
ஈழத்தில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு 16ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் சென்னையில் மே 18, 2025 அன்று நடைபெற்றது. அதற்கு முன்னதாக கோவை ஆவாரம்பாளையத்தில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் மே 16, 2025-ல் நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டு நடந்தது. அதில் வாழ்நாள் பெரியாரிய பணியாளராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைத் துவங்கி, தமிழர்களின் சமூக நீதி, உரிமைக்கான போராட்டக் களங்களில் முன்னணியில் நிற்கும் மூத்த தோழர் ஐயா. கு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு நினைவேந்தல் சிறப்புரையாற்றினார். விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் இடையில் இருந்த பிணைப்பை எடுத்துக் கூறினார். யாசர் அராபத், நெல்சன் மண்டேலாவை விட மக்களிடம் நெருக்கமான ஆளுமையாக இருந்த தலைவர் பிரபாகரனின் சிறப்புகளைப் குறித்துப் பேசினார். புலிகளின் ஆதரவுக்காக பெரியாரிய தொண்டர்கள் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வுகளையும் தொகுத்துப் பேசினார். இதில் தமிழ்நாடு திராவிட சுயமரியாதைக் கழகத்தின் தோழர். நேருதாஸ், திராவிடர் மக்கள் இயக்கத்தின் தோழர். ரகுபதி, தபெதிகவின் தோழர். ஆறுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர். திருமுருகன் காந்தி அவர்களும். தோழர். பிரவீன் குமார் அவர்களும் சிறப்புரையாற்றினர்.

தோழர். பிரவீன் குமார் அவர்கள், உலகின் இனப்படுகொலைக்கு எதிரான மிகச் சிறந்த ஆளுமைகள் தமிழீழ மக்களின் பக்கம் கவனம் திருப்பி பேசாததற்கு, குறுக்கே நிற்கும் இந்தியா தான் காரணமெனப் பேசினார். இங்குள்ள இடதுசாரிகளால் கொண்டாடப்படும் இலங்கை அதிபர் அனுர திசநாயகா தான், சுனாமி காலகட்டத்தில் உலக வங்கி பகிர்ந்து அளிப்பதாகக் கூறிய நிதியை தமிழீழ மக்களுக்கு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கியவர் என்பதையும், வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை தடுத்ததோடு, இனப்படுகொலை காலகட்டத்தில் சுமார் 60,000 பேரை இலங்கை இராணுவத்தில் சேர்த்தது அனுராவின் கட்சி ஜே.வி.பி தானென்றும் எடுத்துரைத்தார். ஐ.நா உருவாகும் போது 49 நாடுகளாக இருந்த எண்ணிக்கை, இன்று 200 க்கும் மேற்பட்டதாக இருக்கும் போது, அதற்கு தங்கள் உரிமையைக் காத்துக் கொள்ளும் தேசிய இனங்களின் எழுச்சியே காரணம் என்றும், தனிநாடு கேட்பது தவறில்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்றும் பேசினார். அவரைத் தொடர்ந்து தோழர். திருமுருகன் காந்தி நினைவேந்தல் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கடந்த மே 31, 2025 அன்று நினைவேந்தல் பொதுக்கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்றது. இந்த வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள், பல மூத்த களச் செயற்பாட்டாளர்கள், சாமானிய மக்கள் கட்சி, வி.சி.க, த.மு.மு.க என தோழமை கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்தேசிய முழக்கங்கள் எழுப்பப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. இதன் பின்னர் நடந்த ஊடக சந்திப்பில் தோழர் திருமுருகன் காந்தி “இலங்கை அரசின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. ஆனால் ஒன்றிய அரசோ இலங்கையுடன் நட்பு பாராட்டுகிறது. இலங்கையில் அரசுகள் மாறினாலும் தமிழர்களின் நிலை இன்னும் மாறவில்லை. தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இலங்கையின் பெரிய பவுத்த விகாரையை தமிழர் பகுதியில் உருவாக்கி இருக்கின்றார்கள். இவ்வாறு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்ற அரசாகத்தான் அங்கு அனைத்து அரசுகளும் இருக்கின்றன.

தமிழினப்படுகொலையின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருக்கிறோம். தற்போது கனடாவில் இத்தகைய நினைவுச்சின்னத்தை எழுப்பி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் ஈழத்திற்காக எந்த முன்னெடுப்பையும் செய்யாத நா.த.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ஈழ விடயத்தை அவர்களின் கட்சி மாநாடாக நடத்துவதை எதிர்க்கின்றோம்.
தந்தை பெரியாரை சாதி பெயரோடு அடையாளப்படுத்திய ஒன்றிய அரசிற்கு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சாதி ஒழிப்பிற்காக கட்சி நடத்தி, மக்களை திரட்டி, இயக்கத்தை நடத்தியவர் தந்தை பெரியார். இத்தகைய தந்தை பெரியாரை சீமான் இழிவு செய்வதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். பொதுவெளியில் விவாதம் நடத்த அழைத்தும் வராமல், ஈரோட்டில் விவாதத்திற்கு அழைத்தும் வராமல் பாஜகவைப் போன்றே அவதூறு பேசுகிறார் சீமான். ”பாஜக எனும் கட்சி நாட்டிற்கும் வீட்டிற்கும் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கும் கட்சி” என்று கூறினார்.
ஊடக சந்திப்பைத் தொடர்ந்து ஆளுமைகள் உரையாற்றத் தொடங்கினர். கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல் தமிழ்நாடெங்கும் நடக்கும் சாதிய வன்கொடுமைக்காக வழக்காடி போராடிக் கொண்டிருக்கும் தோழர் ப.பா.மோகன் அவர்கள் உரையாற்றும்போது “ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்டத்தை 16 ஆண்டுகளாக தமிழகத்தில் பாதுகாத்து வருகிற அமைப்பு மே பதினேழு இயக்கம் என்றால் எவரும் மறுக்க மாட்டார்கள்” என்று கூறினார். (சமரசமின்றி அனைத்து அரசுகளின் காலத்தில் நடக்கும் அநீதிகளை களத்தில் எதிர்கொள்ளும் மூத்த போராளி அவர்.)

பெரியாரிய தொண்டராய், தமிழ்த்தேசிய போராட்ட களத்தில் அய்யா புலமைபித்தன், பெருஞ்சித்திரனார் முதல் அய்யா வைகோ அவர்களுடனான நீண்ட அரசியல் பயணம் என தமிழருக்காய் போராட்ட வாழ்வை அமைத்துக்கொண்ட, தன் மகளுக்கு தமிழ்தணு என துணிச்சலாய் 30 ஆண்டுகளுக்கு முன் பெயரிட்டு தமிழின ஓர்மையை வெளிப்படுத்திய திராவிடர் இயக்க செயல்வீரரும், ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என பொய்ப்பரப்புரை செய்பவர்கள் செய்த கோழைத்தனங்களை குறித்து சுவைபட நிகழ்வுகளை எடுத்துச் சொல்பவருமான தோழர். கந்தசாமி அவர்கள் புலிகளின் நுணுக்கமான செயல்பாடுகளையும், அறிவார்ந்த நகர்வுகளையும் கண்டுணர்ந்த தமது அனுபவத்தை பகிர்ந்தார்.
தமிழர்களை கொன்றழிப்பதற்கு சர்வதேசம் செய்த பங்களிப்பினை ஆவணப்படுத்தி நூலாய் வெளியிட்ட மே17 தோழர் கொண்டல்சாமி தனது உரையில் இன்றைய போராட்ட தேவை குறித்து விவரித்தார். பம்பரமாய் களத்தில் திராவிடர் இயக்க செயல்பாடுகளை கொண்டு செல்லும் தோழர் சென்னியப்பன், புலிகளுக்கு பங்களித்த திராவிடர் இயக்க தோழர்களை நினைவுகூர்ந்தார்.
நிகழ்வில் இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி வீரவணக்க உரையாற்றினார். அவர் உரையின் சுருக்கம் :
“2009-இல் தமிழினப்படுகொலை உச்சத்தில் இருந்தபோது இங்கு ஈகியர் 19 பேர் தங்கள் மேனிக்குத் தீ வைத்து, தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். 2009 சனவரி மாதத்திலே ஈகியர் முத்துக்குமார் சாஸ்திரி பவன் எதிரே தன்னுயிரை கொடுத்தார். இவ்வாறு பலர் தங்கள் குடும்பத்தை விட்டு தமிழின விடுதலைக்காக உயிர் ஈந்தாலும், அன்று பெருந்திரளாக தமிழர்கள் திரளவில்லை. ஒன்றரை லட்சம் பேர் துடிக்கத் துடிக்க படுகொலை செய்யப்பட்டபோது நாம் அழுது புலம்பினோம். ஆனால் ஏழு கோடி பேர் இருந்த தமிழ்நாட்டில் 1% பேர் வீதிக்கு வந்திருந்தால், அன்று ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டது தடுக்கப்பட்டிருக்கும். அந்தப் போர் தடுக்கப்பட்டிருக்கும். இனப்படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். ஈழத்தைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால் அன்று கையறு நிலையில் நின்றோம். நாளை இது போன்றே நமக்கும் நடைபெறலாம் என்று நினைக்கத் தோன்றியது. 35 ஆண்டுகளாக புலிகளை வெல்ல முடியாத சிங்கள அரசுக்கு அந்த வலிமையை யார் கொடுத்திருக்க இயலும்? இதுதான் நாம் யோசிக்க வேண்டிய விடயம்.
ஈழத்தில் 1,46,679 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற ஆவணத்தை ஐ.நா.வில் சமர்பித்திருக்கிறோம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ‘1,69,671 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்’ என்று கூறுகின்றார்கள். அதாவது கூடுதலாக 23,000 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பலியான ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர், ஒரு வாழ்க்கை, ஒரு வரலாறு இருக்கிறது. இதைக் கேள்வி கேட்க இங்கு நாதியில்லை என்பதுதான் தமிழனின் அவல நிலை. இதை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான் எங்கள் இயக்கத்திற்கு ‘மே பதினேழு இயக்கம்’ என்று பெயர் வைத்தோம்.
தமிழன் இன்று கட்சி, சாதி என்று பிரிந்து இருக்கின்றான். கட்சித்தலைவர் அழைத்தால் ஆயிரக்கணக்கில் திரள்கின்றான். சாதித்தலைவர் அழைத்தால் லட்சக்கணக்கில் திரள்கின்றான். ஆனால் இனம் அழிகின்றதென்றால் பெருமளவில் திரள்வதில்லை.
இனத்திற்காக போராட வராதவர்களை நாம் மதிப்பதில்லை. தங்கள் சாதிப் பெண்களிடம் பேசிவிட்டார் என்பதற்காக கோகுல்ராஜைக் கொன்ற சாதி வெறியனை மாவீரன் எனக் கொண்டாடும் சாதியவாதிகள் ஈழத்திலே தமிழ்ப் பெண்கள் சீரழிக்கப்பட்டபோது போராட வந்தார்களா? ஆனால் வழக்கிற்காக அஞ்சாமல் வீதிக்கு வந்து போராடியவர்கள் எங்கள் தோழர்கள். தமிழினப்படுகொலையில் ஈடுபட்டவர்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள். இந்திய அதிகாரிகள் பெயர்களை புத்தகமாக வெளியிட்டது மே பதினேழு இயக்கம். பதினாறு ஆண்டுகளாக ஈழத்திற்கு பங்களிப்பு செய்தது நா.த.க அல்ல, மே பதினேழு இயக்கம் மட்டுமே.
எங்களுக்கு திமுகவின் மீது விமர்சனம் இருக்கின்றது. ஆனால் போரை வடிவமைத்து, ஆயுத பயிற்சி கொடுத்து, இலங்கை அரசை பாதுகாத்தது யார்? அந்த பார்ப்பனக் கூட்டத்தை அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள். ஈழத்திலோ தூதுக்குடியிலோ நடைபெற்ற துப்பாக்கி சூட்டைப் போன்று நாளை எந்த ஊரிலும் நடக்கலாம். இன்று தமிழ்நாட்டின் நிதியை தராமல், நீட் விலக்கு அளிக்காமல் பா.ஜ.க நம்மை வஞ்சிக்கிறது. இன்று எல்லாருக்கும் ஜி.ஸ்.டி வரி மூலம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடன் தொல்லையால் தற்கொலை எனும் செய்தி அன்றாடம் வருகிறது. இத்தகைய சூழலுக்கு மோடி சர்க்கார் நம்மை தள்ளி விட்டது.

இங்கு மோடி சர்க்கார் போலவே ராஜபக்ச அரசு அங்கு தமிழர்களை வஞ்சித்தது. எனவேதான் புலிகள் தமிழர்க்கென்று நாடு, சட்டம் என்று உருவாக்கினார்கள். ஈழத்திலே புலிகள் ஆட்சிக்காலத்தில் சாதி வேறுபாடுகள் கிடையாது. ஆண்-பெண் வேறுபாடு கிடையாது. நீதிமன்றத்திலே பெண்களை முதலில் நீதிபதியாக்கியது புலிகளே. தலித்துகளை நீதிபதியாக்கியது புலிகளே. கிளிநொச்சிக்கு அருகிலே ஒரு அறிவியல் நகரத்தை உருவாக்கினார்கள். பல்கலைக்கழகத்தைக் கட்டினார்கள். ஆஸ்திரேலியா நாட்டின் முறைப்படி குடிநீர் சுத்திகரிப்பு, நூலகம் எனப் பலவற்றை உருவாக்கினார்கள். சுனாமியை முன்கூட்டியே அறிவிக்கும் ஆய்வுத்தளத்தைக் கட்டியவர்கள் புலிகள். இவ்வாறு மக்களை நேசித்தவர்களாக இருந்தவர்கள் புலிகள். தமிழ்நாட்டிற்கு இத்தகைய அரசியல் வர வேண்டும். அதற்காக இளைஞர்கள் முன்வர வேண்டும். ஜல்லிக்கட்டு உரிமையை நாம் ஒன்றுபட்டு போராடி வென்றெடுத்ததைப் போல, தமிழ்நாட்டின் உரிமையை வென்றெடுப்போம்” என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்.
கோபியில் நடந்த இந்த முதல் பொதுக்கூட்ட நிகழ்வில் பல இளையோர்கள் மே17 இயக்கத்துடன் தம்மை இணைத்துக்கொண்டனர். தமிழின உரிமைக்காக இளையோரை ஒன்று சேர்த்த நிகழ்வாக நினைவேந்தல் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.