
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடிகர்கள் சூர்யா, நாசர், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ளது ரெட்ரோ திரைப்படம்.
கார்த்திக் சுப்புராஜின் படங்கள் எப்போதும் வித்தியாசமான கதை, திரைக்கதை அணுகுமுறையைக் கொண்டிருக்கும். அதற்கு இந்த படமும் விதி விலக்கல்ல. ஆனால் இயக்குநரின் மற்ற படங்களில் இருந்து இந்த படம் ஒரு மாறுபட்ட உள் அடுக்குகளை கொண்டுள்ளது. இந்திய தத்துவ விசாரணை மரபின் பார்வையை இதில் புரிந்து கொள்ளும் சில கூறுகள் உள்ளது.
புராண அடையாளங்களின் உண்மையான அடையாளத்தை வரலாற்றில் கண்டடையும் மரபை கார்த்திக் சுப்புராஜ் திரைப்பட மொழியில் கையாள்வதை இந்த திரைப்படம் தமிழ் திரையுலகிற்கு காட்டியுள்ளது.
மகாபாரதம், இராமாயணம் போன்ற புராண கதைகளின் தாக்கத்தால் அதை அதன் வழிப்பட்ட குறியீடுகளாகவே கொண்டு திரைப்படம் எடுக்கும் மரபு மணிரத்னம், கமல் வகை திரைப்படம் என்றால் அதற்கு மாற்று மரபை தமிழ் திரையுலகம் கைக்கொள்ள தொடங்கிவிட்டது. இயக்குநர்களான ரஞ்சித், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இந்திய வேத மரபு சிந்தனைக்கும் அவை தின்று செரித்து தனதாக்கிக் கொண்ட எதிர் மரபுகளின் உண்மை கூறுகளை அடையாளப் படுத்தும் முயற்சிகளை ஆங்காங்கே செய்துள்ளனர். ’ரெட்ரோ’ திரைப்படத்தில் இந்த எதிர் மரபு சிந்தனை சற்றே விரிவாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.
படம் தொடங்கும் போதே ‘தம்மத்தில்’ இருந்து தொடங்குகிறது. அது நமக்கு தெரிந்த புத்தரின் ‘தம்மமாக’ இல்லாமல் கிருஷ்ணனின் ‘தம்மம்’ என்று விவரிக்கப்படுகிறது. கிருஷ்ணனின் தம்மம் என்பது உண்மையில் புத்தருடையது என்பது தான் திரைப்படம் முன்வைக்கும் ஆழமான தத்துவ விசாரணை.
கிருஷ்ணன் முன்வைக்கும் ‘கர்மா’ என்பது புத்தரின் ‘தம்மத்தில்’ இருந்து திருடப்பட்ட ஒன்று. நீ இந்த உலகில் வாழ்வதற்கான தேவையை, உண்மையை கண்டடைவது புத்தரின் தம்மம். ஆனால் கிருஷ்ணனின் கர்மா என்பது முற்பிறவி பலன், பிறவி கடமை என்று அதனை இந்த உலக வாழ்க்கையை தாண்டிய ஒன்று என்கிற வகையில் முன்வைக்கிறது.

நடிகர் சூர்யா நடித்த கதாப்பாத்திரம்’ பாரி வேல் கண்ணன்’ கிருஷ்ணனின் தம்மமத்தை நிறைவேற்ற பிறந்த அழிக்கும் கடவுளாக காட்சிபடுத்தப்பட்டு, பின்னர் அந்த கதாபாத்திரம் வரலாற்று ரீதியாக தான் யார் என்பதை உணரும் போது புத்த மரபில் வரக்கூடிய ஜடாமுனியாக எல்லையில் நின்று மக்களை காக்கும் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது. இது புராண அடையாளத்தை வரலாற்றில் அடையாளம் கண்டு மீட்டு உருவாக்கம் செய்யும் மரபு. இயக்குநரின் இந்த முயற்சி தமிழ் சினிமா சிந்தனை முறையில் வரவேற்கப்பட வேண்டியது. தனது முந்தைய படத்தில் (ஜிகிர்தண்டா -2) ஈழ இன அழிப்பையும், அழிப்பின் போது தமிழ் இனமும் அதன் தலைமையும் கொண்டிருந்த ஓர்மையை மீண்டும் ஞாபகப்படுத்தும் திரை மொழியை கையாண்டிருந்தார். இது போன்ற அடையாள மீட்பு மற்றும் அடையாள நினைவூட்டும் சிந்தனை மரபே தமிழ் சமூகத்தை முன்னேற்றும் சிந்தனை.
இருந்த போதும், கிருஷ்ணனன், கம்சன், ருக்மணி போன்ற அடையாளங்களில் கிருஷ்ணனின் கதாபாத்திரம் மட்டுமே வரலாற்று மீட்டுருவாக்கம் செய்து முனியாக வடிவம் பெற்றுள்ளது. மற்ற கதாபாத்திரங்களில் அத்தகைய முயற்சி செய்யப்படவில்லை. இயக்குநருக்கு இந்த முயற்சியில் முழு பார்வை இல்லை என்று எடுத்துக் கொள்ளவதா அல்லது நம் எதிர்பார்ப்பு அதீதமானது என்று எடுத்துக் கொள்ளவதா என்று தெரியவில்லை.
கலைப் படைப்பு, வணிக படைப்பு என்று பிரித்து பார்க்க பட்ட தமிழ் சினிமா சிலருக்கு மட்மே தமிழ் சினிமாவின் போக்கை தீர்மானிப்பார்கள் என்ற உயரிய இடத்தை கொடுத்தது. ஆனால் சமீபகால இயக்குநர்கள் அரசியலை, தத்துவங்களை கலந்து அதனை வணிக ரீதியாக வெற்றியும் பெற கூடிய வகையில் வடிவமைக்கும் திறமையுடையவர்களாக உள்ளனர். திரைப்படத்தில் தத்துவ விசாரணை தமிழ் சினிமாவிற்கு தேவையானது. ’Retro’ என்கிற ஆங்கில சொல்லுக்கு பழமையான அல்லது கடந்த கால என்று பொருள், ஆனால் இந்த பெயர் பழமையானது என்பதை தாண்டி எது நம்முடையது, எது உண்மையானது என்பதையே தன் திரைமொழியின் மூலம் பொருள்படுத்தியுள்ளது. இந்த மரபு தொடரட்டும்!.