நீலகிரி முதற்கட்ட பரப்புரை: ஏப்ரல் 11, 2024

“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் முன்னெடுத்துள்ளது, கோவையில் பாஜகவினரின் அராஜகத்தையும் காவல்துறையினரின் அடக்குமுறைகளையும் மீறி பரப்புரையை முடித்த மே பதினேழு இயக்கத் தோழர்கள் (11/04/24) வியாழன் அன்று நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டனர். மாலையில் தொடங்கிய பரப்புரை அவிநாசி, ஆட்டையாம்பாளையம், கருவலூர், அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம் என பல பகுதிகளில் நடைபெற்றது. நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் அவர்களை தோற்கடிப்பதற்காக துண்டறிக்கை வழங்குவது முதல் உரையாற்றுவது வரை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“மோடியின் பத்தாண்டுக்கால வேதனை ஆட்சியை அகற்ற இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக நாம் பயன்படுத்த வேண்டும். இந்த நாடும் நம் வீடும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பாஜகவிற்கு பாடை கட்டப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு விலை, அரிசி, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தோடு வரிக்கு மேல் வரி போட்டு தமிழ்நாட்டை சீரழித்த கட்சி பாஜக. 

பாஜக வெற்றி பெற்றால், தமிழ்நாட்டை இனி யாரும் காப்பாற்ற முடியாது. இங்கு பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் எல்.முருகன் அவர்கள், தனது மந்திரிப் பதவி மூலம் இந்த தொகுதிக்கு இதுவரை என்ன நல்லது செய்திருக்கிறார்? மோடி ஆட்சியில் பெட்ரோல், எரிவாயு விலை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. சுங்க கட்டணம், சாலை வரி, இன்சூரன்ஸ் போன்றவை நான்கு மடங்கு உயர்ந்திருக்கின்றன. வீட்டு வாடகை இருமடங்கு உயர்ந்திருக்கிறது. இவற்றையெல்லாம் சமாளிக்க நமது வருமானமும் இரண்டு மடங்கு உயர்ந்திருக்க வேண்டுமே! உயர்ந்திருக்கிறதா? இல்லை!!

பிறந்தால் வரி, இறந்தால்  வரி, வங்கியில் பணம் போட்டால் வரி, பணம் எடுத்தால் வரி என்று வரி அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறது பாஜக. இதைப்பற்றி உங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள், உங்களுடன் பணி புரிபவர்கள் அனைவரிடமும் பேசுங்கள்.

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சோப்பிற்கு 12% ஜிஎஸ்டி வரி, தீப்பெட்டிக்கு 12% ஜிஎஸ்டி வரி, அரிசி மூட்டையாகக் கட்டினால் வரி என்று வரி பயங்கரவாதத்தை ஏவி விட்டிருக்கிறது மோடி அரசு.

அரிசியை ஆலையில் இருந்து மற்ற இடங்களுக்கு லாரி மூலம்தான் அனுப்ப வேண்டும். ஆனால் இன்று லாரி வாடகை இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. எரிவாயு விலை இதேபோல் ஏறிக் கொண்டிருந்தால் இனி விறகு அடுப்பிற்கு மாற வேண்டியதுதான். மண்ணெண்ணை தருவதையும் தற்போது நிறுத்தி விட்டார்கள். 

அரிசி மூட்டைக்கு 5%ஜிஎஸ்டி, கிரைண்டருக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்தது பாஜக அரசு. ஹோட்டலில் நாம் சாப்பிடும் இட்லிக்கும், சட்னிக்கும் மட்டுமல்ல நமக்கு கொடுக்கப்படும் பில் காகிதத்திற்கும் வரி. இதைப்பற்றி கேள்வி கேட்டால் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று கூறி மடைமாற்றுகிறது மோடி அரசு.

இங்கு அனைவரும் மனிதர்கள்தானே? நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறோம். ஆனால் இந்து-இஸ்லாமிய மதக் கலவரத்தைத் தூண்ட கட்சி நடத்துகிறது பாஜக.

பாஜக கட்சியில் மரியாதை செய்வதற்கு ஒரு  தலைவர் கூட இல்லையா? காமராஜர், முத்துராமலிங்க தேவர் முதல் ஜெயலலிதா வரை மாற்றுக் கட்சி தலைவர்களையே மரியாதை செய்து கொண்டிருக்கிறார்கள் பாஜக தலைவர்கள்.

பள்ளி, தொழிற்சாலை போன்றவற்றைக் கட்டாமல் கோவில் கட்டினார் மோடி. அதை கட்டுவதற்கு இன்ஜினியர் போதுமே? புயல், மழை, வெள்ளம் என்று எந்த பேரிடரிலும் தமிழ்நாட்டின் பக்கம் எட்டிக் கூட பார்க்காதவர் மோடி. தமிழன் செத்தால் கண்டு கொள்ளாமல் இருந்தவர் மோடி. ஆனால் தற்போது வாரம் இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகிறார். ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இங்கேயுள்ள காரமடை கோவிலுக்கு  பாஜகவினர் வண்ணம் அடித்துக் கொடுத்தார்களா? இல்லை. சாமி நம்மிடம் நேராக பேசும். சாமி நம்முடன் பேசுவதற்கு பாஜக போன்ற தரகர் யாரும் தேவையில்லை. பிஜேபி என்பது தமிழ்ப் பெயரா? ஒரு வடநாட்டு கட்சி, வாயில் நுழையாத பெயரை வைத்துக் கொண்டு மார்வாடிகள் நலனுக்காக தமிழ்நாட்டை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வடநாட்டு கும்பல் 10 வருடங்களில் தமிழ்நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்து இருக்கிறதா?

எல்.முருகன் அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும்  ஒரே தலைவர் மோடிதான். எனவே பாஜகவிற்கு இன்னொரு அடிமையாக இருக்கும் அதிமுக நமக்கு வேண்டாம். தமிழருக்காக பேசுவோரையே நாம் ஆதரிப்போம். எனவே மோடி மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளையும்   இந்தத் தேர்தலில் நாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

 தமிழன் வாழ்க்கை உயர வேண்டும் என்றால் பாஜக போன்ற  தேவையில்லாத ஆணி தோற்க வேண்டும். வாயிலேயே வடை சுடும் மோடி தோற்க வேண்டும். ஏனென்றால் பாஜக என்பது கொரோனா கிருமி போன்றது. கொரோனா கிருமி அருகே வந்தால்தான் பிரச்சினை. ஆனால் பாஜக எனும் கிருமியைப் பார்த்தாலே பிரச்சினை வரும். எனவே பாஜக ஊருக்கும், நாட்டுக்கும் உடம்பிற்கும் கேடு. 

தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்றால் வடநாட்டு பாஜக தோற்க வேண்டும். பாஜகவை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டில்தான் முதலில் தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் நாம் பாஜகவிற்கு கொடுக்கும் முடிவு, இந்தியா முழுவதும் எதிரொலிக்க  வேண்டும்.

வாயாலே வடை சுடும் மோடியால், மார்வாடிகளின் வியாபாரம்தான் செழிக்கிறது. தமிழர்கள் வியாபாரம் சுருங்கி விட்டது. தாயாய்-பிள்ளையாய், அண்ணன்-தம்பியாய் இந்து-இஸ்லாமிய சகோதரர்கள் பழகும் நம் ஊரிலே அமைதி நிலவ வேண்டும் என்றால் பாஜக வேட்பாளர் டெபாசிட் இழக்க  வேண்டும்” என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.

தென்சென்னை பரப்புரை:

சென்னையிலும் (11/04/24) வியாழன் அன்று செம்மேஞ்சேரி, சோழிங்கநல்லூர், கண்ணகி நகர், துரைப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், மாம்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பரப்புரை நிகழ்ந்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்களின் உரையைக் கேட்ட கண்ணகி நகர் பொதுமக்கள் விசிலடித்து கொண்டாடினர், பிறகு பேசிய முடித்தபின் கைகொடுத்து தோழர்களை ஊக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திருச்சியிலும் மல்லாச்சிபுரம், காவேரி நகர், கம்பரசம் பேட்டை போன்ற பகுதிகளில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »