சிதம்பரம் முதற்கட்ட பரப்புரை : ஏப்ரல் 7, 2024

“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பரப்புரையில் 7/4/2024 அன்று, தோழர். திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை  சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர். திருமாவளவன் அவர்களை ஆதரித்து, சிதம்பரம் தொகுதியில் உள்ள சாமியார் பேட்டை, பரங்கிப்பேட்டை, முட்லூர், பெரியார் சிலை ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். மே 17 இயக்கத் தோழர்கள் துண்டறிக்கைகள் விநியோகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்த பரப்புரையில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை :-

“இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை அடைந்த பிறகு நடைபெறும் தேர்தல்களில் இது வித்தியாசமான தேர்தல். இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் யார் பிரதமர் ஆக வேண்டும் என்று நடைபெற்ற தேர்தல்கள். ஆனால் இந்தத் தேர்தல் யார் பிரதமர் ஆகக்கூடாது என்று நடைபெறும் தேர்தல்.

மோடியின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு படாதபாடு பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை நாசமாகும் ஜிஎஸ்டி வரியை விதித்தவர் மோடி.  ஒரு ரூபாய் ஷாம்பு, இரண்டு ரூபாய் தீப்பெட்டி, பத்து ரூபாய் சோப்பு என்று  அன்றாடம் நாம் பயன்படுத்தும் எளிய பொருட்களுக்கு வரி விதித்தது பாஜக.

மோடி ஒவ்வொருமுறை தமிழ்நாடு வரும்போதும் தப்பும் தவறுமாக திருக்குறளைப் பேசுவதைப் பார்த்தால் திருவள்ளுவரே தாங்க மாட்டார்.  ஜல்லிக்கட்டு போன்ற தமிழின உரிமைக்காக வீதிக்கு வந்து போராடினான் தமிழன், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மோடிக்கு முதல் தோல்வியைப் பரிசளித்தான் தமிழன்.

ஜல்லிக்கட்டு, காவிரி, ஸ்டெர்லைட் என தமிழரின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடியதற்காக என் மீது  47 வழக்குகள்  பதியப்பட்டன. சிறை உணவினால் என் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. அப்பொழுது  எங்களுக்காக குரல் கொடுத்தவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள்.

சிதம்பரம் பரப்புரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

இதே போன்றுதான் சிறை உணவில் எந்த நஞ்சைக் கலந்தார்களோ,   சிறைக்கு சென்ற பிறகே ஜெயலலிதாவின் உடல்நிலை  கெட்டது. ஜெயலலிதா இயற்கை எய்திய பிறகு, அதிமுக கட்சி மூன்றாக உடைந்து கட்சி சின்னமும் பறிபோனது. எனவேதான் அரவிந்த் கெஜ்ரிவால், கைதுக்குப் பிறகு சிறை உணவு வேண்டாம், வீட்டு உணவு வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதிமுகவை மூன்றாக உடைத்த கட்சி பாஜக. ஆனால் மோடியின் அடிமையாக எடப்பாடி பாஜக உடன் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறார்.

சென்னை வெள்ளம், வறட்சி என எந்த இயற்கை பேரிடரின் போதும் நம் வரிப்பணத்தை தராமல், நமக்கு துரோகம் இழைத்த கட்சி பாஜக. தமிழின விரோதி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த பாமக, அதிமுக, அமமுக தமிழ்நாட்டை நாசம் செய்ய துணை போயிருக்கின்றன. தமிழ்நாட்டை வடநாட்டுக்கு காட்டி கொடுக்கும் துரோகத்தை செய்யத் துணிந்து இருக்கின்றன.

எல்லா எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக்கும் சென்ற அமலாக்கத்துறை ஏன் எடப்பாடி பழனிச்சாமி போன்ற அதிமுக தலைவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை? ஏனென்றால் எடப்பாடிக்கும் பாஜகவிற்கும் மறைமுகக் கூட்டணி இருப்பதால்தான். அதனால் தான் எடப்பாடி அவர்கள் மோடியை விமர்சித்துப் பேசவே இல்லை.

வன்னியர் முதல் நாடார் வரை (இடைநிலை சமூகங்கள்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை வாய்ப்புகளை, மருத்துவ இடங்களைத் தராமல், உயர் சாதிக்குத் தாரை வார்த்த கட்சி பாஜக. பாஜக நினைத்திருந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றிருக்கலாமே? ஏன் அவ்வாறு  செய்யவில்லை? பாமக இதற்கு பதில் சொல்லுமா? ஆனால் இடைநிலை சமூக மக்களின் வேலைவாய்ப்பிற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடியது.

பாஜகவிடமிருந்து அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்றால், எடப்பாடியிடமிருந்து அதிமுகவைக்  காப்பாற்ற வேண்டும். இதைப்போன்றே நாம் தமிழர் சீமான் வாக்குகளை பிரிப்பதற்கு மட்டுமே வேலை செய்கிறார். முனைவர் தொல். திருமாவளவன் அவர்களை விட சிறந்த வேட்பாளரை சீமான் நிறுத்த முடியுமா?

நாடாளுமன்றத்தில் 70% வருகை பதிவு வைத்திருப்பவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள். 10% வருகையுடன் மோஸ்ட் ஆப்சென்ட் (most absent) ஆக இருக்கும் உறுப்பினர் அன்புமணி அவர்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக திருமாவளவன் அவர்கள் இருக்கிறார். எனவே அவரைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். நம் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும்”-என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.

தென்சென்னை பரப்புரை :

மே 17 இயக்கத் தோழர்களால் தென்சென்னையில் பரப்புரை கடந்த ஏப்ரல் 2-ந் தேதி முதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் ஏழாம் நாளான 7, ஏப்ரல் 2024, ஞாயிறு அன்று, காலையில் கோயம்பேடு மார்க்கெட்டில்  தோழர்களால் துண்டறிக்கை விநியோகம் முன்னெடுக்கப்பட்டது. அன்று மாலையில் தியாகராகர் நகர் பேருந்து நிலையம், இரயில்வே நிலையம், கடைகளைச் சுற்றிலும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

கோயம்பேடு பரப்புரையில் தோழர்கள் ஈடுபட்ட போது சுமை தூக்கும் தொழிலாளர் ஒருவர் “நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்” என கூறியபடியே சென்றார். “உங்கள் உழைப்பு வீண் போகாது – நாங்க மோடிக்கு ஓட்டு போட மாட்டோம்” என்று வியாபாரிகள் பலரும் உறுதியளித்தனர். பரப்புரைக்கு இடையூறு செய்த ஒரு சங்கியை அங்கு பூ விற்கும் அம்மா ஒருவர் “இது தமிழ்நாடு, மோடிக்கெல்லாம் ஓட்டு போட முடியாது, புடிக்கலன்னா நீ வேணாலும் உன் ஊருக்கு போ” என முந்திக் கொண்டு பதிலடி கொடுத்தார். தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் பெயர்தான் அந்த அம்மாவின் பெயரும் என்பது மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.

தி.நகர் துண்டறிக்கை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, துண்டறிக்கை வாங்கிப் படித்த ஒன்றிய அரசு அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் ஒருவர் முன்வந்து தோழர்களிடம் சிறிது நேரம் பேசினார். ஒன்றிய அரசுப் பணியில் மிகவும் நெருக்கடிகள் உள்ளத்தையும், ஒப்பந்தப் பணியிலேயே ஆட்களை நியமிப்பதாகவும் மிக வேதனையுடன் கூறினார். மேலும் பலர் மோசமான வார்த்தைகளால் பாஜக அரசை திட்டி தீர்த்தனர்.

பாஜகவுக்கான எதிரான பரப்புரை மேற்கொண்ட இயக்கத் தோழர்கள் துண்டறிக்கைகளை வழங்கியதை வரவேற்றனர், கை கொடுத்தனர், புன்னகைத்தனர், வாழ்த்தினர். நல்ல முன்னெடுப்பு, என்ன இயக்கம் என கேட்டனர். ஒரு சிலர் துண்டறிக்கை கொடுத்த போது முதலில் வாங்காமல் தோழர்கள் கீழே இருந்ததை பார்த்து விட்டு வந்து வாங்கினர். சிலர் திரும்பி வந்து நிச்சயமா, சத்தியமா பாஜகவிற்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொன்னார்கள். இளைஞர் ஒருவர் துண்டறிக்கை படித்ததும் கேட்காமலேயே சொம்பில் தண்ணீர் கொடுத்தார். இதையெல்லாம் பார்க்கும் போது மக்கள் பாஜக கட்சி மீதும், மோடி மீதும் மிக்க கோபமாக இருப்பதை உணர முடிந்தது.

இவ்வாறு தமிழின விரோத பாஜகவிற்கு எதிரான பரப்புரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »