சிதம்பரம் இரண்டாம் கட்ட பரப்புரை: ஏப்ரல் 8, 2024

“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்னும் நிலைப்பாட்டை  முன்வைத்து மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பரப்புரை 8/4/2024 அன்று, சிதம்பரம் பகுதியில் இரண்டாம் கட்டமாக விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தோழர். தொல். திருமாவளவன் அவர்களை ஆதரித்து, தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பரப்புரை செய்தார். ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், அரியலூர், குன்னம் ஆகிய பகுதிகளில் பரப்புரை நிகழ்ந்தது. ஏராளமான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களும், மே 17 இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். தோழர்கள் துண்டறிக்கைகள் கொடுத்தனர். வெகு மக்கள் திரண்டு நின்று கவனித்தனர்.

இந்த பகுதிகளில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை :

இந்த 2024 தேர்தல் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கான தேர்தல், மோடியை அகற்ற வேண்டும் என்பதற்கான தேர்தல். உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் இந்திய ஒன்றியத்தில் மட்டும் அதன் விலை குறையவில்லை. இதனால் சாமானிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது. அது மட்டுமல்லாமல் உலக பணக்காரர் பட்டியலில் 65 ஆவது இடத்தில் இருந்த அம்பானி உலக அளவில் எட்டாம் இடத்திற்கு முன்னேறினார்.

பெரும்பாலும் தமிழ்நாட்டு மக்கள் அதானி அம்பானி பணக்காரராவது குறித்து கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மட்டும் பணம் லட்சுமி தேவியா கொடுத்தது? நமது வரியே, அவர்களுக்கு பணமாக செல்கிறது. அதானி, அம்பானி பணக்காரர்கள் ஆகிறார்கள் என்றால் நாம் இங்கு ஏழையாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். நம் வீட்டு பணத்தை அவர்களுக்கு கொடுப்பதற்காகவே மோடி இங்கு வந்துள்ளார். இரு குசராத்திகள் பணக்காரர்களாக்க, ஒரு குசராத்தி கடுமையாக உழைக்கிறார். நாம் எதற்காக ஒரு குசராத்திக்கு ஓட்டு போட வேண்டும். குசராத்திற்கு மட்டுமே நல்லது செய்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடிக்கு நாம் எதற்கு ஓட்டு செலுத்த வேண்டும்?

இவ்வளவு நாள் மோடி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளாரே, யாருக்கெல்லாம் மாலை சூட்டியுள்ளார்? முதல் முறை வந்த பொழுது காமராசருக்கு, அவரோ காங்கிரஸ்காரர். பிறகு  முத்துராமலிங்க தேவருக்கு, அவர் ஃபார்வார்ட் பிளாக்கை சார்ந்தவர். மூன்றாவதாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு மாலை சூட்டினார். அவர்கள் அதிமுகவை சார்ந்தவர்கள். 40 வருட கால ஆட்சியில் அவர்களால் ஒரு பிஜேபி தலைவரைக் கூட, தமிழ்நாட்டில் நல்லது செய்தவர் என அடையாளம் காட்ட வழியில்லை என்றால் நாம் எதற்கு இவர்களுக்கு ஓட்டு செலுத்த வேண்டும்? இதைத் தாண்டி வட மாநிலத்தில் பார்த்தால் பகத்சிங்கை தலைவர் என்பார். பகத்சிங்கோ ஒரு நாத்திகர். அவர் ஆர்.எஸ்.எஸ், பிஜேபிக்கு எதிராக போரிட்டவர். பகத்சிங்கைத் தாண்டி காந்தியை தலைவர் என்பார். காந்தியைக் கொன்றது பிஜேபியின் தந்தை இயக்கமான ஆர்.எஸ்.எஸ்தான். அவரையும் தாண்டி சுபாஷ்சந்திர போசை தங்கள் தலைவர் என்பார். அவரைக் கொன்றதும் இந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கட்சிதான்.

இந்தியாவினுடைய இரு பெரும் தலைவர்களைக் கொன்ற பெருமை இந்த ஆர்.எஸ்.எஸ் கட்சியையே சாரும். இது மட்டுமல்லாமல் காமராசர் நேருவைக் காணடெல்லி சென்ற பொழுது காமராசரை வீட்டோடு தீ வைத்துக் கொல்ல நினைத்தது இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல். காமராசர் பின் வாசல் வழியாக தப்பித்து சென்றார்.  இதுபோல இந்தியாவில் ஒரு தலைவரைக் கூட அடையாளப்படுத்த இயலாமல், முக்கிய தலைவர்களைக் கொன்ற கட்சியை நாம் எதற்கு ஆதரிக்க வேண்டும்? கொலை செய்வதையும், கலவரம் செய்வதையும் மட்டுமே தொழிலாக வைத்திருக்கக்கூடிய கட்சிக்கு தமிழ்நாட்டில் இடம் கிடையாது.

பா.ம.க-வின் சாதாரண மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத பாஜகவிற்கு எதற்காக ஆதரவு அளிக்க வேண்டும்? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சேர வேண்டிய 22 லட்சம் அரசு வேலையை மடைமாற்றி வடநாட்டு மக்களுக்கும், உயர்சாதி பிரிவினருக்கும் கிடைக்குமாறு செய்த இந்த பாஜக-வை எதற்காக வன்னிய மக்கள் ஆதரிக்க வேண்டும்? இதை எதிர்த்து முதலில் கேள்வி எழுப்பியவர் தொல். திருமாவளவன் அவர்களே. பாமக இது குறித்து வெறும் போராட்டம் மட்டுமே நடத்தியது. அதுவும் கூட்டணிக்காக. பாமக-வுக்கும் சேர்த்து கேள்வி எழுப்பியவர் தொல். திருமாவளவன் அவர்கள். வன்னிய மக்களை வஞ்சித்த கட்சிக்கு எதற்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். 2016-ல் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தப் பெரும்பான்மையான சமூகத்தின் துணையோடு வெற்றி பெற்ற அவருக்கு பாஜக எந்த அமைச்சர் பதவியும் வழங்கவில்லை. மாறாக யாரென்று தெரியாத, எங்கும் போட்டியிடாத நிர்மலா சீதாராமனுக்கும், ஜெய்சங்கருக்கும் அமைச்சர் பதவியை பாஜக வழங்கியது.

ஜெயங்கொண்டத்திலிருந்து நெய்வேலி வரை உள்ள 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை என்எல்சி கையகப்படுத்திய போது அதில் பெரும்பான்மையாக நிலத்தை இழந்தவர்கள் வன்னியர் சமூக விவசாயிகள். அவர்களின் வீட்டிற்கு ஒருவருக்காவது அரசு வேலை தந்திருக்க வேண்டாமா? இதை குறித்து ராமதாஸ் அவர்கள் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டார். 1990-க்கு பிறகு இந்த 30 ஆண்டு காலத்தில் ஒரு தமிழ் இளைஞனுக்கும் நிரந்தர பணி இங்கு NLCல் கொடுக்கப்படவில்லை.

பாமக NLC போராட்டம் நடத்திய பிறகு கூட 2016 கூட்டணிக்கு பிறகு ஒரு இளைஞனுக்காவது வேலை வாங்கி கொடுக்க முடிந்ததா, இல்லை அதை கேட்கத்தான் முடிந்ததா? பாட்டாளி மக்கள் கட்சி ஏமாந்தது இருக்கட்டும் தமிழ் மக்களும் ஏமாற வேண்டுமா?, அது மட்டுமா பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10,500 சீட்டுகளை மோடி அரசாங்கம் உயர்சாதியினருக்கும், வட மாநிலத்தாருக்கும் கொடுக்க முன் வந்த போது அங்கு போராடியது தொல் திருமாவளவன். பாராளுமன்றத்தில் தமிழருக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் சண்டை போடுவதற்கும், போராடுவதற்கும் இருக்கும் தலைவர் தொல் திருமாவளவன். பாராளுமன்றத்தில் 70% வருகை பதிவு செய்த அவர்தான் நமக்காக பேசுவார். 10% கூட வருகை பதிவு செய்யாத பாமக என்ன செய்யும்?

15 வருடங்களாக மக்கள் களத்தில் மக்களுக்காகக் களத்தில் போராடிக் கொண்டிருப்பது மே 17 இயக்கம். மீனவர் உரிமை, தொழிலாளர் உரிமை, விவசாய உரிமை, என்எல்சி, ஸ்டெர்லைட் போன்ற பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காகப் போராடி வருகிறது. எடப்பாடி ஆட்சியில் மட்டும் 47 வழக்குகள் என் மீது போடப்பட்டது. அதிலும் காவேரிக்காக போராடிய போது இரண்டு வழக்குகள் இரண்டும் தேசத்துரோக வழக்குகள், ஸ்டெர்லைட்டுக்காக ஐநாவில் பேசியதற்காக ஊபா(UAPA) சட்டத்தில் வேலூரில் தனி சிறையில் அடைக்கப்பட்டு, சொந்த குடும்பம் கூட பார்க்க அனுமதிக்கப்படாமல் கடினப்பட்டபோது, என் விடுதலைக்காக போராடியது விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகள், மதிமுக கட்சிகள். இதுபோல் தமிழருக்காகப் போராடி சிறை சென்ற போது தமிழ்நாட்டு கட்சியான பாமக வரவில்லையே ஏன்?

இன்னொரு கட்சி நாம் தமிழர் கட்சி. அது ஆரம்பித்து 15 வருடமாகியும் ஒரு வேலையும் செய்யவில்லை. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. இந்திய அளவில் யாருடனும் கூட்டணி வைத்து மோடி ஆட்சி அகற்றப் போகிறார்களா என்றால் அதுவும் இல்லை. தமிழ்நாடு அளவில் கூட்டணி வைத்து மோடி ஆட்சியை அகற்றப் போகிறார்களா என்றால் அதுவும் இல்லை. தனியாக நின்று என்ன செய்யப் போகிறீர்கள்? ஆனால் பொன். ராதாகிருஷ்ணனையோ, அண்ணாமலையையோ பார்த்தால் மட்டும் கட்டி தழுவிக் கொள்கிறீர்கள். கேட்டால் அவர் ஐபிஎஸ், நான் கமெண்டோ என்று கதை விடுகிறீர்கள். இங்கிருக்கும் பாஜகவிற்கு எதிராக 10 ஆயிரம், 20 ஆயிரம் ஓட்டு வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்? தொல். திருமாவளவனுக்கு இணையாக ஒரு தலைவரை நிறுத்தியிருக்கிறீர்களா என்றால் அதுவும் கிடையாது. உங்கள் தலைவரே அவருக்கு இணையானவர் கிடையாது. இந்த கட்சிக்கு ஓட்டு போட்டு எந்த உபயோகமும் கிடையாது. 

அடுத்ததாக, அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமி பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்கிறார். மோடியுடன் கூட்டணி இல்லை என்று சொல்வாரா? அமித்ஷாவுடன்  கூட்டணி இல்லை என்று சொல்வாரா? பாஜகவை எதிர்க்கும் ஒவ்வொரு தலைவர் வீட்டிலும் அமலாக்கத்துறை வந்து அமர்கிறது. எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் மட்டும் ஏன் அமலாக்கத்துறை வரவில்லை? எடப்பாடியார் கொடுக்கும் ஒவ்வொரு காசிலும், அங்கு திருநெல்வேலியில் ஸ்டெர்லைட்டுக்காக இறந்த 16  உயிர்களின் இரத்தக்கறை படிந்து இருக்கிறது. அந்தக் காசை வாங்கிக் கொண்டு நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் அது பாஜகவிற்குதான் போய் சேரும்.

இது சட்டமன்ற தேர்தல் அல்ல. அதிமுக-காரர்கள் சாலை வசதி, சாக்கடை வசதி என்று பேசுகிறார்கள். இது பாராளுமன்ற தேர்தல். கவுன்சிலர் தேர்தலில் பேசப்பட வேண்டியதை பாராளுமன்ற தேர்தலில் பேசுகிறார்கள் என்றால் இது கூட தெரியாத அதிமுக -வினருக்கா உங்கள் ஓட்டு? மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு, நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு அதிகரிக்க வேண்டிய பணம் குறித்து பேச வேண்டிய இடம் தான் பாராளுமன்றமே தவிர, சாலை போடுவது, சாக்கடை வசதி, தெருவிளக்கு போடுவதை பேசுவதற்கு அல்ல.

சிதம்பரம் பரப்புரையின் போது தோழமைகளுடன் தோழர் திருமுருகன் காந்தி

தொல். திருமாவளவன் அவர்கள் சிதம்பரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல. இந்திய அளவிலான தலைவராக பார்க்கப்படுபவர். இப்படிப்பட்டவரை தேர்ந்தெடுக்காமல், அடிமை கூட்டத்தை தேர்ந்தெடுத்து அனுப்பி விடாதீர்கள். எடப்பாடி மாநில பிரச்சனை மட்டும் பேசுகிறார். ஒட்டு மொத்த நாட்டுப் பிரச்சனையைப் பற்றி பேச மாட்டார். மோடி கொண்டு வந்த எல்லா கேடு கெட்ட சட்டங்களுக்கு எல்லாம் ஆதரவு அளித்தவர் எடப்பாடி.

அதிமுக கட்சியை மூன்றாக உடைத்தது பிஜேபி, மோடி. ஒரு குழு கூட்டணி வைத்தால், மற்ற இரண்டு வெளியில் நிற்கும். மற்ற இரண்டு கூட்டணி வைத்தால் ஒரு குழு வெளியில் நிற்கும். என்ன நாடகம் இது? அதிமுக தொண்டர்களே, உங்க கட்சி தோற்றால்தான் அதிமுக-வையே காப்பாற்ற முடியும். ஏனென்றால் உங்கள் கட்சி ஜெயித்தால் உங்கள் கட்சித் தலைவரே மோடியிடம் உங்கள் கட்சியை அடகு வைத்து விடுவார். பாட்டாளி மக்கள் கட்சியில் பாதி பேர் பாஜகவாக மாறிவிட்டார்கள். பாமக நண்பர்களே, நீங்கள் வீதி வீதியாக பாஜகவை தூக்கிக் கொண்டு போனால் உங்கள் கட்சியே இருக்காது.

இப்படித்தான் மகாராசுடிராவில், சிவசேனா கட்சிக்காரன் அங்கு இரண்டு எம்எல்ஏ கூட இல்லாத பாஜகவை தூக்கிக் கொண்டு சென்றான். அந்தக் கட்சியை இரண்டாக உடைத்தது பாஜக. இன்று அந்த கட்சியே அங்கு கிடையாது. பீகாரில் ராம் விலாஸ் பஸ்வான் மிகப்பெரிய தலைவர். அவர் மோடியை தூக்கி கொண்டு சென்றார். இன்று ராம்விலாஸ் பஸ்வான் கட்சி இரண்டாக உடைந்து விட்டது. பால் தாக்கரே இறந்ததற்குப் பிறகு அந்த கட்சியை இரண்டாக உடைத்து விட்டார்கள். நிதிஷ் குமார் இருக்கும்போதே அவர் கட்சியை தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள். பாமகவை மட்டும் எப்படி காப்பாற்றப் போகிறீர்கள்? தாமரைக்குள் மஞ்சள் வண்ணம் அடித்து உங்க சின்னத்தை வைத்திருக்கிறீர்கள். தாமரை முழுதாக உங்களை சாப்பிட்டுவிடும். அது சாதாரண தாமரை கிடையாது. எல்லாவற்றையும் தின்று செரிக்கும் தாமரை. இந்த கொலைகார தாமரையிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

ஆண்டி மடம் என்பது தோழர். தமிழரசன் களமாடிய இடம். தமிழ்நாட்டின் உரிமைக்காக, தமிழர் உரிமைக்காக களம் கண்ட தோழர். தமிழரசன் வாழ்ந்த இடம் இது. அந்த தமிழரசன் இருந்த இடத்திலே இரட்டை இலை விரியக்கூடாது, தாமரை மலரக்கூடாது என்பதை கவனத்தில் வையுங்கள். தோழர். தமிழரசனின் அரசியலை ஏற்ற நாங்கள் சொல்லுகிறோம் இந்த மண்ணில் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும் இடமே ஒழிய, நரேந்திர மோடிக்கும், காவி கும்பலுக்கும், தமிழினத்தை காட்டிக் கொடுத்த அதிமுக கும்பலுக்கும் எந்த இடமும் கிடையாது என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்” என திருமுருகன் காந்தி பேசினார்.

தென்சென்னை பரப்புரை :

மே 17 இயக்கத் தோழர்களால் தென்சென்னையில் பரப்புரை கடந்த ஏப்ரல் 2-ந்தேதி முதல் தொடர்கிறது. அவ்வகையில் எட்டாம் நாளான 8/4/2024 அன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன் குமார் தலைமையில் தியாகராய நகர் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. சி.ஜ.டி நகர் மார்க்கெட்டில் துவங்கி, தி.நகர் பேருந்து நிலையம், மார்க்கெட், ஐந்து விளக்கு சந்திப்பு, லிபெர்டி சந்திப்பு, வடபழனி மார்க்கெட் வரை பரப்புரை தொடர்ந்தது. தோழர்கள் துண்டறிக்கைகள் விநியோகித்தனர்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன்குமார் உரையை கேட்ட இளைஞர்கள் கைதட்டியும், விசிலடித்தும் உணர்வை வெளிப்படுத்தினார்கள். வேலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குடும்ப தலைவர்களும், இளைஞர்களும் பிரவீன் தோழர் பேச்சை முழுதும் கேட்டு விட்டே நகர்ந்தனர். நிறைய பெண்களிடம் துண்டறிக்கை கொடுக்கும் போது தயங்கினர். பின்னர் ஓட்டு போடாதீங்க பாஜக-விற்கு என்றதும் நிமிர்ந்து கண்களைப் பார்த்து சிரித்தார்கள். துண்டறிக்கையை திரும்பி வந்து வாங்கினார்கள்.

மேலும் துண்டறிக்கையை இரண்டு பெண்களிடம் கொடுத்தப்போது, முதலில் துண்டறிக்கை வாங்காமல் சென்றார்கள். அக்கா, பாஜக மோடிக்கு ஓட்டு போடாதீங்க என சொன்னதும், ‘அவருக்கு யார் ஓட்டு போடுவா…போடவே மாட்டோம்… இப்பவே ஊர் முழுக்க இந்திக்காரங்க இருக்காங்க. அப்பறமா இந்திக்காரனே ஆட்சியிலும் வந்து உக்காருவான் அப்புறமா ரொட்டிதான் சாப்பிட சொல்லுவான்’ என மோசமாக திட்டிவிட்டு சென்றார்கள், பலரும் பரப்புரையை வரவேற்றனர். இவ்வாறாக மக்கள் திரளுடன் தி.நகர் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாம் கட்டப் பரப்புரையை மே 17 இயக்கத்தினர்  நடத்தி முடித்தனர்.. 

தொடர்ந்து மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள் உணர்வாளர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »