திருமுருகன் காந்தி உளவு பார்க்கப்பட்ட விவகாரம்: உறுதி செய்த தி வயர்

திருமுருகன் காந்தி உளவு பார்க்கப்பட்ட விவகாரம்: உறுதி செய்த தி வயர்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் தொலைபேசிகள் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளிவந்த நிலையில், மோடி அரசின் உளவுத் தகவலை அம்பலப்படுத்திய உலகின் 16 முன்னணி பத்திரிக்கைகளின் ஒன்றான இந்தியாவின் தி வயர் (The Wire) இணைய பத்திரிக்கை, இன்று அதனை உறுதி செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன்களை பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகளும், அரசு நிறுவனங்களும், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த NSO என்ற நிறுவனத்தின் பெகாசஸ் (Pegasus) என்ற உளவுச் செயலி மூலம் உளவு பார்த்து தரவுகளை திருடியதாக, உலகின் பல முன்னணி பத்திரிக்கைகள் கடந்த ஜூலை 19 இரவு 10 மணியளவில் ஒரே நேரத்தில் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டன. உளவு பார்ப்பதற்காக NSO நிறுவனத்திடம் உள்ள தொலைபேசி எண்களில் 50,000-க்கும் அதிகமான எண்கள் கசிந்ததை ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தி ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ் (The Forbidden Stories) என்ற சுதந்திரமான பத்திரிக்கை, உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமான அம்னஷ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) மற்றும், இந்தியாவின் தி வயர், இங்கிலாந்தின் தி கார்டியன், அமெரிக்காவின் தி வாசிங்டன் போஸ்ட், பிரான்சின் லா மான்டே உள்ளிட்ட உலகின் 16 முன்னணி ஊடகங்களுடன் இணைந்து இந்த பெகாசஸ் உளவு செயலை அம்பலப்படுத்தின.

இந்தியாவை பொருத்தவரை, 40-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் உட்பட, பல்வேறு செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி, தொழிலதிபர்கள் என 300-க்கும் அதிகமானவர்களின் செல்போன்களை மோடி அரசு உளவு பார்த்திருக்கக் கூடும் என்ற தகவலை தி வயர் இணையத்தளம் வெளியிட்டது. சிறிது நேரத்திலேயே தி பிரிண்ட் இணையத்தளம் வெளியிட்ட உளவு பார்க்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது. தி வயர் இணையத்தளம் பெகாசஸ் உளவு விவகாரத்தை அம்பலப்படுத்துவதற்கு சில வாரங்கள் முன்பாகவே, தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசி எண் உளவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்திருந்தது. உளவு பார்க்கப்பட்ட நபர்களை நாள்தோறும் அடையாளப்படுத்தி வந்த தி வயர் இணையத்தளம், 27-07-2021 அன்று, தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் உளவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்யும் விதமாக செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் நாளில் தோழர் திருமுருகன் காந்தி பெயர் வெளியான பின்பு, இரண்டு நாட்களுக்கு பிறகு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்களது பெயரும், சில நாட்கள் இடைவெளியில் திராவிடர் கழகத்தின் பொருளாளர் தோழர் குமரேசன் அவர்களது பெயரும் இடம்பெற்றுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் அனைத்துக்கட்சி, இயக்கங்கள் சார்பாக சூலை 21 அன்று கோவையிலும், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக சூலை 24 அன்று சென்னையிலும், உளவு பார்த்த மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், மேற்கூறிய மூவர் மட்டுமல்லாது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களது பெயரும் இடம்பெற்றுள்ளதை குறிப்பிட்டு, தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உளவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

உளவு பார்த்த மோடி அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தி வயர் ஊடகத்திற்காக எழுத்தாளர் கவிதா முரளிதரன் அவர்கள், NSO குழுமத்தின் அரசு வாடிக்கையாளர், பெரியாரிய செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் மீது ஆர்வம் காட்டியுள்ளதாக தலைப்பிட்டு எழுதியுள்ளார். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன், திராவிடர் கழகத்தின் பொருளாளர் தோழர் குமரேசன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய நால்வர், மோடி அரசினால் உளவு பார்ப்பதற்கு குறி வைக்கப்பட்டவர்கள் என்கிறது தி வயர் கட்டுரை.

தமிழீழத் தமிழர்களுக்காகவும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட சாமானிய மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டது, 2018-இல் உபா (UAPA) வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது போன்றவற்றை குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழீழ இனப்படுகொலையின் விளைவாக 2009-இல் உருவான மே 17 இயக்கம், தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்கு போராடுவது மட்டுமல்லாது, தமிழீழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதாக தி வயர் கட்டுரை குறிப்பிடுகிறது,

2017-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, 17 வயது மாணவி ஸ்னோலின் உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பேசியுள்ளதையும், தமிழீழத் தமிழர் பிரச்சனைகள் குறித்து 2018-இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளதையும் தி வயர் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், வெளியுறவு விவகாரங்களில், அருகிலுள்ள அல்லது தொடர்புடைய மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக மே 17 இயக்கம் கோரி வருவதையும், உலக வர்த்தக கழகத்தின் பொருளாதார ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளதையும் தி வயர் கட்டுரை எடுத்துரைத்துள்ளது.

“இந்துத்துவத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் நோக்கம் இது” என்றும், “ஜனநாயகமாக செயல்படும் அமைப்புகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஜனநாயகமாற்ற தாக்குதல்” என்றும், “NSO நிறுவனத்தின் இந்த செயலியை பயன்படுத்திய நாடுகள், ஊடக சுதந்திரம் பட்டியலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறது” என்றும், உளவு பார்த்தால் விவகாரம் தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே போன்று, இது எமர்ஜென்சியை விட மோசமானது என்றும் எமர்ஜென்சி காலத்தில் கூட கண்காணிக்கப்படுவது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் கூறியதாகவும், தனிநபர் உரிமை அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ள என் தனியுரிமை மீறப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத்தின் பொருளாளர் தோழர் குமரேசன் அவர்கள் கூறியுள்ளதாகவும், இது ஜனநாயகமற்ற பாசிச செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியதாகவும் தி வயர் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி வயர் வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம், தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டுள்ளனர் என்று இதுநாள் வரையில் பேசப்பட்டு வந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. தி வயர் ஊடகம், உளவு விவகாரத்தை அம்பலப்படுத்திய 16 ஊடகங்களில் ஒன்று என்பதால், அது வெளியிடுகின்ற செய்தி நம்பத் தகுந்த செய்தியாக பார்க்கப்படுகிறது.

அரசியல் செயற்பாட்டாளர்களை சட்டவிரோதமாக அதுவும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் செயலி மூலம் கண்காணித்த மோடி அரசின் இந்த செயல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறது. மோடி அரசின் இந்த செயலுக்கு எதிராக ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து சதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் ஏற்கனவே அறைகூவல் விடுத்துள்ளது. இன்று தன் மீதான தாக்குதலை அமைதியாக கடந்து செல்பவர்கள் மீது மோடி அரசு நாளை தாக்குதல் நடத்தும் என்று தோழர் திருமுருகன் காந்தி கூறியுள்ளதை கவனத்தில் கொண்டு, முழுமையடையாத இந்த உளவு பட்டியல் மிக நீண்டதாக இருக்கக் கூடும் என்பதையும் நினைவில் கொண்டு, மோடி அரசின் பாசிச போக்கை எதிர்த்து குரல் கொடுக்க அனைவரும் முன்வருவது ஒன்றே தீர்வாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »