நீலகிரி மூன்றாம் கட்ட பரப்புரை: ஏப்ரல் 13, 2024

“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” எனும் முழக்கத்தோடு தமிழ்நாடு தழுவிய அளவில் மே 17 இயக்கம் தொடங்கிய தேர்தல் பரப்புரை 13/4/2024 அன்று நீலகிரி தொகுதியில் நடந்தது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி, தோழமை அமைப்பான விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். குடந்தை அரசன் அவர்களுடன் இணைந்து உரையாற்ற, தோழர்கள் துண்டறிக்கைகள் விநியோகித்தனர். மேலும் திருச்சி மற்றும் சென்னை பகுதிகளிலும் இயக்கத் தோழர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர்.

நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உதகை பேருந்து நிலையம், உதகை மார்கெட், எல்லநள்ளி பேருந்து நிலையம், அருவங்காடு, குன்னூர் பேருந்து நிலையம், கோத்தகிரி பகுதிகளில் மே17 இயக்க  ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார். இதில் அருவங்காடு பகுதியில் காவல்துறை அனுமதி மறுத்தபோது, போராடி மீண்டும் பரப்புரை செய்யும் உரிமையை மீட்டது மே பதினேழு இயக்கம்.

இந்தப் பகுதிகளில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“இந்த தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் தேர்தல்”. பாஜக போன்ற ஒரு வடநாட்டு கட்சியிடம் நம் தமிழ்நாட்டைக் கொடுக்கக் கூடாது. அது குரங்கு கூட்டத்தின் கையில் பூ மாலை கொடுத்தது போல் ஆகிவிடும்.

இங்கே அருகில் இருக்கும் ‘சுல்தான் பத்தேரி’ என்னும் இடத்தின் பெயரை (அது இசுலாமிய பெயர் என்பதால்) மாற்றக் கூறுகிறது பாஜக. திப்பு சுல்தான் வெள்ளையரை எதிர்த்து போரிட்டபோது தன்னுடைய ஆயுதக்கிடங்காக பயன்படுத்திய இடம் சுல்தான் பத்தேரி. இந்த இடத்தின் பெயரை மாற்றுவதால் என்ன நடக்கப் போகிறது? பெட்ரோல் விலை குறையப் போகிறதா? ஜிஎஸ்டி குறையப் போகிறதா? எரிவாயு சிலிண்டரின் விலை குறையப் போகிறதா? இல்லை!!

இங்கு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மதக்கலவரத்தைத் தூண்ட மட்டுமே முயற்சிக்கிறது பாஜக. மானமுள்ள, அறிவுள்ள யாராவது அக்கட்சிக்கு ஓட்டு போடுவார்களா? இங்கே நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் அவர்கள் இந்த தொகுதிக்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்?

மோடி இதுவரை மருத்துவமனை அல்லது பல்கலைக்கழகம் எதையாவது திறந்து வைத்திருக்கிறாரா? உலக அளவில் நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளில் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் உயர்ந்து வருகிறது. எரிவாயு சிலிண்டரின் மானியத்தை வங்கியில் செலுத்துவதாக கூறினார் மோடி. மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கை 12லிருந்து 8 சிலிண்டர், பிறகு 4 சிலிண்டர் என்று படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியில் மானியம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. வங்கியில் ‘மினிமம் பேலன்ஸ் இல்லை’ என்று அதற்கும் அபராதம் விதிக்கிறார்கள். மீண்டும் மோடிக்கு வாக்கு செலுத்துவதாக இருந்தால் இப்பொழுதே எரிவாயு சிலிண்டர் உடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் வீட்டில் இருக்கும் கடைசி எரிவாயு சிலிண்டர் அதுவாகத்தான் இருக்கும். 

இதுவரை இந்தத் தொகுதியில் இந்து-இஸ்லாமியர்கள் சகோதரர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்து-முஸ்லிம் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக, இந்துக்களுக்கு மட்டும் பெட்ரோல் வரியை குறைக்கப் போகிறாரா மோடி?  

குன்னூரில் தோழர் உரையாற்றும் போது எடுத்தப் புகைப்படம்

ஹோட்டலில் நாம் சாப்பிடும் இட்லிக்கும், சட்னிக்கும் மட்டுமல்ல, நமக்கு கொடுக்கப்படும் பில் காகிதத்திற்கும் வரி. இதை எதிர்த்து கேள்வி கேட்டாலோ, கேள்விகளுக்கு பதில் கூற இயலாமல் கலவரத்தை மூட்டிவிடுகிறது பாஜக. சாமி நம்மை காப்பாற்ற வேண்டுமா? நாம் சாமியைக் காப்பாற்ற வேண்டுமா?    

ஒரே தண்டில் முளைத்த தாமரையும் இரட்டை இலையும் தோற்க வேண்டும். ஏனென்றால் அண்ணாமலைக்கும் தலைவர் மோடிதான், எடப்பாடிக்கும் தலைவர் மோடிதான். எனவேதான் பாஜகவை மட்டுமல்ல பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளையும் நாம் நிராகரிக்க வேண்டும்.

அன்று அதிமுக ஆட்சிக்காலத்தில், பாஜகவின் அழுத்தத்தால் என்மீது நாற்பத்தி ஏழு வழக்குகள் பதியப்பட்டன. இரண்டு முறை சிறை சென்றிருக்கிறேன். எனவே எந்த அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை. எங்களை மிரட்டுகிறவர்களுக்கு நாங்கள் கூற விரும்புவது ஒன்றுதான். நாங்கள் எதற்கும் துணிந்தவர்கள். கழுத்தில் சயனைடு கட்டிய மேதகு பிரபாகரன் வழி வந்தவர்கள் நாங்கள்.

தமிழ்நாட்டை நாசம் செய்யத் துடிக்கும் துரோகிகளை அடையாளம் காட்டவே நாங்கள் வந்திருக்கிறோம். அரிசி கப்பல், ஆமை கதை கூறும் சினிமாக்காரர்கள் அல்ல நாங்கள். இங்கே காந்தி சிலை இருக்கிறது. காந்தியாரை படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ், நேதாஜியை காட்டிக் கொடுத்தது ஆர்எஸ்எஸ், நேதாஜிக்கு எதிராக படை திரட்டியது ஆர்எஸ்எஸ். அந்த ஆர்எஸ்எஸ் உருவாக்கிய கட்சிதான் பாஜக. ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த கட்சி பாஜக. இன்று ரோட் ஷோ நடத்தி  நமக்கு டாட்டா காட்டுகிறார் மோடி. மழை, வெள்ளம், புயல், இயற்கை பேரிடர் வந்தபோது நம்மளை எட்டிப் பார்க்காதவர் இப்பொழுது உயிரோடு இருக்கிறோமா என்பதை ’ரோட் ஷோ’ மூலம் காண வந்திருக்கிறார்.

இங்கே, கோவையிலே, மார்வாடி கடை எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. இந்திக்காரர்களுடைய வாய், பீடாவை அரைத்து துப்பிய நிறம்தான் காவி நிறம். இந்த இந்திக்காரர்களுக்கும் வேலை போட்டுக் கொடுத்தது தமிழ்நாடுதான். இந்தத் தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் அவர்கள் உத்திர பிரதேசத்தில் தேர்தலில் நிற்க முடியுமா?

நண்பர்களே! இப்படிப்பட்ட கட்சி நமக்குத் தேவையா? பாஜக  தோற்றால்தான் தமிழ்நாடு நிம்மதியாக இருக்க முடியும். தற்போதுவரை தமிழ்நாடு ஒற்றுமையாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. ஆனால் பாஜக வந்தால் நமக்குள் சண்டை மூட்டி விட்டு தமிழ்நாட்டை நாசம் செய்து விடுவார்கள். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பாஜக அற்ற மாநிலங்கள் கொண்டதாக மாற வேண்டும். எனவே நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை “வீழட்டும் பாஜக, வெல்லட்டும் தமிழ்நாடு” என்று உரக்கக் கூறுகிறோம். நன்றி!!”– என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.

மேலும் திருச்சியில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் தொடர்ச்சியாக பரப்புரை செய்கின்றனர். 13-04-2024 அன்று கம்பரசம்பேட்டை, பெரியார் நகர், அக்கிரகாரம், திருவெறும்பூர், நாவல்பட்டு பர்மா காலனி, ஓஎம்டி, அண்ணாநகர், மாத்தூர், சூரியூர் ஆகிய இடங்களில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. பலரிடத்திலும் வரவேற்பும், பாஜகவுக்கான எதிர்ப்பு நிலைப்பாட்டினை மக்கள் பதிவு செய்தனர். இயக்கம் பற்றியும் கேட்டு அறிந்தனர்.

சென்னை பரப்புரை:

சென்னையில் மே பதினேழு இயக்கத் தோழர்களால் தொடர்ந்து துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13/4/2024 அன்று தி.நகர், கிண்டி தொழிற்பேட்டை, மேட்டுப்பாளையம் மார்க்கட் பகுதியிலும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மக்கள் பலர் இந்த பரப்புரையை மிக்க மகிழ்ச்சி என பாராட்டினர், அதில் இருவர் நல்ல முன்னெடுப்பு பாஜக கட்சியால் தமிழ்நாட்டில் எவ்வித நன்மையும் இல்லை மீண்டும் வரவே கூடாது, 15 துண்டறிக்கை கொடுங்கள், நாங்கள் என் நண்பர்களிடம் கொடுக்கிறோம் என்று வாங்கி சென்றனர். சிலர் நின்று கேட்டு பாஜக கட்சிக்கு நாங்க ஓட்டு போட மாட்டோம் துண்டறிக்கை வீணாக்க வேண்டாம் என கருதினார்கள். எனினும் துண்டறிக்கை மூலமே நிறைய தெரிந்துக் கொள்ள முடிகிறது என கருத்தும் தெரிவித்தனர்.

மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »