
தமிழ்நாட்டின் மண்வளத்தை சுரண்டும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் கொண்டு வந்த ஒன்றிய அரசு, தற்போது நம் கடல்வளத்தையும் பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ஒன்றியத்தின் 28 இடங்களில் ஆழ்கடல் எண்ணெய் கிணறு தளங்கள் அமைக்க பாஜக மோடி அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதில் 4 இடங்கள் தமிழ்நாட்டு கடல் பகுதியில் வருகின்றன. ஒன்று சென்னை ஆழ்கடல் பகுதியில் 5,330 சதுர கி.மீ அளவிலும், மீதம் மூன்றும் கன்னியாக்குமரி ஆழ்கடல் பகுதியில் 9,515 சதுர கி.மீ, 9,845 சதுர கி.மீ, 7,795 சதுர கி.மீ அளவிலும் என்று மொத்தமாக தமிழ்நாட்டின் 32485.29 சதுர கி.மீ ஆழ்கடல் பரப்பளவை எண்ணெய்க் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு தாரைவார்த்துள்ளது மோடி அரசு.
இத்திட்டத்திற்கு மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டங்களைத் துவக்கியுள்ளனர். ‘ஆழ்கடல் எண்ணைய்’ திட்டத்தை அனைத்திந்திய மீனவர் சங்கமும் கண்டித்துள்ளது. இதன் தலைவர் திரு.பெர்னாண்டோ கூறும்போது “எண்ணெய் எடுக்க அனுமதி கொடுத்துள்ள பகுதி டால்பின் மற்றும் கடல் குதிரைகள் போன்ற பல பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் இருக்கும் பகுதியான மன்னார் வளைகுடாவை உள்ளடக்கியது. ஆழ்கடல் எண்ணெய் எடுக்கும் முறை கடல் அடிமட்டத்தை மாசு படுத்தும். இது மீன்வளத்தை படிப்படியாக அழித்துவிடும். மீனவர்கள் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் ‘கன்னியாகுமரி ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் கிணறு அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது’ பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் “கடல் மீனவர்களுக்குச் சொந்தமானது இல்லை. அதை எங்களுக்குத்தான் சொந்தம் என மீனவர்கள் உரிமை கொண்டாட முடியாது.” என்று கூறியுள்ளார். மேலும் “48 மீனவர் கிராமங்களும் கடற்படைக்கு தேவை என்றால் தருவீர்களா அல்லது கடற்படை வேண்டாம் என்று சொல்வீர்களா?” என்றும் கேட்டுள்ளார். (கன்னியாக்குமரி பொன்.ராதாகிருஷ்ணனின் நாடாளுமன்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.)

பாஜக அரசு என்றுமே தமிழ்நாட்டையோ தமிழர்களையோ மதித்ததில்லை. தொடர்ந்து தமிழர் விரோதத் திட்டங்களை நம் தலையில் திணிப்பதும், தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசுவதும் பாஜக கட்சியினரின் வாடிக்கையாகி வருகிறது. பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசாமி தமிழர்களை ‘பொறுக்கிகள்’ என்பார். மற்றொரு முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களை ‘கறுப்பர்கள்’ என்று விளிப்பார். நடப்பு மோடி அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்க முடியாது’ என்பார். மோடியோ தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தப்பும் தவறுமாக தமிழில் பேசிவிட்டு இந்தித் திணிப்பை வேகப்படுத்துவார்.
இவர்கள் எவருக்கும் நான் சளைத்தவர் இல்லை என்பது போல தமிழக பாஜகவில் தொடர்ச்சியாக தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து கருத்து கூறுபவர் பொன்.ராதாகிருஷ்ணன். நெடுவாசல் மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தின் போது போராடியவர்கள் “மீத்தேன் எடுத்தால் தமிழ்நாடு டெல்டா பகுதியே வேளாண்மை செய்ய தகுதியற்றதாகி விடும்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நேரத்தில் “இந்தியாவுக்காக தமிழ்நாட்டை தியாகம் செய்தால் தவறில்லை” என்று கருத்து தெரிவித்தார். 2020ம் ஆண்டு “தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகி விட்டது” என்று கூறினார். தற்போது மீண்டும் தனது சர்ச்சை பேச்சை தொடங்கியுள்ளார்.
ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகள் மிகவும் சிக்கலானவை. நிலத்தில் அமைப்பது போல பரந்து விரிந்த கட்டிடங்களை கடல் நடுவே உருவாக்க முடியாது. குறிப்பிட்ட பரப்பளவில்தான் உருவாக்க முடியும். எண்ணெய் எடுக்கும் போது உருவாகும் கசடுகளையும், மாசுகளையும், அங்கே சேமித்து வைக்க முடியாது. எனவே அவற்றை மீண்டும் கடலில்தான் கலக்க வேண்டும். இது மிகப்பெரும் சுற்றுச்சூழல் மாசினை உருவாக்கும்.
கொடுக்கப்பட்ட படத்தில் ஒரு ஆழ்கடல் எண்ணெய் கிணறு அமைப்பதன் மூலம் என்னென்ன வகையான மாசுகள் ஏற்படுகின்றன என்பது தரப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் மாசுகள் ஏற்படுகின்றன.

முதலாவதாக ஆழ்கடல் எண்ணெய் கிணறு தளம் உருவாகும் போதும் கிணறுகள் தோண்டும் போதும் உருவாகும் சிதறல்கள். ஆழ்கடலின் தரைப்பரப்பில் துளையிடும் போது பெரிய அளவிலான மாசு ஏற்படும். இது அங்கிருக்கும் கடல் உயிரினங்களையும் அதன் வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும்.
இரண்டாவது எண்ணெய் எடுக்கும் பணி தொடங்கியதும் உருவாகும் மாசுகள். எண்ணெய் கிணறு தளத்தில் பணி புரிவோரால் உருவாகும் கழிவுநீரில் இருந்து, அத்தளம் இயங்க தேவைப்படும் எந்திரங்களை குளிரூட்டும் நீர் வரை அனைத்தும் கடுமையான மாசை உருவாக்கக் கூடியவை. எண்ணெய் எடுக்கும் போது வெளியேறும் எண்ணெய்ச் சிதறல் முதல், வெளியேறும் எரி வாயுவை எரிக்கும் நெருப்புவரை அனைத்தும் கடல் பரப்பை நாசம் செய்யக்கூடியவை. இவை தவிர்த்து இத்தளத்தின் இயக்கத்தால் உருவாகும் ஒலிமாசு கடல் வாழ் உயிரிங்களுக்கு இதுவரை அறிமுகம் இல்லாத மாசு என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் கடலின் நீர் பரப்பு மட்டுமல்லாமல் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்தையும் தலைகீழாக புரட்டிப் போடவல்லவை.
மூன்றாவது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உருவாகப் போகும் மாசு. இயற்கை சீற்றத்தாலோ அல்லது மனிதத் தவறாலோ எண்ணைய் கசிவு ஏற்பட்டால் பல கிலோமீட்டர் கடல் பரப்பு பாதிப்புக்குள்ளாகும். இதனை தடுக்கும் அல்லது மீட்டெடுக்கும் தொழிற்நுட்பம் இந்தியாவிடம் இல்லை. (ஏற்கனவே சென்னைக் கடலில் கொட்டிய எண்ணெயை வாளியை வைத்து அள்ளிய மடமையை நாம் பார்த்துள்ளோம்).

மாசுகள் ஒருபுறம் இருக்க இந்த ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படும் கடல் பரப்பு பாதுகாக்கப்பட்ட கடல் பரப்பாக கருதப்பட்டு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இங்கு மீன் பிடிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். தெரியாமல் வந்தால் கூட கடுமையான அபராதம் முதல் சிறைதண்டனை வரை தரப்படும். இதற்கான சட்ட திருத்தங்கள் ஏற்கனவே ஏற்படுத்தப் பட்டுவிட்டன. இலங்கை கடல் எல்லைக்குள் வருகிறார்கள் என்று அவதூறு சொல்லி சிங்கள கடற்படை ராமேஸ்வரம் உள்ளிட்ட மீனவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதை சென்னை மற்றும் கன்னியாக்குமரி மீனவர்கள் சொந்த நாட்டு பாதுகாப்புப் படையிடம் காண நேரிடலாம்.
இத்தனை சிக்கல்களும், வாழ்வாதார பிரச்சனையும் கொண்ட திட்டத்தை ஆதரித்துதான் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் “கடல் மீனவர்களுக்கு சொந்தம் இல்லை” என்கிறார். மக்கள் பயணத்தில் கட்டிய துறைமுகங்களை தனியாருக்கு தூக்கிக் கொடுக்கும் இவர்கள்தான், பல நூறு ஆண்டுகளாய் மீனுக்கும், தனக்கும் வேறுபாடில்லாமல் கடலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவர்களை இழிவுபடுத்துகிறார்கள்.

ஓ.என்.ஜி.சி., ஹைடிரோகார்பன், மீத்தேன் என ஒவ்வொருமுறையும் ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டங்களால் நம் நீர்வளமும், நிலவளமும் பாதிக்கப்படுவதைக் கண்டுதான் மக்கள் போராடுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே உள்ள ஓ.என்.ஜி.சி குழாயில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அச்சமுற்று சேதிராபாலபுரம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் வேளாண் நிலங்களை மாசுபடுத்திய திட்டங்களைப் போலவே கடல்வளத்தையும் பாழ்படுத்த இத்தகைய திட்டங்களைக் கொண்டு வருகிறது மோடி அரசு. ஆனால் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிடத்தையும், பேனா சின்னத்தையும் “இடித்துத் தள்ளுவேன்” என்று கூச்சலிட்ட கூட்டம், ஒன்றிய அரசின் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் “இடித்துத் தள்ளுவோம்” என்று இன்னும் சூளுரைக்கவில்லை.
நம் மண்வளத்தையும் நீர்வளத்தையும் காக்கும் மிகப்பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே ‘ஆழ்கடல் எண்ணெய் கிணறு’ திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய தமிழ்நாட்டு முற்போக்கு ஆற்றல்கள் திரளவேண்டும். தமிழக அரசு இதனை எதிர்த்து தீர்மானம் இயற்ற வேண்டும். நம் ஒட்டுமொத்த ஒற்றுமை மட்டுமே சென்னை மற்றும் கன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும்.