நீலகிரி இரண்டாம் கட்ட பரப்புரை: ஏப்ரல் 12, 2024

பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மே 17 இயக்கம் தொடங்கிய பரப்புரையில் (12/4/2024) அன்று பாஜக வேட்பாளர் எல்.முருகனை எதிர்த்து நீலகிரிப் பகுதியில் இரண்டாம் கட்டப் பரப்புரை நடந்தது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தோழமை அமைப்பான விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். குடந்தை அரசன் அவர்களுடன் இணைந்து உரையாற்ற, தோழர்கள் துண்டறிக்கைகள் விநியோகித்தனர். மேலும் திருச்சி மற்றும் சென்னை பகுதிகளிலும் அமைப்பு தோழர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பாஜக குண்டர்கள் செய்யும் அட்டூழியங்கள், காவல்துறை, தேர்தல் ஆணையம் கொடுக்கும் நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் இரண்டாம் நாள் பரப்புரை மேற்கொண்டது மே 17 இயக்கம். சேரம்பாடி பகுதியில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி உரையாற்றக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்தனர். தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்றும் பல சிக்கல்களை எழுப்பினர். தோழர் பேசுவதற்குரிய சனநாயக உரிமையை  மறுக்கும் சூழலே இந்தப் பகுதிகளில் உள்ள அரசியல் பின்புலத்தை நமக்கு உணர்த்தும். முறையான ஆவணங்களைக் காட்டி நீண்ட நேரம் போராடிய பிறகே தோழர் உரையாற்றத் தொடங்கினார்.

சேரம்பாடி,பந்தலூர், கூடலூர் பகுதிகளில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“மோடியின் பத்தாண்டு கால வேதனை ஆட்சியில் நாடும் நாசமாகிவிட்டது. வீடும் மோசமாகிவிட்டது. விலைவாசி இரண்டு மடங்கு உயர்ந்து, நம் வருவாய் பாதியாக குறைந்து விட்டது. பெட்ரோல் விலையேற்றம் மட்டுமே மோடி அரசின் ஒரே சாதனை. இந்த விலையேற்றதோடு எல்லா பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரியையும் விதித்தவர் மோடி. உலகில் உண்ணும் உணவிற்கு வரி விதித்த ஒரே அரசு பாஜக அரசுதான். வெள்ளைக்காரன் உப்புக்கு வரி விதித்தான். அதேபோன்று அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரிவித்தவர் மோடி.

பெட்ரோல் விலை ஏறினால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறும். தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய் என அனைத்து காய்கறிகளின் விலையும் ஏறும். பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் வெங்காயம் விலை ஏன் கூடியது என்று கேட்டபோது “நான் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தில் வந்தவர்” என்று கூறினார். இப்படி எந்த நாட்டிலாவது நடக்குமா? 130 கோடி பேர் வெங்காயம் சாப்பிடும் நாட்டில் ஒரு நிதி அமைச்சர்  கூறிய பதில் இதுதான். இந்த லட்சணத்தில்தான் பத்தாண்டுகளாக பாஜகவின் ஆட்சி நடைபெற்றது.

மோடி அரசு செய்த ஏழரை லட்சம் கோடி ஊழல் என்பது தமிழ்நாட்டின் இரண்டரை ஆண்டு பட்ஜெட் தொகை. ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி எரிவாயு சிலிண்டரின் மானியத்தை வங்கியில் செலுத்துவதாக கூறினார் மோடி. மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கை 12லிருந்து 8 சிலிண்டர், பிறகு 4 சிலிண்டர் என்று படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியில் மானியம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

எதிரி வீட்டில் துக்கம் நிகழ்ந்தால் கூட நாம் நலம் விசாரிப்போம். ஆனால்  மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களில்  நம்மை எட்டிக் கூட பார்க்காமல் இப்பொழுது தேர்தலுக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் மோடி. இந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன் ஒன்றிய அமைச்சராக இருந்தவர். இவர் இந்த தொகுதிக்கு செய்த ஒரு நல்ல விடயத்தை கூற முடியுமா?  

இந்து- முஸ்லிம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அண்ணன் தம்பி போல் ஒற்றுமையாக இருக்கும் நமக்குள் சண்டையை மூட்டி விட ஒரு வடநாட்டு கட்சி களம் இறங்கி இருக்கிறது என்றால் அது பாஜக தான். இங்கு மார்வாடி மட்டும் கடை நடத்த வேண்டும், தமிழர்கள் சாதி மத மோதலால் பிரிக்கப்பட வேண்டும் என்று எண்ணும் கட்சி பாஜக.

ஒரே நாடு–ஒரே ரேஷன் என்று கூறினார் மோடி. இதனால் ரேஷன் கடையில் படிப்படியாக பொருட்கள் குறைக்கப்பட்டன. இப்போதுமோடி ஒரே நாடு–ஒரே தேர்தல் என்கிறார். மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் தேர்தல் என்பது நடக்காமலே போய்விடும்.

தமிழ்நாட்டின் தொழில்வளத்தை முற்றிலும் அழித்தது பாஜக அரசு. இங்கு குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை முடங்கியதற்கு காரணம் மோடி அரசு. சிவகாசியில் ஒரு குடும்பமே பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்யும். ஆனால் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து சிவகாசியின் தொழில்வளத்தைக் காலி செய்தார் மோடி. இதைப் போன்று ஜி.எஸ்.டி வரி கொண்டு வந்து கோவையின் தொழில்வளத்தை நாசம் செய்தார் மோடி. திருப்பூர், ஈரோடு போன்ற ஊர்களில் இருந்த ஒரு லட்சம் பனியன் கம்பெனிகள் மூடப்பட்டன. இதே போன்று வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் இருந்த தோல் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டன. இவ்வாறு தமிழ்நாட்டில் தொழில் முடக்கத்தை ஏற்படுத்தியது பாஜக ஆட்சி.

கூடலூரில் தூண்டறிக்கை பரப்புரை

மோடியின் நண்பர்களான அம்பானியும் அதானியும் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி சம்பாதிக்க நம் பணத்தை அம்பானிக்கும் அதானிக்கும் எடுத்துக் கொடுத்தவர் மோடி. மார்வாடி நிறுவனமான ஸ்டெர்லைட் பாஜகவிற்கு இருநூறு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. எனவேதான் ஐ. நாவில் ஸ்டெர்லைட் குறித்துப் பேசியதற்காக இரண்டு மாதம் தனிமை சிறையில் என்னை அடைத்தார்கள். அப்போது இருந்த எடப்பாடி ஆட்சியில் பாஜக குடுத்த அழுத்தத்தினால் என்னைக் கைது செய்தார்கள். காவிரிப் பிரச்சினை, ஏழு தமிழர் விடுதலை என்று தமிழர் உரிமை குறித்து பேசியதற்காக  நான்கு மாதம் சிறையில் என்னை அடைத்தார்கள். கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் படுகொலை குறித்து பேசியதற்காக வழக்கு பதியப்பட்டது. இப்படி என்மீது இதுவரை 47 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் இடையே இருப்பது பங்காளி சண்டை. கொள்கை சண்டை அல்ல. மோடி நமது வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவதாக கூறிய பொய் வாக்குறுதிகளைப் போலவே இப்போதும் வாக்குறுதிகள் கூறுகிறார். அவற்றைக் கண்டு ஏமாறாதீர்கள்.  மீண்டும் மோடிக்கு வாக்கு செலுத்துவதாக இருந்தால் இப்பொழுதே உங்கள் இல்லத்தில் எரிவாயு சிலிண்டர் உடன் ஒரு செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதன் பின்னர் விறகு கட்டையால் தான் நம் வீட்டில் சமைக்க நேரிடும்.

எனவே பாஜக போன்ற வன்முறைக் கும்பல் தோல்வி அடைய வேண்டும் என்றால் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்.  தமிழ்நாட்டை, தமிழ் மொழியை காக்க வேண்டும் என்றால் பாஜக தோற்க வேண்டும். மீண்டுமொருமுறை “வீழட்டும் பாஜக, வெல்லட்டும் தமிழ்நாடு” என்று உரக்க கூறுகிறோம். நன்றி!!”– என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.

சென்னை பரப்புரை:

சென்னையில் மே பதினேழு இயக்கத் தோழர்களால் தொடர்ந்து துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்று நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம் மற்றும் தேனாம்பேட்டையில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

இங்கு பொதுமக்களில் சிலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் குறித்தும் அவர் தோழமையுடன் செய்த உதவிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். மேலும் சிலர் பரப்புரை செய்வதற்காக தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

அன்று மாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் , திருவானைக்காவல் அருகே உள்ளே கொண்டையான்பட்டி ஆகிய இடங்களில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »