தந்தை பெரியாரும், தோழர் தமிழரசனும் இணைகிற கருத்தியல்

இந்தி(ய) அதிகார வர்க்கமே தமிழினத்தின் முதன்மை எதிரி!

ஆசீவகம், சமணம், பௌத்த மரபை தொடர்ந்து வேத-சமஸ்கிருத ஆதிக்கத்தை  எதிர்த்த சித்தர் மரபு என, பார்ப்பனர் எதிர்ப்பு உள்ளார்ந்து வேர் பிடித்ததே தமிழ் மண். இந்த மரபே வள்ளலார் வரை தொடர்ந்தது. அரசியல் தளத்தில் அயோத்தி தாசர் அந்த மரபை தொடர்ந்தார். இதை மேலும் கூர்மைப்படுத்தி பண்பாட்டு அரசியல் தளத்தில் தந்தை பெரியார் அவர்கள் மக்கள் திரள் எதிர் மரபை கட்டியமைத்தார். அது ஒரு நூற்றாண்டளவில் தமிழினத்தை வரலாற்றில் முன்னகர்த்திய திராவிட இயக்கமாக மாறியது.

தன் நலம் துறந்து, தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்த தலைவர்கள் கிடைப்பது அரிது. வரலாற்றில் எந்த இனத்தை விடவும் தமிழினத்திற்கே அந்த வாய்ப்பு அதிகம் வாய்க்க பெற்றுள்ளது. அதற்கான வரலாற்று அவசியமும் இருந்தது. குறிப்பாக இந்திய நிலப்பரப்பில் தொன்றுதொட்டு ஆதிக்க எதிர்ப்பு மரபை ஒரு நெருப்பை போல தமிழினம் தன்னகத்தே உருவாக்கி, வளர்த்து, காத்து வந்துள்ளது. அது அடிமைத்தளை உடைக்கும் கங்காக தமிழ் சமூகத்தின் உளவியலுக்குள் உள்ளுரைந்தே கிடக்கிறது. வரலாற்றில் அந்த நெருப்பு கங்கினை பெரும் விசையோடு உசுப்பி பெரும் தீயாக மாற்ற பெரியார் உழைத்தார், ஆனால் காலம் அடிமை விலங்கின் மீது ஓங்கி அடித்து உடைக்கும் சரியான சுத்தியலை நேரத்தே நமக்கு வழங்கவில்லை. பிற்காலத்தில் அந்த சமத்துவ சுத்தியலோடு தோழர் தமிழரசன் நம் சமூகத்தில் தோன்றினார்.

’எந்த அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களும் விடுதலையை நோக்கமாக கொண்டே உணர்வு கொள்ள முடியும். அந்த விடுதலையிலும் அறத்தை உள்ளார்ந்து வைத்து சிந்தித்து செயல்பட்டவர்களில் தலைவர் தந்தை பெரியாரும், தோழர் தமிழரசனும் ஒன்றி போகும் மிக முக்கிய புள்ளி ஒன்று உள்ளது’!.

”அது தமிழினத்தின் முதன்மை எதிரி யார்?  என்பதை தர்க்க ரீதியாக, ஆய்வு பூர்வமாக இவர்கள் அறிவித்தது தான். ஆகஸ்ட் 15-யை துக்க நாள் என்று அறிவித்து, இந்திய விடுதலை ஒரு போலி விடுதலை என்று முழங்கினார் பெரியார். வெள்ளையர்களிடமிருந்து பார்ப்பன-பனியா கொள்ளையர்களிடம் அதிகாரம் கை மாற்றப்பட்டதை தவிர தமிழர்களுக்கு இதில் எந்த பலனும் இல்லை என்று எடுத்து பேசினார்”.

தமிழன் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு என்று கருதி வருவதுமேயாகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து, பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும் (விடுதலை தலையங்கம் 27.7.1951).

இப்படி1937 முதல் 1973 தனது இறுதி பேரூரை வரை தமிழ்நாடு தமிழனுக்கே என்று முழங்கினார் பெரியார்.

1945 ஏப்ரல் 14 அன்று பிறந்த தோழர் தமிழரசன் அவர்கள் கோவையில் பொறியியல் (Chemical Eng.) பயின்ற போதே இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் (மார்க்சிஸ்ட்) இணைந்து செயல்பட்டார் (1966). அதன் பின்னர் தோழர் சாரு மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று 1969 இல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் (மா.லெ) தன்னை இணைத்துக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக மக்கள் யுத்த குழு (people’s War Group – PWG) இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராக உயர்ந்து தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை பரவ செய்தார். தீவிர கம்யூனிச ஈடுபாடும், அதன்பால் ஆழமான அறிவும் கொண்டவர் தோழர் தமிழரசன்.

தேசிய இனச் சிக்கல்கள் குறித்த விவாதத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா.லெ) மக்கள் யுத்த குழு இயக்கத்தில் நடத்தியதில் கட்சிக்கு இது குறித்து சரியான நிலைப்பாடு இல்லை என்ற முடிவுக்கு வந்தார். இதை தொடர்ந்தே ”1984 ஆம் ஆண்டில் தமிழீழ ஆதரவு மாநாடும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையும் என்கிற தலைப்பில் மாநாட்டை நடத்தினார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தனி தமிழீழம் பெறுவது; அதுபோல், இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு தனி நாடாக அறிவிப்பது” ஆகியவையே இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது. இதற்காகவே தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை தொடங்கி அதன் ஆயுத பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படை என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டார்.

1986-ல் நடந்த தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி அமைப்பு மாநாட்டில் “மொழி வழி தேசிய இனச் சிக்கல்கள்” குறித்து தன் ஆய்வை முன்வைக்கிறார். குறிப்பாக இந்திய ஆளும் வகுப்புக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்பதை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்கிறார். இந்த அறிக்கை தான் ’கொல்லிமலை அறிக்கை’ என்று அறியப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ’கம்யூனிச மற்றும் மார்க்சிய லெனிய இயக்கங்களில் மொழி வழி தேசிய இனச் சிக்கல்கள்’ குறித்து மாற்று பார்வையை தோழர் தமிழரசன் முன் வைத்தார். ஆயுதம் ஏந்தி போராடிய நபராக அறியப்படும் தோழர் தமிழரசன் தனது கொல்லிமலை அறிக்கையில் ஒரு மார்க்சிய ஆய்வாளருக்கு நிகரான செய்திகளை முன் வைத்துள்ளார்.

பிரிட்டிஷ் காலனிய இந்தியாவில் நிலப்பிரபுத்துவ சமூகம், ஆங்கிலேய முதலாளித்துவ ஆட்சி முறையினால் மாற்றம் அடைய துவங்கியது. ஆனால் அந்த மாற்றம் மற்ற நாடுகளில் நடந்ததை போன்ற இயல்பான சமூக மாற்றமாக அமையவில்லை. அதாவது, நிலப்பிரபுத்துவ சமூகம் முதலாளித்துவ புரட்சியின் மூலம் ஒரு முழுமையான முதலாளித்துவ சமூகமாக மாறாமல் அரை காலனிய -அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக தேங்கி நின்றதை விளக்குகிறார். ’மூலதன குவியலுக்கான முதலாளித்துவ ஆட்சி முறை, முதலாளித்துவ கல்வி முறை மற்றும் முதலாளித்துவ உற்பத்தி முறை இந்தியாவில் ஆங்கிலேய அரசால் புகுத்தப்பட்டாலும், அதன் மூலம் முதலாளித்துவ புரட்சி ஏற்படவில்லை. இங்கு இருந்த நிலப்பிரபுத்துவ சமூகம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் அமைப்பாக மாற்றப்பட்டது. இதற்காகவே காலனிய இந்தியாவில் சில நிபந்தனைகளுடன் நிலப்பிரபுத்துவவாதிகள் தங்கள் ஆட்சியை தொடரும் வகையில் சமஸ்தான அமைப்புகள் உருவாக்கப்பட்டது’ என்று விளக்குகிறார். இந்த சமஸ்தான இந்தியாவைத்தான் தோழர் தமிழரசன் அரை நிலப்பரப்புத்துவ-அரை காலனிய சமுதாயம் என்றும் இதுவே நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவு முறை நம் சமூகத்தில் தொடர காரணம் என்று குறிப்பிடுகிறார்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை எளிமைப்படுத்திய இந்த அதிகார வடிவம் இந்திய விடுதலையின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஏகாதிபத்திய சார்பு முதலாளிகளுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது என்று இந்திய சமூகம் மற்றும் விடுதலை பற்றிய தன் பார்வையை முன்வைக்கிறார்.

 இந்த பார்வையையே தந்தை பெரியார் எளிய மொழியில் பார்ப்பன-பனியா அதிகார மாற்றம் என்று குறிப்பிட்டார்.

அடிமை காலனி தன்மை மாறி இச்சமுதாயம் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவமாக மாறியபோது நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவம் எடுத்துக் கொண்டது. ஆகையால் இன்று நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை பாதுகாப்பதே சார்பு முதலாளித்துவமும், ஏகாதிபத்தியங்களும் ஆகும். ஆகவே நிலப்பிரபுத்துவ உறவுகள் அடிப்படையான அம்மாற்றத்தை தடுக்கும் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ உற்பத்தி உறவு, ஏகாதிபத்திய உறவுகளில் அடிப்படையான மாற்றம் கொண்டு வருவதன் மூலம் அதாவது இந்திய ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் தொழிலாளி வர்க்கத் தலைமையில் ‘தமிழ்நாடு விடுதலை’ அடைவதன் மூலமே சாதிய ஒடுக்குமுறையின் அடிப்படையை ஒழிக்க முடியும்.

‘இந்தியாவில் ‘இந்தி’ நாட்டின் ஆளும் வர்க்கம் தான் ‘இந்தி’ நாட்டின மக்களை மட்டுமல்லாமல், இந்திய ஆட்சிக்குட்பட்ட அனைத்து மொழி நாட்டின மக்களின் சமுதாய மாற்றத்திற்கு தடையாக முதன்மை எதிரியாக விளங்குகிறது. ஆகையால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிநாட்டின மக்களின் தனி மொழி நாடு விடுதலைக்கு எதிரியாக இந்திய ஆளும் வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகுக்கிறது. தமிழ்நாடு, காலிஸ்தான், கூர்க்கா நாடு, மிசோ நாடு, நாகா நாடு, வங்க நாடு, தெலுங்கு நாடு, கன்னட நாடு மற்றும் அனைத்து மொழி நாடு விடுதலைக்கும் பொது எதிரியாக இந்திய ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இருக்கிறது. ஆகையால் இந்தியாவில் போராடும் மொழி நாடு விடுதலை இயக்கங்கள் இடையில் பொது எதிரிக்கான ஒற்றுமை தேவைப்படுகிறது. மொழி நாடு விடுதலை இயக்கங்கள் பொது எதிரியை எதிர்த்து போராட்டத்தில் ஒன்றுபட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆட்பட்டு இருக்கிறது’. என்று தமிழர்கள் பிற மொழி வழி தேசிய இனங்களோடு நட்பு பாராட்ட வேண்டியதின் அவசியத்தை சொல்கிறார். இது தமிழ் தேசியம் பேசுவதாக சொல்லி கொண்டே சக தேசியினங்களான மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்களை தமிழர்களின் முதன்மை எதிரியாக சித்தரிக்கும் நாம் தமிழர் கட்சிக்கு புரியப் போவதில்லை. இந்த போக்கு உண்மையில் அதன் தலைமையின் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ ஆதரவிற்கே பயன்படுகிறது.

இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’ – (பெரியார் -27.11.1950ம் தேதி சென்னை சைதாப்பேட்டை உரை). என்று பெரியார் குறிப்பிட்ட இளைஞர்களில் ஒருவரே தோழர் தமிழரசன்!.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!

தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே!! தமிழ்நாடு தமிழருக்கே!!!

(பெரியார், குடி அரசு – தலையங்கம் – 23.10.1938) என்று பெரியார் பேசியதும்; “இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் அதில் ‘இந்தி’ அதிகார வர்க்கம் தான் இன விடுதலைக்கு முதன்மை எதிரி” என்று இன்று வரை கம்யூனிஸ்ட்டுகள் உணராத நிலையில் மார்க்சிய வழியில் அதை அறிவித்து செயல்பட்ட தோழர் தமிழரசன் அவர்களும் சிந்தித்தது ஒரு பொருள் குறித்தே. பாதைகள் மட்டுமே வேறு.

பாதைகளை காலமே முடிவு செய்கிறது. பெரியாரின் ‘கருஞ்சட்டை படை’ சிந்தனைக்கான முழுமையான நோக்கம் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது. சில நேரங்களில் தமிழ்நாடு காவல்துறை அதை அறிந்தது போல செயல்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது!.

கொல்லிமலை அறிக்கையில் தோழர் தமிழரசன், “இந்தியாவில் அனைத்திந்திய கட்சிகளான இ.காங்கிரஸ், ஜனதா லோக் தளம், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போன்ற மற்ற அகில இந்திய கட்சிகளும் இந்தி ஆளும் வர்க்க கட்சிகளே. இவைகள் இந்தி மொழி நாட்டினம் உட்பட அனைத்து மொழி நாட்டினத்தையும் சுரண்டுபவையே” என்றும்;

“தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக, திமுக, ஆந்திராவில் தெலுங்கு தேசம், காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, பஞ்சாபில் அகாலி தளம், அசாமில் கண்பரிட்சத், மிஜோமில் மிசோ தேசிய முன்னணி போன்ற பிற மாநில கட்சியிலும் அந்தந்த மொழி நாட்டின ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவத்தை வெளிப்படுத்தும் கட்சிகளே. இக்கட்சிகள் தன் மொழி நாட்டின ஆளும் வர்க்கத்தின் நலனை பெற விரும்புகின்றனர். மொழி நாட்டின ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கும், அரசியல் சட்டத்திற்கும் உட்பட்டு மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் போன்ற முழக்கங்களை முன்வைத்து இந்தி ஆளும் வர்க்க அடிவருடிகளாகவும், அந்தந்த மொழி நாட்டின விடுதலைக்கு துரோகிகளாகவும் தான் செயல்படுவார்கள்” என்றும் இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளின் தரகு முதலாளித்துவ சார்பு குறித்தும், மாநில கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவம் குறித்தும் தீர்க்கமான பார்வையை முன்வைக்கிறார்.

இதை தான் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ‘வட நாட்டான் கட்சிக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை’ என்று எளிய மொழியில் முன்வைத்தது அரசியல் தளத்தில் ஆக்கப்பூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்தியது. அது போல திமுகவின் திராவிட மாடல் என்பது முதலாளித்துவ மாடலாக தான் இருக்கிறது என்பதையும் மே பதினேழு இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்துகிறது.

முற்போக்கு ஏறு தொடர்ந்து தமிழ் நிலத்தை உழுது! உழுது!, பார்ப்பன மற்றும் பனியா ஆதிக்க எதிர்ப்பு மரபு உரமூட்டப்பட்டதே தமிழர் நிலம். இந்த நிலத்தில் இடதுசாரி தமிழ் தேசியத்தை தவிர வேறு எந்த பயிரும் வளர முடியாது. இந்த ஊட்டத்தை எடுத்துக் கொண்டு இந்த மண்ணில் வளரும் மற்றவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகி மக்கிப்போகும் கழிவுகளாகும்.

வாழ்க தந்தை பெரியார் புகழ்!

வாழ்க தோழர் தமிழரசன் புகழ்!

வளர்க தமிழ் தேசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »