திப்பு சுல்தான்: கிழக்கிந்‌‌‌திய கம்பனியின்‌‌‌ குலைநடுக்கம்

திப்பு சுல்தான்: கிழக்கிந்‌‌‌திய கம்பனியின்‌‌‌ குலைநடுக்கம்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்பு சுல்தானின்‌‌‌ மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது .“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. மைசூரின் புலி என்றழைக்கப்பட்டவர் தீரர் திப்பு சுல்தான்.

திண்டுக்கல் புரட்சிக்கூட்டமைப்பு என்பது மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வு. விருப்பாச்‌சியிலே கோபால் நாயக்கரும்‌‌‌, ஹைதர் அலியும், திப்புசுல்தானும், மருது பாண்டியர்களும், வேலுநாச்சியாரும் இணைந்து நின்று புரட்சியை முன்னுக்கு நகர்த்தினார்கள். இந்திய வரலாற்றிலே வெள்ளையர்களை திருப்பியனுப்பி வெள்ளையர்களால் ஒருமுறை கூட கைப்பற்ற முடியாத ஓர் ஆட்சியை நடத்தியவர்‌‌‌ வேலுநாச்சியார் அவர்கள். அவர் ஆட்சி நடத்தி்‌‌‌னார் என்றால் அதற்கான முழு வலிமையும் ஹைதர் அலியும் திப்புசுல்தானும் ஆதரவு இருந்த காரணத்தினாலேதான் அது நடந்தது. இவ்வாறாக தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன்,வேலு நாச்சியார்‌‌‌, மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.

1782 டிசம்பரில், 32 வயதில் தன்‌‌‌ தந்‌‌‌தையார்‌‌‌ ஹைதர் அலி இறந்த பின் அரசுரிமையைப் பெறுகிறார்‌‌‌ திப்பு சுல்தான். மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784-இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் ஆங்கிலேய காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790–92) ஆங்கிலேயக் கைக்கூலியாய் இருந்த திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்” என்று திப்பு சுல்தான் குறித்து 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறார் அன்றைய கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி.

திப்பு சுல்தானை போரிட்டு வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் தைரியமாக திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறார் வெல்லெஸ்லி.

நான்காம் மைசூர் போர். இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்றார். அதிலும் துவண்டு போகாது, உலக அளவிலான கூட்டணியை  பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்கள் திப்பு சுல்தான் முதுகில் குத்தினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக மே 4, 1799 அன்‌‌‌று சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரர் திப்பு திப்புசுல்தான். ஆங்கிலேய காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்த திப்புசுல்தானின் கலகம் வீழ்‌‌‌ச்சி அடைந்தது.

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் திப்பு சுல்தானின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக தென்னிந்திய பாளையக்காரர்களை, மன்னர்களை ஒருங்கிணைத்து வெள்ளையர்களுக்கு எதிராக கூட்டமைப்பை போராடியவர். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு, “இன்று முதல் இந்தியா நம்முடையது” என்று ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் மனம்மகிழ்ந்து கூறினான். மராட்டியத்தை ஆண்ட சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்கள் ஆங்கிலேயருடன் இணைந்து திப்புவின் இறுதிப்போரில் அவர் வீழ காரணமாக அமைந்தனர்.

திப்பு சுல்தான் அன்றைய ஆங்கிலேயருக்கு மட்டுமல்ல, இன்று இந்துத்துவ கும்பலுக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளார். திப்பு சுல்தான் தனது ஆட்சி காலத்தில் மத நல்லிணக்கத்தை பேணியவர். இஸ்லாமியராக இருந்தாலும், தனது அமைச்சரவையில் இந்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். பல இந்துக் கோவில்களை புணரமைத்துக் கொடுத்தவர். அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமூகத்தில் நிலவிய பல பிற்போக்குதனங்களுக்கு தடை விதித்தார். பாலியல் தொழில், தேவதாசி முறை, மது, போதைப் பொருட்கள் மீதான தடை என சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவை பார்ப்பனிய மரபுகளுக்கான எதிராக இருந்தன என்பதே, விடுதலை வீரன் திப்பு சுல்தான் மீது சித்பவன் பார்ப்பனர்களின் ஆர்எஸ்எஸ் கும்பல் அவதூறுகளை வீசிக்கொண்டிருக்கிறது.

இந்துவிரோதியாக சித்தரிக்கப்படும் திப்பு சுல்தானின் உண்மையான வரலாறு நாம் அறியப்பட வேண்டியது மட்டுமல்ல, கொண்டாடப்பட வேண்டியதும் கூட.

One thought on “திப்பு சுல்தான்: கிழக்கிந்‌‌‌திய கம்பனியின்‌‌‌ குலைநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »