மே 17 இயக்கத்தின் தேர்தல் பரப்புரை பயணம் 2024

பாஜக-ஆர்.எஸ்.எஸ் அந்நிய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டி ஆரிய இந்துத்துவத்தை வீழ்த்த அருள்மிகு அம்மனுடனும், அய்யானாருடனும் கைகோர்த்து களம் காண்போம் என ஆட்டுகிடா நேர்ந்து விடுதல், கறி விருந்துடன் “வீழ்ட்டும் பாஜக வெல்லட்டும் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சார பயண தொடக்க விழாவை திருவள்ளுவர் சிலை, சென்னை-மயிலாப்பூரில் 31 மார்ச் 2024, அன்று மே பதினேழு இயக்கம் பாசிச எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கியது.

2019-ல் தேர்தலில் எவ்வாறு பாசிச பாஜகவை வீழ்த்த மே பதினேழு  இயக்கம் தேர்தல் பரப்புரை செய்ததோ, அதேபோன்று 2024 தேர்தலிலும் மதவெறி பிடித்த பாஜக கட்சியை வீழ்த்த 2024, மார்ச் 31,தேதியன்று தேர்தல் பரப்புரையைத்  தொடங்கியது.  கடந்த பத்தாண்டுகளாக தமிழர் விரோத திட்டங்களை மட்டுமே முன்னெடுத்து தமிழர்களுக்குத் தரவேண்டிய நிதியையும் தராமல் தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக-வை வீழ்த்த மே 17 இயக்கம் உறுதி பூண்டுள்ளது.  எனவே வடநாட்டு இந்துத்துவ கட்சியான பாஜக-வை விரட்டியடிக்க தமிழர் நெறியில் பரப்புரை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

வரும் பொதுத்தேர்தலில் தமிழர் விரோத பாஜக-வை வீழ்த்த ‘வீழட்டும் பாஜக, வெல்லட்டும் தமிழ்நாடு’ என்ற முழக்கத்தோடு மே பதினேழு இயக்கம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியை உள்ளடக்கிய தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்காக, 31-03-2024 ஞாயிறு காலை, தமிழர்களின் வழிபாட்டு பண்பாட்டின்படி, சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு, ஆட்டுக்கிடா நேர்ந்துவிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார் ஆகியோரும், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களும் தோழர்களுடன் பங்கேற்றனர்.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்,

“தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியை தேர்தலில் தோற்கடிப்பதற்காகவும், பாஜக-வின் இந்த 10 ஆண்டுகால வேதனை ஆட்சியை மக்களிடையே அம்பலப்படுத்துகின்ற விதமாகவும் பரப்புரையை நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டணியிலே முற்போக்கு அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், மார்க்சிய அமைப்புகள், அம்பேத்கரிய அமைப்புகள் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் நலனை முன்வைத்து கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அமைப்புகளின் கூட்டணிதான் தமிழ் தேசியக் கூட்டணி.

கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு பாஜக முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறது. மோடி மட்டும்தான் தமிழ்நாட்டை வஞ்சித்த மிக மோசமான பிரதமர் என்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.  தமிழ்நாட்டின் நெருக்கடிகள்– சென்னை பெருவெள்ளம், ஒக்கி புயல், நிவர் புயல், மிக்ஜாம் புயல் என எந்தவொரு பேரழிவுக்குமே பாரதிய ஜனதா கட்சி எந்த விதமான நிவாரணத்தையும் கொடுக்கவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவும் இல்லை.

 ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்தக்கூடிய  மனநிலை மோடிக்கு கிடையாது. தமிழ்நாட்டை வஞ்சிப்பது மட்டும்தான் மோடியின் ஒரே வேலைத்திட்டமாக இருக்கிறது. தமிழை விட சமஸ்கிருத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்குவது, தமிழை பின்னுக்குத் தள்ளி இந்தியைத் திணிப்பது, தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை ஒரு ஆளுநரை வைத்து நசுக்குவது என பாஜக தமிழர்களை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டின் சட்டம் நிறைவேற்றுகின்ற உரிமைகளையும் கூட அவர்கள் தடுத்து வைத்திருக்கிறார்கள்.

மோடி ஆட்சியில் இசுலாமியர், கிருத்துவர், பட்டியலின மக்கள் படுகொலை அதிகரித்திருக்கிறது. வன்னியர், கவுண்டர், நாடார் போன்ற  பிற்படுத்தப்பட்ட மக்களின் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை மோடி அரசு ரத்து செய்திருக்கிறது. பாஜக-வுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். மேலும் வங்கி, சுங்கத்துறை, எல்.ஐ.சி, வருமான வரித்துறை போன்றவற்றில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வேலைவாய்ப்புகளை பாஜக அரசு மறுத்திருக்கிறது.

பாமகவின் மருத்துவர் அன்புமணி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டார். ஆனால் பாஜக ஆட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல்  தேர்தலில் போட்டியிடாத நிர்மலா சீதாராமனுக்கும், ஜெய்சங்கருக்கும் அமைச்சர் பதவி கொடுத்தார்கள். அதேபோல் அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களுக்கும் பதவி தராமல்  உயர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி  கொடுக்கிறது பாஜக.  இதை இந்த சமூக இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி பகிர்வையும் கொடுக்க மறுக்கிறது பாஜக. இது மோடி சம்பாதித்த பணம் கிடையாது. உத்திரப்பிரதேச மக்களை விட 4 மடங்கு அதிகமாக ஜிஎஸ்டி கொடுக்கும் தமிழர்களுக்கு எந்த நிதிப்பகிர்வும் கொடுக்கப்படவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் பத்தாயிரம்  கோடி ரூபாய் வாங்கி இருக்கிறது பாஜக. காவிரி மேலாண்மை வாரியம், மேகதாட்டு அணை விவகாரம் என அனைத்திலும் தமிழின விரோத நடவடிக்கையே செய்கிறது பாஜக.

இதுவரை இலங்கையால் 700-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 12 மீனவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோட்டைப்பட்டிணத்தில் ராஜ்கிரண் என்ற மீனவர் திருமணமான சில நாட்களிலேயே படுகொலை செய்யப்பட்டார். அதற்காக வழக்கு பதிவு செய்வதற்கு கூட மோடி அரசு தயாராக இல்லை. நாங்கள் போராடி பிண மறுகூறாய்வு செய்ய வைத்தோம். மேலும் 20 நாட்டிக்கல் மைல் கடந்து மீன்பிடிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வந்து மீனவர்களை மோடி அரசு வஞ்சிக்கிறது.

விவசாய நிலங்களை தேசிய நெடுஞ்சாலைக்காக எடுத்துக் கொள்கிறது  மோடி அரசு. என்.எல்.சி-க்கு கையகப்படுத்தப்பட்ட 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு  முறையான  நட்டஈடு வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசின் அந்த நிறுவனத்தில் தமிழர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்படவில்லை. முறையான  நிவாரணமும் வழங்கப்படவில்லை. விளைநிலங்களில் புல்டோசரை இறக்கியதையும் என்.எல்.சி-யால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தினால் அழிந்ததையும் நாம் பார்த்தோம்.

ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களில் பின்னலாடை நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மோடி அரசே காரணம். பருத்தி விலையை ஏற்றியதோடு பருத்தியை வங்காளதேசத்திற்கு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்தது மோடி அரசு. இதனால் கொங்கு மண்டலத்தில் ஒரு லட்சம் நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. ‘வெள்ளைத் தங்கம்’ என்று சொல்லக்கூடிய பருத்தியை பதுக்கி வைத்தது பாஜக ஆட்சியில் இருக்கும் மகாராஷ்டிரா, குஜராத்  அரசுகள்.

 சிவகாசி பட்டாசுகளை தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை மோடி அரசு. சென்னை துறைமுகத்திற்கு வரக்கூடிய கப்பல்களை ஆந்திராவில் உள்ள அதானி துறைமுகத்திற்கு திருப்பி விட்டதால் சென்னையில் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்தனர். இவ்வாறு சென்னைக்கு வரக்கூடிய முதலீடுகளை உத்தரபிரதேசத்திற்கும், பீகார், குசராத்திற்கும் மோடி அரசு திருப்பி விட்டதால் தமிழ்நாட்டில் தொழில் முடக்கம் ஏற்பட்டது.

இலங்கைக்கு சென்ற அண்ணாமலை “ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று கூறினாரே? ஈழத்தமிழர்க்கான  குடியுரிமை என்னவாயிற்று? இலங்கையில் 2000 கோவில்களை இலங்கை அரசு இடித்திருக்கிறது.  இதற்கு பாஜகவின் பதில் என்ன? 

தமிழ்நாட்டில் இந்துத்துவத்தை முன்னிறுத்தி மதக் கலவரத்தை  ஏற்படுத்த பாஜக முனைகிறது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இயற்கை வழியாக உலகம் படைக்கப்பட்டது என்பதுதான் தமிழர்களின் நம்பிக்கை. இவ்வாறு இயற்கை வழி வந்த முன்னோர்கள்தான் அய்யனாரும் அம்மனும். எங்கள் முன்னோர்கள் முத்துக்குமார், செங்கொடி போல இந்த மண்ணுக்காக உயிர் கொடுத்தவர்கள். அய்யனார், அம்மன் படங்களை பாஜக பயன்படுத்துவது மிக மிக தவறான விடயம். அவர்களுக்கு ராமன் என்றால் நமக்கு அய்யனார். நம் வழிபாட்டு முறையான தாய் வழிபாட்டு முறை என்பது இயற்கை வழிபாட்டு முறை. இதன் அடிப்படையில் பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்திருக்கிறோம்.

 எடப்பாடி பழனிச்சாமி போன்ற அதிமுக தலைவர்கள் மோடிக்கு எதிராக ஏன்  பேச மறுக்கிறார்கள்? தேர்தலுக்குப் பின் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக அவர்களால் கூற முடியுமா? இதைப் போன்று நாம் தமிழர் கட்சி எந்தவித பாஜக எதிர்ப்பு போராட்டங்களிலும் களத்தில் நிற்கவில்லை. எந்தவித ஜனநாயக ஆற்றல்களுடன் கைகோர்க்காமல் வாக்குகளை மட்டுமே பிரிக்கும் வேலை செய்கிறார் சீமான்.

எங்களுடன் போராட்டக்களத்தில் துணை நிற்கும் கட்சிகளுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக எங்களுடன் போராட்டக்களத்தில் துணை நின்ற விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகளுக்கு நாங்கள் ஆதரவு தருகின்றோம்.

மோடி ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாத சூழல் ஏற்படும். இந்தியாவில் எதிர்க்கட்சிகளை முற்றிலும் அழிக்க நினைக்கிறார் மோடி. ஜார்க்கண்ட், டெல்லி போன்ற மாநிலங்களின்  முதல்வர்களையே எந்த  முகாந்திரமும் இல்லாமல் சிறையில் அடைக்க முடியும் என்றால், நாளை சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என்பதுதான் எங்கள் கேள்வி.

உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக வருவதற்காக  தொகுதி மறு சீரமைப்பு கொண்டு வருகிறார் மோடி. ஒட்டுமொத்த தென்னிந்திய எம்.பி-க்களின் எண்ணிக்கை, வட இந்திய எம்.பி-க்களில் ஏழில் ஒரு பங்கு மட்டுமே.

எனவே பாஜக-வையும் பாஜக கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள்  தமிழ்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் வைக்கின்றோம். ”தமிழ்நாட்டின் துரோகிகளாக இருக்கக்கூடிய அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன் போன்றோர்க்கு எதிராக கடுமையான பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறோம்” இவ்வாறு தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறினார்.

காலையில் தமிழர் பண்பாட்டு நெறிக்கு அடையாளமான முன்னோர்  வழிபாட்டையும்  மாலையில் தமிழர் அற நெறிக்கு அடையாளமான திருவள்ளுவரையும் மரியாதை செலுத்தி மே பதினேழு இயக்கத் தோழர்கள் தங்கள் பரப்புரையைத் தொடர்ந்தனர்.

மாலையில் செய்தியாளர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பிய போது, தோழர் திருமுருகன் காந்தி, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழ்நாட்டை கொச்சைப்படுத்தும் விதமாகவே பேசி வருகிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில்  நிகழ்ந்து வருவது. இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க தாளமுத்து, நடராசன் ஆகியோர் தங்கள் இன்னுயிரைக் கொடுத்தார்கள். மொழிப்போர் ஈகியர்களாக அவர்களை நாம்  நினைவேந்துகிறோம். இந்த மண்ணுக்காக உயிர் ஈந்தவர்களை கொச்சைப்படுத்திப் பேசினால் அதற்கு தகுந்த எதிர்வினை அண்ணாமலைக்கு கிடைக்கும். 

இந்தி எங்களுக்குத் தேவையில்லாத மொழி. எந்த வித அறிவியல் வளர்ச்சிக்கும் பயன்படாத மொழி. மோடி, அமித்சா போன்றோரைத்தான் இந்தி அரசியல் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அண்ணாமலைக்கு இந்தி தேவை என்றால் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் தேர்தலில் நிற்கட்டும். தேர்தல் பத்திரங்களில் பாஜக ஊழல் செய்த பத்தாயிரம் கோடி ரூபாயில் அண்ணாமலைக்கு கிடைத்த பங்கு எவ்வளவு என்பது தெரிய வேண்டும்” என்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »