திருச்சி இரண்டாம் கட்டம் மற்றும் தென்சென்னை பரப்புரை: ஏப்ரல் 6, 2024

“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பரப்புரை 6/4/2024 அன்று திருச்சியின் மையப்பகுதியில் நடைபெற்றது. தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், மதிமுக கட்சி வேட்பாளர் தோழர் துரை. வைகோ அவர்களை ஆதரித்து திருச்சியில் இரண்டாம் கட்ட பரப்புரையை மேற்கொண்டார். இருபதுக்கும் மேற்பட்ட மே 17 இயக்கத் தோழர்கள் பேருந்து நிலையம், கடை வீதி மற்றும் வீடு வீடாக சென்று துண்டறிக்கை விநியோகம் செய்தனர். இப்படியாக மக்களின் பெரும் வரவேற்புக்கிடையில் திருச்சி பரப்புரை நடந்தது. 

இந்த பரப்புரையில் தோழர். திருமுருகன் காந்தி ஆற்றிய உரையின் சுருக்கம் :

இந்த தேர்தலில் யார் பிரதமர் என்பதை விட யார் பிரதமராகக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மோடியின் ஆட்சியில் கடந்த 10 வருடங்களில் தமிழ்நாடு படாதபாடு பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்திலும் வரி. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு உணவுக்கு கூட வரியை போட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. இனியும் பாஜகவை அனுமதித்தால், வாழ்வதற்கு கூட வரி போட்டு விடுவார்கள். ஏற்கனவே புதைப்பதற்கும், எரிப்பதற்கும் கூட வரி போட்டுவிட்டார்கள். பெட்ரோல் டீசல் விலை ஏறிவிட்டது. அரிசி, காய்கறி, பருப்பு என அனைத்துமே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போக பெட்ரோல் தேவைப்படுகிறது. அந்த பெட்ரோலும் டீசலும் விலை  உயரும் போது இவற்றின் விலையும் உயர்கிறது. 

மோடி ஆட்சியில் லாரி இன்சூரன்சுக்கு 3 மடங்கு வரி, சாலை வரி 4 மடங்கு, சுங்கச்சாவடி வரி 3 மடங்காக இருக்கிறது. ஒரு நண்பர் என்னிடம் இரண்டு லாரி வைத்திருந்ததாகவும் வரிக்கு மேல் வரியாக கட்டி கடைசியில் நட்டமாகி இரண்டையும் விற்று விட்டதாகவும் புலம்பினார். கோயிலை, பாலங்களை, சாலைகளை மட்டுமே திறந்து வைக்கிற மோடி, எங்காவது பள்ளிக்கூடத்தை, கல்லூரியை, பல்கலைக்கழகத்தை, தொழிற்சாலையை திறந்து வைத்து நாம் பார்த்திருக்கிறோமா? இது ஏனென்றால் சாலை போடுவதற்கும் பாலம் கட்டுவதற்கும் ஏழரை லட்சம் கோடியை கொள்ளையடித்து இருக்கிறது மோடி அரசு. இதை சொன்னது மோடி அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய சிஏஜி அறிக்கை. தமிழ்நாட்டின் இரண்டரை வருட பட்ஜெட் பணம் ஏழரை லட்சம் கோடி. ஒரு நெடுஞ்சாலை துறையில் மட்டும் அவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார் மோடி. ஒரு வேலையும் செய்யாமல் தினம் தினம் புதுப்புது ஆடையாக உடுத்திக்கொண்டு கோவில், சாமி என்று திரிவதற்கு ஒரு பிரதமர் எதற்கு? பத்திரிக்கையாளரைப் பார்க்க மாட்டார். பாராளுமன்றத்துக்கு போக மாட்டார் வெள்ளம், புயல் வந்த போதும் வர  மாட்டார். ஆனால் கோயில், பூசை என்றால் உடனே சென்று விடுவார். அதற்கு ஒரு பூசாரி போதுமே?

மே பதினேழு இயக்க தோழ்ர்கள் திருச்சியில் பரப்புரையின் போது எடுத்த புகைப்படம்

சாமி, பூசை மட்டுமே தெரிந்தவரை பிரதமர் ஆக்கிவிட்டால், நாம் கொரோனாவில் தவிக்கும் போது ஆக்சிஜன் சிலிண்டர் தரும் அளவிற்கு அறிவு இருக்குமா? தீர்க்கத் தெரியுமா? அறிவியல் தெரிந்தவனுக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்று தெரியும். ஆகையால் நம் பிரச்சனை என்னவென்று புரிந்து அதை பாராளுமன்றத்தில் பேசக்கூடிய ஆட்களைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக ஒலித்த ஒரு குரல் இருக்கிறது என்றால் அது வைகோ அவர்களின் குரல்தான். அவர் தமிழர்களுக்காக போராடிய எத்தனை மன்றங்கள் இருக்கிறது. அந்தக் கட்சியின் வேட்பாளர் துரை. வைகோ அவர்கள் இந்த தொகுதியில் நிற்கிறார்கள். தீப்பெட்டி என்றதும் கூட ஒன்று நினைவுக்கு வருகிறது. ஏழைகளின் குடிசை தொழிலான தீப்பெட்டி தயாரிப்பதற்கு 12% வரி போட்டு இருக்கிறார் மோடி.

எடப்பாடி மோடியை எதிர்ப்பதில்லை. மோடியை எதிர்த்ததனால் என் மீது 47 வழக்குகள், 2 முறை சிறை. காவிரி பிரச்சனைக்கு போராடிய போது தேசதுரோக வழக்கு பதிந்தவர் எடப்பாடி. அதனால் பிஜேபிக்கு எதிராக அரசியல் செய்யாதவர் எடப்பாடி. ஆக இந்த கும்பலுக்கு எல்லாம் முடிவு கட்டுவது உங்களின் வரலாற்றுக் கடமை. பத்தாண்டுகளாக இவர்களை எதிர்த்து போராடிய இயக்கம் மே 17 இயக்கம். நாங்கள் எந்த வேளையிலும் சமரசம் கொண்டதில்லை. பாஜகவை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியாமல் நாங்கள் ஓயப்போவது இல்லை.

தற்போது நமது வாழ்வாதாரத்தை சீரழிக்கும் பத்து மடங்கு விலைவாசி ஏற்றம் மோடியினால் நிகழ்ந்தது. மோடியின் தமிழர் விரோத நடவடிக்கைகளால் நிகழ்த்தது. தமிழருக்கு செய்த நல்ல விடயம் என்று ஒரு விடயத்தைக் கூட மோடியால் கூற இயலவில்லை. ’எந்த நல்லதும் செய்யாததால் ஆட்டிற்காக ஓநாய் அழுவது போல கச்சத்தீவுப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறது’ பாஜக. 10 வருடம் ஆட்சியில் இருந்தும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மீட்டுத் தர எண்ணம் இல்லை.

இன்று ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாத பொருளே இல்லை எனலாம்.  உழைக்கும் வர்க்கம் பருகும் டீ, பால், அதில் சேர்க்கும் சர்க்கரை முதல் சிலிண்டர் எரிவாயு வரை ஜி.எஸ்.டி வரிகளால் விலை உயர்ந்து  இருக்கின்றன.

“சிலிண்டர் மானியத்தை காசாக தருகிறோம்” என்றார். முதல் நான்கு மாதம் வந்தது. மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 12லிருந்து 8ஆக குறைத்தார்கள். பின்பு 4ஆக குறைத்தார்கள். இப்பொழுது சுத்தமாக நிறுத்தப்பட்டு விட்டது. பெட்ரோலிய கச்சாப் பொருள் உலகளவில் ஒரு பேரல் 120 டாலர் விற்ற போது இங்கு 60 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைத்தது. இன்று 80 டாலர், அப்படியென்றால் 40 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும். ஏன் குறைக்க மறுக்கிறார்கள் என்றால், அதானியிடம் தான் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இருக்கிறது. நம் காசை பிடுங்கி அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

திருச்சி ஏர்ப்போர்ட் சாலை- பரப்புரை

அரிசி மூட்டையாக இருந்தால் அதற்கும் வரி, கிரைண்டருக்கு 18% வரி, சப்பாத்தி செய்யும் எந்திரத்துக்கு 5% வரி. ஏனென்றால் வட இந்தியர்கள் சாப்பிடுவது சப்பாத்தி. அதனால் அதற்கு வரி குறைவு. ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்திக்காரர்களுக்கே வேலை. இதையெல்லாம் கேட்டால் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை, இராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று திசை திருப்புகிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்தால் இங்க உள்ள மளிகை கடைகளுக்கே ஆபத்து. அம்பானி ரிலையன்ஸ் கடைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். நம் அண்ணாச்சிகளின் வியாபாரம் நசிந்து போகும். இன்று இங்கு கடைத்தெருவில் இருப்பது போல அண்ணாச்சி கடைகள் வடமாநிலங்களில் நாம் நடத்த முடியுமா?

மோடி ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகும். ஏனென்றால் நேற்றுதான் வாகனத்தில் சோதனை செய்ததற்காக ஒரு பாஜக வேட்பாளர் காவலரையே 10 வருடம் கோர்ட்டுக்கு அலைய விடுவேன் என மிரட்டுகிறார். இவர்கள் வென்றால் நம்மையெல்லாம் நடமாட விடுவார்களா? இவர்களை விரட்டி விட வேண்டாமா?

டெல்லி முதல்வர், ஜார்கண்ட் முதல்வர் போல முதல்வர்களையே சிறைக்குள் தள்ளும் பாஜக ஜெயித்தால் வருங்காலத்தில் எளிய மக்களின் நிலை என்ன?

வடநாட்டு கட்சியான பாஜக ஒழிந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும். அண்ணாமலை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பிஞ்ச செருப்பு என்றார். அவருக்கு தமிழர்கள் செருப்பு பிந்துவிடும் என்பார்கள். ஏனெனில் கீழப்பழுவூர் சின்னசாமி அவர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று கூறி தன் உயிர் ஈந்தார். இந்த திருச்சி மண்ணில் தமிழினத் துரோகிகள் வெற்றி பெறலாமா?

காமராசர், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர் போன்று மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் பாஜக, தன் கட்சியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நல்லது செய்த தலைவர் என்று ஒருவரைக் கூற முடியுமா? எனவே தேர்தலில் மட்டும் அல்ல, தேர்தலுக்குப் பின்னும் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். பல சட்ட விரோத செயல் செய்யும் ரவுடிகளை கட்சியில் இணைக்கும் பாஜக முகத்திரை கிழிக்கும் வேலையை தமிழ் மண்ணில் தமிழர்கள் நாம் முன்னெடுப்போம்” என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.

திருச்சி பரப்புரையில் மே பதினேழு இயக்கத்தின் அர்ப்பணிப்பிற்கும், தோழர் திருமுருகன் காந்தியின் ஆதரவிற்கும் தோழர் துரை. வைகோ அவர்கள் நன்றி தெரிவித்தார். அவர் கூறியது :

“மாசில்லா மாணிக்கம் தோழர் சகோதரர் திருமுருகன் காந்தி அவர்கள், அவரிடம் நாங்கள் கேட்பதெல்லாம், அவர் உடல்நலனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். சித்தாந்த ரீதியாக நீங்கள் இயக்கமாக இருக்கிறீர்கள், நாங்கள் தேர்தல் அரசியலில் இருக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். எங்களுக்கு பக்கபலமான இயக்கம் நீங்கள். வெவ்வேறு ஊரிலிருந்து நம் வெற்றிக்காக இங்கு வந்திருக்கிறீர்கள். அதற்கு மனமார நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது. என் அப்பாவிற்காக நான் களத்தில் இறங்கி இருக்கிறேன், இனி‌ பின்வாங்க மாட்டேன். இனி மே17-யைத் தேடி நான் வருகிறேன். தமிழ்நாட்டிலுள்ள முக்கியத் தலைவர்களில் மிக முக்கிய தலைவர் என் சகோதரர் திருமுருகன். உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, சேர்ந்து பயணிப்போம், என்னுடைய எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு நிச்சயமாக உங்கள் இயக்கம் எனக்குத் தேவை. இப்போது முக்கிய பொறுப்பாளர்களிடம் உங்களுக்கு தேவையானதை செய்துத்தர சொல்லியிருக்கேன். எதுவேண்டுமானாலும் கேளுங்கள். உங்கள் பிரச்சாரம் நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது என்று எனக்கு தெரிய வந்தது. மேலும் பிரச்சாரம் செய்வோம்” – எனக் கூறினார். இறுதியில் மதிமுக நிர்வாகிகள் நம் தோழருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தென்சென்னை பரப்புரை:

தென்சென்னை பரப்புரைக்காக சென்னையில் உள்ள தோழர்கள் இணைந்து, மாலை (6/4/2024) கிண்டி ரயில் நிலையம்,மெட்ரோ நிலையம், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையம், கிண்டி இண்டஸ்ட்ரியல் பேருந்து நிலையங்களில் துண்டறிக்கை மக்களிடம் வழங்கி பாஜகவுக்கு எதிரான தீவிர பரப்புரை மேற்கொண்டனர்.

அப்போது நடத்திய பரப்புரையின் போது, காவி உடை அணிந்து சிவனடியார் போன்ற ஒருவரிடம் துண்டறிக்கை கொடுத்ததும், அதை வாங்கி வெளிச்சத்தில் படித்து விட்டு திரும்ப வந்து நீங்க செய்வது நல்ல வேலை எனப் பாராட்டி விட்டு நண்பர்களுக்கு சில துண்டறிக்கைகளை வாங்கிச் சென்றார். பலர் பரப்புரையை வரவேற்றனர், சிறந்த முன்னெடுப்பு என வாழ்த்தினர். துண்டறிக்கைகளை படித்துவிட்டு சில கல்லூரி மாணவர்களும் பரப்புரைக்கு நாங்களும் வருகிறோம் எனச் சொல்லி அழைப்பு எண்ணையும் எங்களிடம் கொடுத்து சென்றனர்.

இவ்வாறு மே பதினேழு இயக்கத்தின் தேர்தல் பரப்புரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான இந்த பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம். தொடர்புக்கு: 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »