மே 17 இயக்கத்தின் நாகை மற்றும் தென்சென்னை தொகுதி பரப்புரை எப்ரல் 4, 2024

பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து, தமிழ்நாடு தழுவிய அளவில் தோழமை சக்திகளுக்கு ஆதரவாக பரப்புரையை முன்னெடுப்பதாக மே 17 இயக்கம் அறிவித்தது. அதன்படி நான்காவது நாளான 4-4-2024 அன்று நாகை நாகை தொகுதி நாடாளுமன்ற வேட்பாளரான கம்யூனிஸ்ட் கட்சியின் திரு. வை. செல்வராஜ் அவர்களை ஆதரித்து வலங்கைமான், நன்னிலம், குடவாசல், திருவாரூர் தொகுதிகளில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து பரப்புரை செய்தார்.

நாகை தொகுதி பரப்புரை குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பதிவு :

நாகை தொகுதியில் வலங்கைமானில் பரப்புரையை நேற்று தொடங்கினோம். இரண்டு இடங்களில் வலங்கைமானில் உரையாற்றினோம். தோழர்.குடந்தை அரசன் மற்றும் பெருந்திரளாக விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சித் தோழர்கள் இணைந்து கொண்டார்கள். வலங்கைமானிற்கு பின்னர் நன்னிலம், குடவாசல், திருவாரூர் என பரப்புரையை இரவு 10 மணிக்கு நிறைவு செய்தோம். பாஜகவின் 10 ஆண்டுகால வேதனை ஆட்சியை பட்டியலிட்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் தோழர் வை.செல்வராஜ் அவர்களுக்கான பரப்புரையாக மக்களிடம் ஆதரவு கேட்டோம்.

வெகுமக்கள் பரப்புரையின் போது கவனம் செலுத்திக் கேட்கிறார்கள். அரசியலை கவனிக்கிறார்கள். பகுத்துப்பார்க்கிறார்கள். கை உயர்த்தி அங்கீகரிக்கிறார்கள், கைகொடுக்கிறார்கள், அரவணைக்கிறார்கள். மோடிக்கு எதிரான மனநிலை வலுவாக உள்ளதை கவனிக்க இயலுகிறது. இம்மக்களை அரசியல்படுத்தாமல் நலத்திட்டங்களை மட்டுமே மாற்றுத்திட்டங்களாக அறிவிப்பது அரசியலற்ற நிலைக்கு தள்ளும். நேருக்குநேராக இந்துத்துவ அரசியலை விமர்சிக்க வேண்டியுள்ளது.

பாஜக இந்தத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் கருத்தியல் பரப்புரையை மேற்கொண்டுள்ளது. 52-54 பக்க புத்தகத்தை பாஜக கொண்டுவந்துள்ளது. இப்புத்தகம் முழுக்க ‘தமிழின எதிர்ப்பு’ அரசியலை மையப்படுத்தி உள்ளது. ‘பெரியார் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பை கொச்சைப்படுத்தல், நாட்டார் தெய்வங்களை இந்துத்துவமயமாக்கல்’ என விரிவான கருத்தியல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் கிட்டதட்ட 1 லட்சம் முதல் 1.5 லட்சம் புத்தகங்களை விநியோகிக்கிறது. இவ்வாறான புத்தக வடிவிலான எளிய பிரச்சாரத்தை மே 17 இயக்கம் 2011 முதல் மேற்கொண்டு வந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 24 பக்க அளவிலான பாஜகவினை அம்பலப்படுத்தும் 2 லட்சம் புத்தகங்களை எம் சொந்த செலவில் அச்சிட்டு 33 தொகுதிகளில் பரப்புரை செய்தோம். எமது தோழர்களின் மாதாந்திர சம்பளத்தில் பணம் ஒதுக்கி இப்பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.

இந்த வடிவத்தை பாஜக கையிலெடுத்துக் கொண்டுள்ளது. இதை திராவிட-முற்போக்கு கட்சிகள் மேற்கொள்ளாமல் பழைய வடிவங்களை நம்புகின்றன அல்லது சமூகவளைதளத்திற்கான குறுகியகால பிரச்சார வீடியோ வடிவங்களை நடத்துகின்றன. இவை தற்காலிக வெற்றிக்கு பயன்படும். ஆனால் நீண்டநாள் போரில், இந்துத்துவ அரசியல் முன்னேறும்.

பாஜகவின் இந்த புத்தகத்திற்கு எதிர்வினையாக மே 17 இயக்கமும் புத்தகத்தை 32 பக்க அளவில் அச்சிட்டுள்ளது. எந்த நிதியுதவியும் இல்லாத நிலையில் பெரும் கடன் சுமையோடு இதை செய்து முடித்துள்ளோம். எதிரிக்கு எதிரான கருத்தியல் போரில் சமரசம் செய்துகொள்ள இயலாது. தமிழ்த்தேசிய பெருவிழாவின் கடன் சுமையோடு இச்சுமையையும் சுமந்துகொண்டே 7 தொகுதிகளில் பரப்புரையை துவக்கி நடத்துகிறோம்.

கடந்த 4 நாட்களாக பரப்புரையில் தோழர்கள் ஈடுபட்டுள்ளனர். 3 லட்சம் துண்டறிக்கை, லட்சம் புத்தகங்கள் என எமது சேமிப்பைக் கொடுத்து பரப்புரை நடந்துகொண்டிருக்கிறது. இதை கருத்தியல் தளத்திலேயே நகர்த்துகிறோம். 2024 தேர்தல் என்பதில் தோற்றாலும் கருத்தியலாக வலுப்பெற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் யுக்தி வகுத்துள்ளது. இதை புரிந்து நாம் செயலாற்றிட வேண்டும். இதனாலேயே மே 17 இயக்கம் நாட்டார் வழிபாட்டிலிருந்து பரப்புரையை தொடங்கியது.

மேம்போக்கான பரப்புரைகள் பயன்தராது என்பதில் உறுதியாக உள்ளோம். தோழமை கட்சிகளுக்கு மட்டுமே இந்த வேலைத்திட்டம் பிடிபடுகிறது. வீதிக்கு வராமல் வேலை நடக்காது. பாதுகாப்பாக இணையத்திற்குள் இயங்குவதை விடுத்து வீதியில் இறங்குங்கள். பெரிய கட்சிகளின் பரப்புரை கூட்டங்களில் பேசப்படும் அரசியலைவிட நீங்கள் வீதியில் சாமானியனோடு பேசும் அரசியல் வலிமையானது. இதை ஒவ்வொரு நாளும் பரப்புரையில் காண்கிறோம். மக்கள் துயருற்று இருக்கிறார்கள். அவர்கள் துயரத்திற்கு ஆறுதல் அளித்து, நம்பிக்கைக் கொடுக்க நாம் களமிறங்க வேண்டும். இது கட்சிகளுக்கான தேர்தல் என்பதைக் கடந்து சாமானியனின் வலிகளுக்கு மருந்திட்டு, கருத்தியல் தளத்தில் போர்பிரகடனம் செய்யப்பட வேண்டிய தேர்தல். இச்சமயத்தில் வீட்டில் முடங்கிவிடாதீர்கள், வீதிக்கு வாருங்கள்.

சென்னை, திருச்சி, சிதம்பரம், கோவை, உதகை என பரப்புரையை மே 17 இயக்கத் தோழர்கள் விரிவாக நடத்துகிறார்கள். தோழர்களை 9884864010 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு வாய்ப்புள்ள இடத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள், விசச்செடியை வேரோடு பிடுங்கி எறிவோம். நாம் வெல்வோம்.

தென்சென்னை பரப்புரை:

தென்சென்னையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தொடங்கி விருகம்பாக்கம் பூ மார்க்கெட், சாலிகிராமம், எம்.ஜி.ஆர் நகர், காசி தியேட்டர் சிக்னல் வரையில் மக்களின் பேராதரவுடன் மே 17 இயக்கத் தோழர்கள் பரப்புரை நடத்தினர்.

எம்.ஜி.ஆர். நகர் பிரச்சாரத்தில் தோழர்களிடம் ஒரு பூ விற்கும் அம்மா தானாகவே முன்வந்து, பாஜகவிற்கு ஓட்டு போட்டால் எல்லா நன்மையும் பார்ப்பனர்களுக்கே நடக்குமென்று கூறினார். அது மட்டுமல்லாது, பத்து துண்டறிக்கைகள் தெரிந்தவர்களிடம் கொடுப்பதாக வாங்கிக் கொண்டார்.

அது போல முந்தைய நாள் மைலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே பிரச்சாரம் செய்த போது, அப்பர்சாமி கோவிலில் இருந்து வெளியே வந்த ஒரு முதியவர், பாஜக காரர்கள் மதத்தை வைத்து ஏமாற்றுபவர்கள், தமிழுக்கு எதிராக இந்தியைத் திணிக்க திட்டம் போடுபவர்கள் என்று இயல்பாக பேசி விட்டு கடந்து சென்றார்.

தொடர்ந்து மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »