
முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது. மூன்று தலைமுறைகளாக அனகாபுத்தூரில் வாழ்ந்த 600 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்துத் தள்ளியதைப் போல, டெல்லியில் நான்கு தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் 400 க்கும் மேற்பட்ட வீடுகள் கால்வாய் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியில், நிஜாமுதின் ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள பராபுல்லா ஜங்க்புராவின் கரையில் சுமார் 60 ஆண்டுகள் 400 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையினர் தமிழர்கள். தங்கள் வீடுகளைக் காக்க நீதிமன்றத்திலும், வீதிகளிலும் பல போராட்டங்களை தொடர்ச்சியான முறையில் நடத்தியுள்ளனர். டெல்லி பாஜக அரசால் அனைத்து போராட்டங்களும் ஒடுக்கப்பட்டு, நீதிமன்றத்தால் வீடு இடிப்பு ஆணை வழங்கப்பட்டு, அதிகார மட்டங்களால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. சுமார் 370 வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே தகுதி உள்ளதாக குடியிருப்புகளை ஒதுக்கியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்ட இடமும் டெல்லியின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள வடக்கு டெல்லியின் நரேலா பகுதியில் இருக்கிறது. பேருந்து, மருத்துவ, மின்சார, குடிநீர் வசதிகள் சரிவர இல்லாத நிலையில் குறைந்தபட்சம் வந்து, செல்லும் பயண நேரமே 4 மணி நேரமாகும், மேலும் தங்கள் ஊதியத்தை விட பேருந்து செலவு இரண்டு மடங்காகும். இந்த நிலையில் எப்படி வேலை பார்க்க முடியும் என கேட்கின்றனர். நகரமய சூழலில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தங்களது வேலைக்கு உத்தரவாதமும் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு உகந்த இடமாகவும் இருந்தது, அந்த இடத்திலிருந்து ஒரு பூச்சியைப் போல தூக்கி எறிவதாக பலரும் குமுறுகின்றனர். அந்த முகாமில் உள்ள 200 பிள்ளைகளுக்கும் மேல், பாரபுல்லா அருகாமையில் இருக்கும் அரசு உதவி பெறும் தமிழ் பள்ளியில் படிப்பதாகவும், 50 கி.மீ தொலைவில் உள்ள நரேலாவிற்கு சென்றால் அவர்களின் பள்ளிப் படிப்பு பாதிக்கப்படும் சூழலும் ஏற்படுமென்றும் கூறுகின்றனர்.

மதராசி கேம்ப் பகுதி வெள்ளப்பெருக்கிற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், ஜங்க்புராவின் வெள்ளத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. டெல்லியில் வெள்ளம் ஏற்படுவது நகரம் முழுவதும் உள்ள பிரச்சனையாக இருக்கிறது. திட்டமிடப்படாத நகர மேலாண்மை, மழைநீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் ஏற்படுத்தாதது போன்ற காரணங்கள் உள்ளன.
பாரபுல்லா கால்வாயை சுத்தப்படுத்தினாலும் தீவிர மழைக்கு வெள்ளம் ஏற்படுவதை கட்டுப்படுத்தி விட முடியாது என்றே சூழலியலாளர்கள் கருத்தாக இருக்கிறது. இயற்கையான ஏரிகள், பூங்காக்கள் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு இடங்கள் டெல்லியில் மிகவும் குறைவாக இருப்பதால் மழைநீர் சேகரிக்கும் இடமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எளிதாக பாய்ந்து சென்று விடுவதாக ‘down to earth’ பத்திரிக்கை (ஜூலை 15, 2024) கூறியது. நகரின் புறப்பகுதிகளில் திட்டமிடப்படாத குடியிருப்புகள் அதிகரித்து விரைவான நகரமயமாகி வருகிறது. அது வளரும் அளவிற்கு முறையான வாய்க்கால் வசதிகள் செய்யப்படவில்லை. முழுமையான கான்கிரீட் மயமாக்கலால், புழுதி நிலங்கள் இன்றி இயற்கையாக நீர் உறிஞ்சும் தன்மை தடுக்கப்படுவதாகவும் அப்பத்திரிக்கை டெல்லி வெள்ளத்திற்கு காரணமாகக் கூறியது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை (ஜூன் 29, 2024), பாரபுல்லா பிரச்சனையில் டெல்லி அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பின்மையை அம்பலப்படுத்தியது. டெல்லி மாநகராட்சி, பொதுப்பணித்துறை, புனரமைப்பு மற்றும் வெள்ளம் கட்டுப்பாட்டுத் துறை போன்றவை, பாரபுல்லா பகுதியில் பின்னோக்கி நீர் பாய்ச்சலுக்கு பொறுப்பு ஏற்க மறுத்ததாக குற்றச்சாட்டு வைக்கிறது. மதராசி கேம்ப் இல்லாவிட்டாலும் பாரபுல்லா வடிகாலில் வெள்ளப் பெருக்கு ஏற்படாதென சொல்லிவிட முடியாது எனக் கூறியிருந்தது.

மேலும் இம்மக்களை வெளியேற்ற மற்றொரு காரணம் இக்குடியிருப்புகளுக்கு அருகாமையில் இருக்கும் 400 ஆண்டுகள் பழமையான பாரபுல்லா பாலம் ஆகும். இது முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்திய தொல்லியல் துறை இப்பாலத்திலிருக்கும் வணிக கடைகள், கழிவுநீர், குப்பை மற்றும் இதன் அருகிலிருக்கும் வீடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப் போவதாக 2024-ல் அறிவித்தது. அதன் படி பாலத்தின் மேலிருந்த வணிக சந்தை, குடியிருப்புகள் அனைத்தையும் அகற்றி, அதற்குரிய பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும், மூன்று மாதங்களில் மறுசீரமைப்பு தொடங்குவதாகவும் கூறியது. மேலும் ஹூமாயுன் கல்லறை இங்கிருப்பதால், சாலை வசதி விரிவாக்கி சுற்றுலாத் தலமாக்கவும் நடவடிக்கை எடுப்பதும் இம்மக்களை வெளியேற்றும் ஒரு காரணமாகும்.
டெல்லி மேம்பாடு ஆணையத்தின் தலைவராக இருக்கும் துணை ஆளுநரான வினய் குமார் சக்சேனா செப்டம்பர், 2024-ல் இக்குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது ஆளுங்கட்சி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, இடிப்பு பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் ஆதிஷி எச்சரித்திருந்தார். தற்போது ஆளும் பாஜக அரசு வீடுகளை இடிக்கும் நிலையிலும் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கட்சி கண்டித்துள்ளது. சிபிஐஎம் கட்சி அனைவருக்கும் வீடுகள் தரப்பட வேண்டும், தரமான வசதிகள் செய்துத் தரப்பட வேண்டும் என்று அவர்களுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் தேர்தலின் போது, மோடி ‘சேரி இருக்கும் இடமெல்லாம் வீடுகள் வழங்கப்படும் (ஜஹான் ஜூக்ஜி வஹான் மகான்)’ என்கிற வாக்குறுதியை அளித்தே ஓட்டு வாங்கினார். அதே பகுதியிலேயே வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறியதால் தான் பாஜக எம்.எல்.ஏ-வுக்கு ஓட்டு போட்டதாகவும், . ஆனால் இப்போது வீடே இழந்து நிற்பதாகவும் மக்கள் தற்போது வருந்துகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, மதராசி கேம்ப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட மக்களுக்கு அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால் வாழ்வாதாரத்திற்கு தேவையான அத்தியாவசிய ஆதரவுகளை வழங்கும் என தெரிவித்துள்ளது. இது வரவேற்புக்குரியதே. அதே சமயத்தில் ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதி அகற்றம் என்ற பெயரில் அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை இடித்து கண்ணீரும் கம்பலையுமாக, போதுமான வசதிகளற்ற மாற்றுக் குடியிருப்புக்கு அனுப்பியதும் இதே திமுக அரசே.
மூன்று தலைமுறை, நான்கு தலைமுறைகளாக வாழ்ந்த மக்களின் வீடுகளைப் பறிப்பதற்கு நீர்நிலைப் பராமரிப்பு என்கின்ற காரணம் ஒன்றே அரசு, அதிகார மட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் போதுமாயிருக்கிறது. அதன் பின்னணியில் உண்மையான காரணமாக முதலாளித்துவ நலனே ஒளிந்திருக்கிறது. அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என நிறுவுவதற்காக படிப்படியாய் அதிகார மட்டம் செய்த சூழ்ச்சிகளும், அரசு நீதிமன்றத் தீர்ப்பு என கைகழுவி விட்ட துரோகமும், நீதிமன்றம் சமூகநீதியைப் புறந்தள்ளி தீர்ப்பு வழங்கியதும் இதையே நமக்கு உணர்த்தி இருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி, புதிய கட்சிகள் என எவரும் ஆக்கிரமிப்பாளர் என முத்திரை குத்தப்பட்டவர்களின் வாழ்வியல் பின்னணியையும், வாழ்வாதார சூழ்நிலையும் குறித்து பேசவுமில்லை. எதிர்கட்சிகள் போராட்டக் களங்களில் வந்து துணிந்து எதிர்க்கவுமில்லை. அந்த குழந்தைகளின் கல்வி நிலைமைகளைக் குறித்து கவலைப்பட்டதுமில்லை. மக்களின் நலனே முக்கியம் என இயங்கும் மே 17 இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகளும் இறுதி வரை அம்மக்களின் துணை நின்றார்கள்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த புல்டோசர் கலாச்சாரங்களால் பல லட்சம் மக்கள் தெருவினில் நிறுத்தப்படுகிறார்கள். ஒரு நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தும் வரை சாமானியர்களின் உழைப்பை உறிஞ்சி விட்டு, பின்னர் அவர்களை சக்கையாய் நகருக்கு வெளியே வீசியெறிகிறார்கள். சொந்த மாநிலத்திலும் இந்த நிலை, பிழைப்பு தேடி சென்ற அண்டை மாநிலங்களிலும் இதுதான் தமிழர்களின் நிலையாக மாறிவிட்டது. நூற்றாண்டுகளாக மும்பை தாராவியில் வாழ்ந்து வரும் மக்களை 27 மாடிகொண்ட அடுக்ககங்களில் அடைத்து விட்டு மீதமுள்ள நிலங்களை பெரு வணிக நிறுவனங்களுக்கும், ஒப்பந்தமெடுத்த அதானிக்கும் தாரை வார்க்கும் ஏற்பாடும் நடந்து வருகிறது. அந்தக் குடியிருப்பும் சுமார் 1 லட்சம் குடும்பங்களில் 70 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டு 30 ஆயிரம் வாடகைக் குடும்பங்கள் நிராகரிக்கப்படும் துயரமும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது.
பல்லாண்டுகளாக நிலத்தில் வசித்தவனுக்கு உரிமையை இழக்கச் செய்து, அந்த நிலங்களை ஆக்கிரமித்து பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், சாலைகள், விமான நிலையஙகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை அமைக்க பெரிய நிறுவனங்களுக்கு அரசுகள் அனுமதி வழங்குகின்றன. நிலம் பறிக்கப்பட்ட மக்களை நகருக்கு அப்பால் பல மாடி அடுக்ககங்களின் சிறிய இடத்திற்குள் அடைக்கிறது. நிலத்தின் சந்தை மதிப்பு உயரும் இடங்களில் எல்லாம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பல லட்சம் ஏழை எளிய மக்களுக்கு இந்த அநீதி நிகழ்ந்து கொண்டே தானிருக்கப் போகிறது. சாமானியர்கள் இந்த அரசியலைப் புரிந்து கொண்டு, கட்சிகளைக் கடந்து நின்று சிந்திக்கும் அரசியல் வலிமை பெற்றவர்களாய் மாற வேண்டும். மக்களின் முதன்மை உரிமையான நிலங்களை பறிப்பதைத் தடுக்க மக்கள் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும்.