்தில் வெள்ளையரை விரட்டியடிக்க விரிவான திட்டங்களை அன்றைய பாளையக்காரர்கள், திப்புசுல்தான் ஆகியோர் வகுத்திருந்தனர். இது வெகு கவனமாகவும், திட்டமிட்ட நகர்வாகவும் அமைந்திருந்தது. ஒவ்வொரு பகுதியாக புரட்சி திட்டத்தில் இணைத்திருந்தனர். நெல்லை முதல் கொங்கு பகுதி வரை இணைக்கப்பட்டிருந்தது.
’பாளையக்காரர்களின் தாக்குதல் என்பது வெள்ளையர்களின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை அழிப்பது, அதன் பின்னர் தலைமையகத்தை அழித்தொழிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது ஆச்சரியமளிக்கும் இராணுவ தந்திரமாகும்’. இந்த திட்டத்தின் கீழாகவே கட்டபொம்மன், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபாலநாயக்கர், தீரன்சின்னமலை, அப்பாஜிராவ், மயிலப்பன், ஊமைத்துரை, கேரளவர்மன், திப்பு சுல்தானின் படைதளபதிகள் இயங்கினார்கள். (போலி தமிழ்த்தேசியவாதிகள் கட்டபொம்மனை தெலுங்கன் என உதாசீனப்படுத்தி உளறுவதை போன்றதல்ல வரலாறு. கட்டபொம்மனும், மருதுபாண்டியர்களும் சந்தித்து உருவாக்கிய கூட்டமைப்பே புரட்சிக்கூட்டமைப்பின் முதல் அணி)
வெள்ளையர்களின் இராணுவ வலிமையை முறியடிக்கும் தமது யுத்த தந்திரத்தில் குறிவைத்த மிகமுக்கியமான இடமே ”கோவை” நகரம். கொங்கு பகுதிக்கு தொடர்பே இல்லாத நெல்லை, சிவகங்கை, பழனி பாளையங்கள் எப்படி கோவையை நோக்கி படை நகர்த்தின என்பதை புரிந்துகொள்ள தராகிசிவராமின் கட்டுரைகளே எனக்கு உதவின. கோவை நகர கோட்டையும், இராணுவ தளமுமே வெள்ளையர்களின் மிகமுக்கிய ராணுவ மையமாக அமைந்திருந்தது. இதை தகர்த்தால் மேற்கு தமிழகம், கேரளா, வட கன்னடம் ஆகியவற்றை விடுவித்துவிடலாம், வெள்ளையர்கள் இம்மூன்று பிராந்தியங்களில் இருந்து அகற்றப்படுவதற்கான தலைமை இராணுவ தளம் தமக்கு கிடைத்துவிடும் என பாளையக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இவற்றை சாத்தியப்படுத்தும் முன்னர் கட்டபொம்மன் தெற்கு பகுதியிலிருந்த ராணுவ கொத்தளங்களை கைப்பற்றும் திட்டம் தோல்வியில் முடிவதும், கட்டபொம்மன் மரணமும் பின்னடைவை தருகிறது. இருந்தும் மனம் தளராத புரட்சியாளர்கள் கோவை நகரை கைப்பற்றும் திட்டத்தை மருது தலைமையில் விருப்பாச்சி பாளையத்தில் வகுக்கிறார்கள். விருப்பாச்சி கோபாலநாயக்கர் இதற்கான மறைவிட தளத்தை உருவாக்குகிறார். வட கன்னடம் வரை தீரன்சின்னமலை குழு சென்று, திப்புவின் படைத்தளபதிகள் ஆதரவை சேகரிக்கின்றனர். தாக்குதலின் பின்தளத்தை மருது பாதுகாக்க, போர் பயிற்சி தளங்களை கோபாலநாயக்கர் உருவாக்க, தீரன் சின்னமலை ஒட்டுமொத்த படைநகர்வை மேலாண்மை செய்ய, கோவை-தாராபுரம்-சத்தியமங்கலம்-காங்கேயம்-ஒசூர்-அரவக்குறிச்சி பகுதிகளில் முற்றுகைப் போரை திப்பு சுல்தானின் படைத்தளபதிகள் நகர்த்த, வடகன்னடத்தில் இருந்து பெரும் குதிரைப்படையுடன் ’தூந்தாஜிவாக்’ எனும் பெரும்புரட்சியாளன் தாக்குதல் தொடுக்க, மேற்கிலிருந்து கேரளவர்மனின் படைகள் இணைந்து கொள்ள கோவை நகரின் இராணுவ தளம் தகர்க்கப்படும் திட்டம் உருவானது.
இந்த போர் வெற்றி பெற்றிருந்தால், புலிகளின் ஆனையிரவு போருக்கு நிகரான வெற்றியை கொடுத்திருக்கும். வெள்ளையர்கள் மண்டியிடும் சூழலை உருவாக்கி இருக்கும். இலங்கை சிங்களப்படை தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கும் நகர்வின் கேந்திர-முக்கியத்துவம் ஆனையிரவுக்கு இருந்ததை போல தென்னகத்தை கட்டுப்படுத்தும் முக்கியத்துவம் கோவை நகருக்கு உண்டு.
இந்த தாக்குதலில் பெருமளவில் களப்பலியானோர் இசுலாமியர்கள். இந்த தாக்குதலுக்கான ஆயுதங்களை புரட்சியாளர்களுக்கு கொண்டு சேர்த்த பணியை மசூதிகள் செய்தன. வெள்ளையர்களின் கடுமையான கண்காணிப்பு, ஒற்றர்படைகளின் கண்களின் மண்ணை தூவி, மசூதிகளிலேயே ஆங்கிலேயருக்கு தெரியாத வகையில் ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டன. பட்டியல் சமூகத்தின் பொல்லான் போன்ற பெருவீரர்கள் வெள்ளையர்களை கண்காணித்து உளவறிந்தார்கள். தமிழகம் தழுவி நடந்த போர் யுக்தி என்றால் மிகையில்லை.

கோவையின் கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் இசுலாமியர்களுக்கும், இப்போரில் வீழ்த்தப்பட்ட இசுலாமியர்களுக்குமான தொடர்பை எவரும் மறுக்க இயலாது. ஆனால் இன்று இந்துத்துவவாதிகளால்-அதிகாரவர்க்கத்தால் கோட்டைமேடு கடும் ஒடுக்குமுறைக்குள்ளாகிய பகுதியாக உள்ளது. கோவை நகரில் எஞ்சி இருக்கின்ற கோட்டைப்பகுதி, அக்கோட்டை பின்னாளில் தகர்க்கப்பட்டு மேடாக்கப்பட்ட பகுதிகள் ஆய்வுக்குரியன.
ஆங்கிலேயர் அவதானித்த இராணுவ முக்கியத்துவம் இன்றளவும் கோவைக்கு உண்டு. இதனாலேயே கோவை ராணுவ தளமாக இன்றும் மிளிர்கிறது.
1800ம் ஆண்டில் பாளையக்காரர்கள் கையில் கோவை சென்றிருந்தால் வரலாறு மாறிப்போயிருக்கும். சிதைந்து போன 225 ஆண்டுக்கு முற்பட்ட கனவை குறித்து பேச வேண்டும் என மே17 இயக்கம் கடந்த 4 ஆண்டுகளாக கோவை நகரில், வரலாறு மீட்பு மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு கோவை தாக்குதல் நடந்த ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் நடத்துகிறோம். ‘கோவை புரட்சி’ எனும் வரலாற்று நிகழ்வில் சாதி கடந்து, மதம் கடந்து, இனம் கடந்து எதிரிக்கு எதிராக ஒன்றுதிரண்டனர். தமிழர்களின் தலைமையில் கன்னட, கேரள படைகளும் களத்தில் போரிட்டன. முகம்மது ஹாசம், கனிஜாகான், ரோனுல்லாகான் போன்ற தளகர்த்தர்கள் மாண்டனர். பாளையக்காரர்களால் வீழ்த்தமுடியாமல் போன தமிழகத்தின் ‘ஆனையிரவு’ நகரத்தை, சரியாக 200 ஆண்டுகள் கழித்து ஈழத்தின் ‘கோவை-கோட்டை’யான ஆனையிரவை புலிகள் மீட்டனர்.

தமிழர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாளையக்காரர்கள் முதல் புலிகள் வரையிலான தமிழர்களின் போரியல் யுக்திகள் கவனத்திற்குரியவை. பாளையக்காரர்களோ, புலிகளோ இருவருமே மக்களை படையணிகளாக்கியவர்கள். இருவருமே ஆதிக்கத்திற்கு எதிராக நின்றவர்கள். இருவருமே சாமானிய மக்களிடமிருந்து எழுந்தவர்கள். இருவருமே ஆண்டப் பரம்பரையல்ல. இருவருமே போராட்ட பரம்பரையை சார்ந்தவர்கள். சாதி-மதம் கடந்து போர் செய்ய வாருங்கள் என மருதுபாண்டியர் முதல் மேதகு வரை அறிவிப்பு செய்தவர்கள், படை கட்டியவர்கள்.
இந்த வரலாறை நினைவுபடுத்தும் 225ம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டத்தை கோவையில் 4ம் ஆண்டாக மே17 இயக்கம் நடத்துகிறது. இந்த நிகழ்வில் பங்கெடுப்பதன் மூலம் கோவை நகரத்தின் ஈக வரலாறை நினைவுபடுத்தலாம், சீரழிவு அரசியல் கும்பலான இந்துத்துவத்தை அகற்றிட உறுதியேற்கலாம். நான்கு ஆண்டுகளாக கோவைபுரட்சிக்கு நினைவுச் சின்னம் கேட்கிறோம். நமது வரலாறை நாமே மீட்டெடுப்போம். எங்களது எளிய, உறுதியான முயற்சிக்கு உறுதுணையாக நிற்க வாருங்கள்.
ஜூன் 15, 2025
ஞாயிறு மாலை 5:00
ஒலம்பஸ்
கோவை.