வீரம் விளைந்த வேலூர் புரட்சி வீரவணக்க பொதுக்கூட்டம் – மே 17 இயக்கம்

தென்னிந்தியாவில் பாளையக்காரர்களால் 1800களில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போரான ‘கோவை புரட்சி’ நடைபெற்றது. அதற்கடுத்த புரட்சியாக 1806-ம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்ததேறியதே ’வேலூர் புரட்சி’. சாதி மதம் கடந்து புரட்சியாளர்கள் ஒன்றிணைந்து போராடிய வரலாற்றை தமிழர்கள் மறந்து விடாமல் நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும், மே 17 இயக்கம் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் குடியாத்தத்தில் ‘வீரம் விளைந்த வேலூர்’ வீரவணக்க பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 25, 2024 அன்று நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்

வேலூர் புரட்சி நடந்து 218 வருடங்கள் கடந்து விட்டது. அதை ஏன் நாம் பேச வேண்டும்? வரலாறு படைக்க வேண்டும் என்றால் வரலாறை மீட்க வேண்டும். வரலாறுதான் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கான ஆசிரியராக இருக்கக்கூடியது. வரலாறை மீட்க முடியவில்லை என்றால் பொய்களும், புளுகுகளும், புராணங்களையுமே வரலாறு என நம் தலையில் கட்டி விடுவார்கள். பாஜக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நமது வரலாறுகளை எல்லாம் திரித்து வடநாட்டின் நம்பிக்கைகளை எல்லாம் நமது வரலாறாக, நமது இதிகாசங்களாக திணித்து விட்டார்கள்.

சதையும், இரத்தமுமாக வாழ்ந்த திப்பு சுல்தான் வரலாற்றை கதை என்று இந்துத்துவ சிந்தனை நம்மிடம் திணிக்கப் பார்த்தது. தொலைக்காட்சி தொடரிலும் அதுதான் நடந்தது. திப்பு சுல்தான் வரலாறுகள் கர்நாடக பாடத்திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இம்மண்ணின் வரலாறை, இம்மண்ணிற்காக போராடிய தமிழர்களின் வரலாறை எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால், இங்குள்ள இந்துத்துவ அமைப்புகளுக்கு கோவம் வருகிறது. தமிழ்நாட்டின் பாளையக்காரர்களுக்கு திப்பு சுல்தானும், ஹைதர் அலியும் வெள்ளையனை விரட்டுவதற்காக படை தந்தவர்கள், போர் கருவிகளை அளித்தவர்கள். வெள்ளையர்களை எதிர்த்து நின்ற தீரன் சின்னமலை, மருதுபாண்டியர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், கேரளாவின் பழசி வர்மனுடன் கைக்கோர்த்தவர் திப்பு சுல்தான்.

பிரான்சில், மக்கள்தான் ஆட்சியமைக்க வேண்டும் என்கிற ஜெக்கோபியன் மன்றம்’ இயங்கியது. அது ஆங்கிலேய அரசை அமெரிக்காவில் வீழ்த்தியது. அந்த மன்றத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவரே திப்பு சுல்தான். உலகளாவிய அளவில் வெள்ளையரை வீழ்த்த கட்டமைப்புகளை உருவாக்கினார் ‘நெப்போலியன்’. அவரோடு தன்னை இணைத்துக் கொண்டவரே திப்பு சுல்தான். சாதி, மதம் கடந்து நாம் ஒன்றாக வேண்டும் என்று பிரகடனத்தை முதல் முதலில் அறிவித்தவர்கள் மருது பாண்டியர்கள். அதை நிகழ்த்திக்காட்டியவர் திப்பு சுல்தான். வெள்ளையர்களை விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியாருக்கு படையை கொடுத்தவர் ஹைதர் அலி. வெள்ளையர்களின் சூழ்ச்சியை வென்று சிவகங்கை சீமையை மீட்டெடுக்க வேலுநாச்சியாருக்கு உதவி புரிந்தவர் ஹைதர் அலி.

தென்னிந்தியா முழுக்க வெள்ளையர்களை எதிர்க்க ஒரு கூட்டமைப்பை உருவாக்க அடித்தளம் வகுத்தவர் திப்பு சுல்தான். தீரன் சின்னமலை, திப்பு சுல்தானோடு கைகோர்த்தால் மட்டும்தான் வெள்ளையர்களை விரட்ட முடியும் என்று கைகோர்க்கிறார். ’கேரள வர்மன்’ திப்பு சுல்தான் படைக்குப் பயந்து ஓடி விடுகிறார். ஆனால் வெள்ளையனே நமக்கு உண்மையான ஆபத்து என்று உணர்ந்து, பிறகு திப்புசுல்தானோடு கைகோர்க்கிறார்.

ஸ்ரீரங்கப்பட்டினப் போர்க்களத்தில் திப்புசுல்தான் வீழ்ந்த பிறகு, இந்த தலைமையை மருது பாண்டியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். கோவை கோட்டையை தகர்க்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள் மருது பாண்டியர்கள். விருப்பாச்சி கோபால் நாயக்கர் அதற்கு பயிற்சி கொடுக்கிறார். படைகளுக்கான தலைமை பொறுப்பை தீரன் சின்னமலை முன்னெடுக்கிறார். இந்த வரலாறை இவ்வாறு சேர்த்து சொல்லி இருக்க மாட்டார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பேசி இருப்பார்களே தவிர, ஒன்றாக சேர்த்து சொல்ல மாட்டார்கள்.

திப்பு சுல்தான் மரணத்திற்கு பிறகு அவரின் தளபதியாக இருந்தவர்கள் தீரன் சின்னமலையோடு கைகோர்க்கிறார்கள். முகமது ஹாசம் / புத்தே முகமது போன்ற தளபதிகள் இப்படித்தான் இணைகிறார்கள். கோவை புரட்சியில் சிக்கிக் கொள்ளும் நிலை வரும் போது’, புரட்சியாளர்களை காட்டி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக, முகமது ஹாசம் என்ற அந்த தளபதி தன் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து விடுகிறார். ’கோவை புரட்சிக்காக 42 பேர் தூக்கில்  ஏற்றப்படுகிறார்கள். அதில் 36 பேர் முஸ்லிம்கள். அன்று வெள்ளையனுக்கு எதிராக ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள் எல்லாம் மசூதிகள் தான்’. மசூதியில்தான் புரட்சியாளர்கள் மறைந்திருந்தார்கள். இந்த வரலாறை எல்லாம் பாஜக-காரர்கள் சொல்ல மாட்டார்கள். பின்பு விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, மருதுபாண்டியர்கள் என ஒவ்வொருவராக வெள்ளையர்களால் கொல்லப்படுகிறார்கள்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம் என்று பாஜக காரர்கள் இன்று சொல்கிறார்களே அதை அன்று வெள்ளையன்தான் அப்படி கூறினான். தமிழர்களின் அனைத்து அடையாளத்தையும் அழிக்க விரும்பினான். இந்த வெள்ளையர்களுக்கு எதிராகதான் வேலூர் புரட்சி கிளர்ந்தெழுகிறது. இந்து – முஸ்லிம் என்று பிரித்த வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக மட்டும் புரட்சி எழவில்லை, இன்று மோடி அரசு, நமக்கு எவ்வாறு வரி போட்டு சுரண்டுகிறார்களோ, அவ்வாறுதான் சாமானிய மக்களை வரி மூலம் சுரண்டியதால், அதனை எதிர்த்து புரட்சி எழுந்தது.

இந்த மண்ணுக்காகப் போராடிய தமிழர்களின் வரலாற்றை எங்கும் காட்டி விடக்கூடாது என்பதற்காக மருது பாண்டியர்கள், வேலு நாச்சியார் ஊர்வலங்களை டெல்லியில் மோடி அரசு எவ்வாறு தடுத்ததோ, அதைப் போலத்தான் அன்றும் நம் அடையாளங்களை அழிக்கக் கூடிய வகையில் வெள்ளையன் வேலை செய்தான். இதற்கு எதிராகத்தான் சிப்பாய்கள் ஒன்றுகூடி வெள்ளையர் எதிர்பார்க்காத நேரத்தில் அதிகாலை தாக்குதலை நடத்துகிறார்கள். ஏறக்குறைய 300 அதிகாரிகள் அங்கு இருக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு திப்பு சுல்தான் கொடியை வேலூர் கோட்டையில் ஏற்றுகிறார்கள். இப்படித்தான் வேலூர் புரட்சி நடந்தது. கிட்டத்தட்ட 3000 பேர் இதில் இருக்கிறார்கள். வேலூர் கோட்டையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவன், வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ’கில்லெஸ்லி’ என்ற அதிகாரியிடம் சொல்ல, அவன் பீரங்கியை கொண்டு வந்து புரட்சியாளர்களை எல்லாம் பீரங்கியில் கட்டி வைத்து வெடிக்கச் செய்தான்.

வேலூர் புரட்சி முடிந்தவுடன் புரட்சி ஓய்ந்துவிடவில்லை. சுற்றி உள்ள ஊர்களில் எல்லாம் எழுச்சி நடந்தது. கிட்டத்தட்ட 10,000 பேர் கொண்ட படையை திப்பு சுல்தான் மகன்கள் திரட்டி வைத்திருந்தார்கள். வேலூர் கோட்டையை எட்டு நாட்கள் பிடித்து வைத்திருந்தால், நிலை வேறு மாதிரி ஆகியிருக்கும். வேலூர் புரட்சி திட்டத்தை சிறையில் இருந்தபடியே திப்பு சுல்தான் மகன்கள் போட்டு முடிக்கிறார்கள். மசூதியில் இறைவனைப் பற்றி பாடும் பக்கீர்கள் என்பவர்களின் மூலம், விடுதலை உணர்ச்சி பாடல்களை பாட வைக்கிறார்கள். அதன் மூலம் மக்களை அணிதிரட்டுகிறார்கள்.

மக்களை பிரச்சாரத்தின் மூலம் அணி திரட்ட முடியும் என்பதற்கு சாட்சிதான் வேலூர் கோட்டையில் இருக்கக்கூடிய மசூதி. இந்து, இஸ்லாமியர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இந்த புரட்சியை நடத்தி காட்டினார்கள். இந்தப் புரட்சியில் திப்பு சுல்தான் மகன் ஒருவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது’. இவ்வளவு பெரிய தியாகத்தை செய்ததுதான் திப்பு சுல்தானின் குடும்பம். இந்த வரலாற்றை சொல்வதற்கு பாஜக-காரனுக்கு, இந்து முன்னணிகாரனுக்கு ஏன் எரிகிறது?

பிஜேபி, ஏன் திப்பு சுல்தான் வரலாறை மறைக்கிறது? ஏனென்றால் திப்பு சுல்தான் சுதந்திரத்தை பேசினான் சமத்துவத்தை பேசினான். தமிழர்களுடைய போருக்கு துணை நின்றான். தளபதிகள், கருவிகள், ஆயுதங்கள் கொடுத்தான். அன்றிருந்த அரசர்கள் இடையே மிகப்பெரிய நூலகத்தை வைத்திருந்தவன் திப்பு சுல்தான். சுதந்திர உணர்ச்சி உடையவன் திப்பு சுல்தான். இப்படிப்பட்ட ஒருவனை எடுத்துக்காட்டாக காட்டுவதற்கு பிஜேபிக்காரன் விரும்பவில்லை. காரணம் என்னவென்றால், அந்த காலகட்டத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்து நின்ற ஒரு அரசனை கூட இவர்களால் காட்ட முடியாது.

திருவிதாங்கூர் அரசன் இருந்தான், பேர்ஷ்வாக்களின் ஆட்சி இருந்தது. இவர்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுதான். 1947 வரை திருவிந்தாங்கூர் சமஸ்தானம் இயங்கிக் கொண்டுதான் இருந்தது ஆனால் வெள்ளையனை எதிர்த்து நிற்கவில்லையே? பேர்ஷ்வாக்கள் மகாராஷ்டிர ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் முன்னோடிகள். ஆர்.எஸ்.எஸ் என்றால் அனைத்து இந்துகளும் கொத்தடிமையாக வேலை செய்யும் இடம். சித்பவன் பார்ப்பனராக இருந்தால் மட்டும்தான் ஆர்.எஸ்.எஸ்-சின் தலைமை தாங்க முடியும்.

இந்தியா துணைக்கண்டம் முழுதும் பேர்ஷ்வாக்களுக்கு சொந்தமானது, தனது ஆட்சியே இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்களே பேர்ஷ்வாக்கள். அவர்களின் வழிவந்தவன்தான் ஆர்.எஸ்.எஸ்-காரன். இவர்கள் திப்பு சுல்தான், ஹைதர் அலிக்கு ஆதரவளிக்கவில்லை. அவர்களுக்கு அடுத்து வந்த புரட்சியாளர்கள் அனைவரையும் வெள்ளையனுக்கு காட்டி கொடுத்தவர்கள் பேர்ஷ்வாக்கள்.

கர்நாடகாவின் மிகப் பெரிய வீரனான வெள்ளையரை எதிர்த்த தூந்தாஜி வாக்’-கை காட்டிக் கொடுத்தவர்கள் பேர்ஷ்வாக்கள். கோவை புரட்சிக்கு வந்தவரே தூந்தாஜி வாக். இடையினில் வேறொரு பாளையக்காரரிடம் சண்டையிட்ட வெள்ளையர் படையிடம் போர் புரியும் நிலையினால், கோவைக்கு வர முடியவில்லை. அவர் அந்நேரம் வந்திருந்தால் கோவைப் புரட்சியின் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். இந்த வீரனை காட்டிக் கொடுத்தவர்களே மகாராசுடிர பார்ப்பனர்களான ’பேர்ஷ்வாக்கள்’. 

இந்த சித்பவன் பார்ப்பனர்களுக்கு தமிழ்நாட்டில் எப்படி கொடி பறக்க முடியும்? நம் இனத்தை கருவறுத்த, நம் புரட்சியாளர்களை வேரறுத்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம், நம் தமிழ்நாட்டிற்கு கால் பதிக்கிறது என்றால், அது நமக்கு அவமானம். பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ், விசுவ இந்து பரிசத் என்று இங்கு வந்து கட்சி நடத்துவான் என்றால் நாம் ஒரு காலமும் அனுமதித்து விடக்கூடாது. 200 வருடத்திற்கு முன்பு நம் இனத்தின் கழுத்தறுத்தவனுக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும்.

’பீமா கோராகானில், 30 ஆயிரம் பேர் கொண்ட பேர்ஷ்வாக்களின் படையை, வெறும் 800 பேர் கொண்ட தலித்துகளின் படை அன்று கருவறுத்தது’. இந்த பேர்ஷ்வாக்களின் வாரிசுகள்தான் இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் கூட்டம். குடியாத்தம், வேலூர், வாணியம்பாடி, ஆம்பூரில் உள்ள இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் எல்லாம் அன்று வெள்ளையனை எதிர்த்து களம் கண்டவர்கள். அந்த தியாகத்திற்கு சொந்தக்காரர்கள். புரட்சியாளர்களின் பெயர் பட்டியலில் அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு பெயராவது பார்ப்பனர்களின் பெயர் இருக்கிறதா?

”இந்த பார்ப்பனர் கூட்டம் வெள்ளையர்களுக்கு எதிராக வருகிறது என்றால், சனாதன சட்டமாக இருக்கக்கூடிய, கணவன் இறந்தால் மனைவியும் தீக்குளிக்க வேண்டும் என்கிற மூடத்தன சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர்கள் சட்டம் கொண்டு வந்ததும் தான் அவர்களுக்கு கொதிப்பு வருகிறது. ‘சனாதனத்தில் வெள்ளையர்கள் தலையிடக்கூடாது என்ற ஒற்றைக் கோரிக்கைதான் பார்ப்பனர்களுக்கு இருந்ததே தவிர, வேறு எந்த கோரிக்கையும் கிடையாது’. பார்ப்பனர்கள் இருந்த காங்கிரசு, ’டொமினிக் அந்தஸ்து’ தான் கேட்டார்கள். இங்கிலாந்து அரசியின் கீழ் வாழ்வதற்கு எந்த பிரச்சனையும் கிடையாது என்றுதான் சொன்னார்கள். 1930, 32-ல் தான் காந்தி தான் சுயராச்சியக் கொள்கையை வைக்கிறார். காங்கிரஸ் விடுதலை  வேண்டும் என்பதற்காக எல்லாம் ஆரம்பிக்கப்படவில்லை”.

இன்று பாஜக-வை வீட்டுக்கு அனுப்பி காங்கிரஸ் வர வேண்டும் என்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் எழக்கூடிய மாநில கட்சிகள் தான் ஆள வேண்டுமே தவிர இந்த இரண்டு தேசிய கட்சியும் தேவையில்லை. இந்த தேர்தலில் கூட பாஜக-வை ஒவ்வொரு மாநிலத்திலும் வீழ்த்தியவர்கள் மாநில கட்சிகள் தான். எளிய சாமானியர்களின் கட்சியாக மாநில கட்சிதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின், கேரளாவில் பினராய் விஜயன் போன்ற கட்சிகளே பாஜகவை வீழ்த்தியது. காங்கிரஸ் வீழ்த்தியது என்றால் குஜராத், டெல்லி மகாராஷ்டிரம், ம.பி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. எங்கெல்லாம் மாநிலக் கட்சிகள் கடும் அடக்குமுறைகளைத் தாண்டி, உயிரைக் கொடுத்து போராடியதோ, அங்கெல்லாம் தான் பாஜக வீழ்த்தப்பட்டிருக்கிறது’. இந்தியாவின் மாற்று அரசியல் என்பது ஏழை, எளியவர்களின் கட்சியாக இருக்கக்கூடிய மாநில கட்சிகள் தான்.

மறுபடியும் காங்கிரசை கொண்டு வந்து அமர வைத்து விடக்கூடாது. ராகுல் காந்தியை பற்றி பெரிய பிம்பம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை ’ஒன்றரை லட்சம் இஸ்லாமியர்கள் வீடுகள் இடிக்கப்பட்டிருக்கிறது, உமர் காலித் என்ற இளைஞன் நான்கு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்,  இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்கள் பொய் வழக்கில் ஐந்தாண்டுகளாக பீமாகோரேகான் நிகழ்வில் பேசியதற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்’ – இதைப் பற்றி எல்லாம் ராகுல் காந்தி பேசவில்லை. அதனால் வடநாட்டு தலைவர்கள் எங்களுக்கு தேவையில்லை.

தென்னிந்திய புரட்சி நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, ”கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியில் மிகப்பெரிய போர் நடந்தது. போர்ச்சுகீசியர்கள் வந்து இறங்கினார்கள். இந்தப் படையை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் இறங்க விடாமல் திருப்பி அடித்தவர்கள் தமிழர்கள். இன்றைக்கும் அங்கு ஒரு நினைவுச் சின்னம் இருக்கிறது. தென்னிந்திய புரட்சியாளர்கள் ஆன பாளையக்காரர்கள் போர் புரிந்த போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து பழவேற்காடு வரை உள்ள எந்த கடற்கரையிலும் போர்ச்சுக்கீசியர்கள் வந்து இறங்க முடியவில்லை. இவையெல்லாம் சொல்லப்படாத புரட்சி”. இதையெல்லாம் எடுத்து ஆவணப்படுத்தியவர் ‘பேராசிரியர். ராஜைய்யன்’ அவர்கள்.

வேலூர் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதி மக்களே கொண்டாட வேண்டும். இன்றும் அமெரிக்காவில் வெள்ளையர்களை எதிர்த்து 300 வருடம் முன்பு நடந்த போரை கற்பனையாக போர் போன்று ஒன்று நடத்தி கொண்டாடுகிறார்கள். இளைய தலைமுறைக்கு அந்த வரலாறை கடத்துகிறார்கள். நாமும் வேலூர் புரட்சியை ஒவ்வொரு மாவட்டம் தோறும் கொண்டாட வேண்டும் வரலாற்றைக் கடத்த வேண்டும்.

’திப்பு சுல்தான் படையில் இருந்த ஒரு லட்சம் வீரர்களும், தீரன் சின்னமலை, மருதுபாண்டியர்கள் படையில் இருந்த பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களும் என வெள்ளையர்களை எதிர்க்க சாதி, மதம் கடந்து திரண்டவர்கள் நம் முன்னோர்கள். நம் கையில் நவீன ஆயுதம் இல்லை என்பதற்காகத்தான் தோற்றோமே தவிர, கோழைத்தனத்தால் அல்ல’.

விடுதலைக்காக ஒரு துளி ரத்தம் கூட சிந்தாதது யார் என்றால், அது பாரதிய ஜனதா கட்சி கூட்டம்தான். ஒவ்வொரு முறையும் மோடி வரும்போது காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்கிறார் . காமராஜரை கொலை செய்த முயற்சித்த கூட்டமே ஆர்.எஸ்.எஸ். ஆனால் காமராஜருக்கு மாலை போட்டார்கள். ஒவ்வொரு கட்சித் தலைவரையும் திருடுகிறார்கள். அம்பேத்கர், திருவள்ளுவர் வரை திருடுகிறார்கள். இவர்களில் ஒருத்தர்கூட இந்துத்துவத்தின் சனாதன தலைவர்கள் கிடையாது. சொந்த வரலாறு இல்லாதவர்கள் அடுத்த கட்சியின் வரலாற்றை திருடிக் கொள்கிறார்கள். திமுக இந்த கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த முறை வந்தால் கருணாநிதியை கூட திருடி விடுவார்கள்.

‘செய் அல்லது செத்து மடி’ என்று மேதகு பிரபாகரன் அவர்கள் சொன்னார். தமிழ் தேசியம் என்பது நெய்தல் படை கட்டுவேன் போன்று வாய்சவடால் பேசும் அரசியல் அல்ல. எதிரிகளிடம் சரணடைய மாட்டேன் என்று ஒவ்வொருவர் கழுத்திலும் சயனைட் குப்பியை மாட்டி இருந்தார்களே, விடுதலைப்புலிகள், அதுதான் போர்க்குணம்.

திருப்பூர் குமரன் கொடிக்காக உயிர் கொடுத்தான். அந்த கொடியை ஏற்க மாட்டேன் என்று சொன்னவன்தான் ஆர்.எஸ்.எஸ்-காரன். ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில், திருப்பூர் குமரன் தூக்கிப் பிடித்த கொடி ஒரு நாளும் ஏற்றப்பட்டதில்லை. இவர்கள்தான் தேசபக்தி குறித்து பாடம் எடுக்கிறார்கள் கடவுள் பக்தியை பத்தி, சொல்லிக் கொள்கிறான். இங்குள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் எல்லாம் அவனை வந்து உட்கார்ந்திருக்கிறான். பார்ப்பான், சமஸ்கிருதத்திற்கு இடமில்லாத கோயில்களின் பெயர் இன்று, அருள்மிகு மாரியம்மன்’ என்பதிலிருந்து ஸ்ரீ மாரியம்மன்’ ஆக மாற்றப்படுகிறது. நம் கோவில்களுக்கும், பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? நம் பெண்களுக்குதான் சாமி வருகிறது. பூணூல் அணிந்த பூசாரிக்கும், பார்ப்பன பெண்களுக்கும் என்றாவது சாமி வந்து ஆடியிருக்கிறார்களா?

கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனைத்து மக்களும், எல்லா கட்சிக்காரர்களும்தான் காசு தருகிறார்கள். ஆனால் இந்து முன்னணி கொடி மட்டும் ஏன் அங்கு பறக்கிறது? அது என்ன அவன் கட்சி ஆபீசா? மக்கள் கட்டிய கோவிலில் அவனுக்கு என்ன வேலை? அவன் கொடி பறந்தால், அனைத்து கட்சிக்காரர்களின் கொடிகளும் பறக்க வேண்டும். இல்லையென்றால் எந்தக் கொடியும் பறக்க கூடாது. அவன் கூட்டம் நடத்தினால் என்றால் நீங்களும் உங்கள் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும். திமுக அதிமுக, மதிமுக, விசிக மட்டுமல்ல மே 17 கூட்டமும் இனி அங்கு கூட்டம் நடத்தும்.

இப்படிதான் மீனாட்சி கோயில், மதுரை காமாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் கோயில், திருவண்ணாமலை கோயில் என பல கோயில்களை இழந்தோம். இதற்குப் பிறகு மாரியம்மன் கோயிலையும் நாங்கள் இழக்கப் போவதில்லை. இந்த அம்மன்கள் எல்லாம் எங்கள் மூதாதையர்கள் எங்கள் வழிபாட்டு முறையில் இருந்து முளைத்த தெய்வங்கள். வட நாட்டில் இந்த அம்மன்கள் இருக்கிறார்களா? இந்துக்களே, கோயிலைக் காக்க வாருங்கள் என்று கதை விடுகிறார்களே இந்த சங்கிக் கூட்டம், அவர்களிடம் இருந்துதான் நாம் காப்பாற்ற வேண்டும்.

நமது வரலாறு, அரசியலை, பொருளாதாரத்தை திருடுவதற்கென்று இந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டம் வந்து வந்திருக்கிறது. அது காவி கூட்டம். குரங்கு கூட்டம். இந்த கூட்டத்தை விரட்டுவதற்கு தீரனும், எழுச்சியும் மிக்க இளைஞர் படையை திரட்டுவது தான் மே 17 இயக்கத்தையும் நோக்கம்.

மே 17 இயக்கம் தேர்தலில் பங்கேற்க கூடிய அமைப்பு அல்ல. ஆனால் தமிழ்நாட்டையும், தமிழினத்தையும், தமிழ் மொழியையும் பாதுகாப்பதற்காக எந்தவித எதிர்பார்க்கும் இல்லாமல் திரண்ட இளைஞர்களின் கூட்டம். பேருக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைப்படாதவர்கள், சாதிமத எல்லைக்கு அப்பாற்பட்டவர்களே மே 17 இயக்கத்தினர். அம்பேத்கர், பெரியாரிய கொள்கைகளை  கடைபிடித்து வாழ்க்கையில் சிந்தித்து செயல்படுபவனே மே 17 இயக்கத் தோழன். ஆகவே நாங்கள் உங்களை இருகரம் நீட்டி அழைக்கின்றோம். மே 17 இயக்கத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள். – இவ்வாறு தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தின் தொடக்கவுரையை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். கொண்டல் சாமி ஆற்றினார். தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே. எம். சரீப், மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் தோழர். கௌதமன்,  திராவிட கழகம் மாவட்டத் தலைவர் தோழர். வி.சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தோழர். விவேக் குமார், புரட்சி பாரதம் மாவட்ட பொருளாளர் தோழர். வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

வேலூர் புரட்சி பற்றி மே 17 இயக்கக் குரலில் வெளியிட்ட விரிவான கட்டுரை இணைப்பு :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »