ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை வீசியதைத் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ள போரில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடி குறித்தும், வலதுசாரி பயங்கரவாதிகள் நடத்தும் இந்த உலகளாவிய போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருன்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஜூன் 13, 2025 அன்று முகநூலில் பதிவு செய்தது.

ஈரானின் மீதான போர் மிகமோசமான இடத்திற்கு ஒட்டுமொத்த உலகை நகர்த்தியுள்ளது. விளிம்பில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் மிகமோசமான நெருக்கடியை சந்திக்கிறோம்.

நேத்தன்யாகு-ட்ரம்ப்-மோடி-எர்துகான்-சவுதி-ஐரோப்பியஒன்றியம்-சிரியா-எகிப்து என கைகோர்த்து நிற்கும் போர் கூச்சல் போடும் கூட்டத்தை எதிர்த்து நிற்கும் வலிமையான இடதுசாரி கூட்டமைவு உலகில் இல்லை. எளிய மக்களே இந்த ‘போர்-நிறுத்தம்’ எனும் முழக்கத்தை தூக்கி சுமக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளோம்.

இஸ்ரேல்-சவுதி-துருக்கி என ஒன்றிணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் கொண்டு சிரியாவை வீழ்த்தினார்கள். சிரியா வீழ்த்தப்படாமல் இருந்திருந்தால் ஈரானின் மீதான தாக்குதலை நடத்த வான்வெளி இசுரேலுக்கு கிடைத்திருக்காது. தனது ஓட்டோமான் கனவிற்கும், சவுதியின் பாரசீக எதிர்ப்பு அரசியலும் இஸ்ரேலுக்கு பயன்பட சிரியா வீழ்த்தப்பட்டது. இசுலாமிய நாடுகளின் இடையே உள்ள பிளவுகளை இசுரேல்-நேட்டோ கூட்டணி பயன்படுத்திக் கொண்டது. துருக்கியும் நேட்டோ நாடு. இசுரேலும் நேட்டோவிற்கான நட்பு நாடு.

ஈரானை ஏன் வீழ்த்தவேண்டுமென அமெரிக்கா 50 ஆண்டுகளாக முனைகிறது? அமெரிக்காவின் குறி ஈரானின் கொமேனி ஆட்சி மட்டுமல்ல, மத்திய ஆசியாவிற்குள்ளாக நுழைய ஈரான் வீழ்த்தப்பட வேண்டும்.

மத்திய ஆசியா

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், ஆசியாவிற்குள்ளான தமது விரிவாதிக்க திட்டங்கள் வியத்நாம் போருடன் முடிவுக்கு வந்தது. ஈரானின் ஆட்சி மாற்றம் ஆசியாவை நெருங்க இயலாத பகுதியாக்கியது. ஆப்கானிஸ்தான் வழியாக ஆதிக்க அரசியலை நிலைநாட்ட முயன்றதும் நிகழாமல் போனது.

சோவியத், சீனம், வடகொரியா, வியத்நாம், ஈரான் ஆகியன வலிமையாக ஆசியாவின் எல்லைச்சாமியாகின.

இந்திய பெருங்கடல், தென்சீனக்கடல், செங்கடல், அரபிக்கடல் ஆகியன மேற்குலகின் கடற்படை ஆதிக்கத்தின் கீழ் முழுமையாக வராமல் நின்றது. ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், சவுதி, அமீரகம், குவைத், கத்தார், இசுரேல் ஆகியன வழியாக தமது ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டாலும், ரஷ்யா-சீனா-ஈரான்-வடகொரியாவை வீழ்த்த இயலாமல் மேற்குலகு தடுமாறுகிறது. பொருளாதார ஆதிக்கத்தை, ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த நாடுகள் தடையாக நிற்கின்றன

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே இந்தியாவை கொண்டு செல்கிறோம் என சொல்லிய காங்கிரஸ், பாஜக முதலில் அமெரிக்காவிற்கு வாசலை திறந்துவிட்டது. இந்திய பெருங்கடலில் முழுமையான கடற்படை தளம் இல்லாமல் இருந்த மேற்குலகிற்கு தேவைப்படும் இடமாக டியாகோ கார்சியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போதாத நிலை இருந்தது. இதை சமம் செய்ய வேண்டுமெனில் இலங்கையின் திரிகோணமலை தேவைப்பட்டது. இலங்கையின் 1970களில் ஜெயவர்த்தன காலத்தில் திருகோணமலை நோக்கிய அமெரிக்காவின் நகர்வை சோவியத் உளவுதுறை மோப்பம்பிடித்து இந்திராகாந்திக்கு தெரிவித்தது. இதனடிப்படையில் தமிழ் போராளிகளை வளர்த்தெடுத்தார் இந்திரா. இந்தியா 2000ம் ஆண்டில் அமெரிக்காவுடன் நெருக்கமாக 123அணு-ஒப்பந்தம் கையெழுத்திட்ட உடன், திருகோணமலையில் அமெரிக்காவின் கப்பற்படை பயன்பட்டிற்கான ஒப்பந்தத்தை அனுமதித்தது. அன்றைய நிலையில் அமெரிக்காவின் இந்தியப்பெருங்கடல் தலையீடு குறித்து வடஇந்திய இடதுசாரி அறிவுசீவிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் தவிர்த்தார்கள்.

இச்சமயத்தில் தராகிசிவராம், தனது கட்டுரை வாயிலாக அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்தை அம்பலப்படுத்தினார். திருகோணமலையும், தமிழர் பகுதிகளும் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்து பறிக்கப்பட்டால், அமெரிக்காவின் படைத்தளம் விரிவடையும். ஈரானின் மீதான மேற்குலகின் தாக்குதல் சாத்தியமாக வேண்டுமென்றால் திருகோணமலை அவர்களின் படைத்தளமாக வேண்டுமென்றார். கருணாவின் வெளியேற்றத்தை குறித்து கதைகதையாக தமிழக இடதுசாரி அறிவுசீவிகள் சிலர் எழுதி பரப்புரை செய்துகொண்டிருக்க, மறுபுறத்தில் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை அமெரிக்காவின் பயன்பாட்டிற்கான ஒப்பந்ததில் கையெழுத்தானது. ஒப்பந்தம் நடந்து சில மாதங்களில் அமைதிப்பேச்சு வார்த்தையின் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்தார்கள். தராகி சிவராம் முன்னதாக படுகொலையானார்.

இதேபோல ஒவ்வொரு பகுதிகளாக நகர்ந்தவர்கள், ஆசியாவை சுற்றிய முற்றுகையின் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளார்கள். இதை தவிர்க்கவே யேமன், ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய போராளிகளை உருவாக்கியது ஈரான். சிரியா, லெபனான் ஆகியவற்றை தமக்கான தளமாக்கி இசுரேலை தனிமைப்படுத்தி, தமக்கான பாதுகாப்பை உருவாக்கியது ஈரான். இவற்றை அழிக்க முறையே சவுதி, இசுரேல், துருக்கி ஆகியவற்றை பயன்படுத்தியது அமெரிக்கா.

சிரியாவில் நிலைகொண்டிருந்த ஈரானின் படைகள், ரஷ்யாவின் கப்பல் தளம், சிரியாவின் வான்வெளி ஆகியவை தகர்க்கப்பட்டது. இதை இசுலாமிய ஒழுங்கினை பேசும் வலதுசாரி அரசர்களை கொண்டு தகர்த்தது மேற்குலகம். அரபு உலகின் தலைவர்களான ஈராக்கின் சதாம் உசேன், லிபியாவின் கடாபி, எகிப்தின் மோர்சி ஆகியோரை மேற்குலகம் கொன்றழித்தது. முதுகெலும்புள்ளவர்களாக எந்த தலைவன் இல்லாத நிலையில் ஈரான் மட்டுமே எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது.

மேற்காசியாவில் விரிவான போர் நடக்க அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தியாவினை இந்த போரில் மேற்குலகம் சிக்கவைக்கும். தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக மேற்குலகின் வழியே செல்ல அதிக வாய்ப்புண்டு. மேற்கு ஆசியாவில் நடத்தப்படும் போருக்கான ஆயுத தளவாடங்கள் உற்பத்தியாகும் தளமாகவும், இராணுவ தளமாகவும் இந்தியா மாற்றப்படுமெனில், தென்னிந்தியாவில் இது மையம் கொள்ளலாம்.

ஆயுத உற்பத்தி வளாகம் (டிபன்ஸ் காரிடார்), அமெரிக்காவின் கடற்படைக்கான காட்டுப்பள்ளி துறைமுகம் என நடப்பவை நாளை எவ்வகையான எதிர்காலத்தை நமக்கு கொடுக்கப்போகின்றன என்பதை குறித்து பேச ஆட்களில்லை. முள்ளிவாய்க்கால், காசா, லெபனான் என நடக்கும் அழிவுகளின் கரங்கள் நாளை நம்மை நோக்கியும் நீளும். 2009 கிளிநொச்சியின் வீழ்ச்சி, நமது பாதுகாப்பு அரண்களின் வீழ்ச்சியை சொல்லியது. போருக்கு எதிரான குரல் வலுப்பெற வேண்டும். உலகளாவிய போர் நிகழும் சூழலில் தமிழ்த்தேசிய அரசியல் இத்திசையிலும் கவனத்தை செலுத்த வேண்டும்.

https://www.facebook.com/share/16LUw6nK3W

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »