தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க கோரும் உரிமையை ஆளுநர் மறுக்கக்கூடாது – மே 17 அறிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அனுமதிக்க வேண்டும்! மாறாக, ஆளுநர் அந்த வாய்ப்பை தடுக்கவோ தவிர்க்கவோ கூடாது! ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கை மே 17 இயக்கம் கண்டிக்கிறது!

ஆட்சியமைக்க பெரும்பான்மையை ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாறாக சட்டமன்றத்தில் அக்கட்சி நிரூபிக்க வாய்ப்பை கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் தெரிவித்துள்ளது. ஆளுநரின் தனிப்பட்ட கணிப்பின் அடிப்படையில் ஒரு கட்சிக்கான பெரும்பான்மை குறித்து முடிவெடுக்கக்கூடாதென அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், 2018 கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் + ஜனதாதள (மதச்சார்பற்றது) கட்சிகளுக்கிடையே தேர்தலுக்கு பின்பான பெரும்பான்மையை கொண்ட கூட்டணி உருவாகியது. ஆனால் அக்கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல், பெரும்பான்மை இல்லாமல் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஜக கட்சியை ஆட்சியமைக்க அன்றைய கர்நாடக ஆளுநர் அழைத்தார். இந்த நடைமுறை பாஜகவிற்கு சாதகமாக நடத்தப்பட்டது. பாஜகவிற்கு 15 நாட்கள் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி கொடுத்தார் அன்றய கர்நாடக ஆளுனர். இந்த போக்கு சாத்தியமெனில், தமிழக வெற்றி கழகத்திற்கு அனுமதியளிப்பது எவ்வகையில் சாத்தியமில்லை? தமிழ்நாடு ஆளுனரின் ஆர்.எஸ்.எஸ், பாஜக சார்பு நிலையையே அவரது எதேச்சதிகார போக்கு காட்டுகிறது.

அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோருவது இவ்வகையில் அடிப்படை சனநாயக உரிமையாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பிருந்தும், அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருக்கும் கட்சியான த.வெ.க. கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை ஆளுநர் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் இவ்வுரிமையை ஆளுனர் வேண்டுமென்றே தட்டிப்பறித்திருக்கிறார் என மே17 இயக்கம் குற்றம் சாட்டுகிறது.

1952ம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த தேர்தலில் தனிப்பட்ட பெரிய கட்சியாக வெற்றிபெற்ற இராஜாஜியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் உரிமையை அன்றைய ஆளுநர் வழங்கினார். இது முறையற்ற வகையில் அமைந்தது. கூட்டணியாக பெரும்பான்மை பெற்றிருந்த கிசான் மஸ்தூர் பிரச்சார் சபா கட்சியின் டி.பிரகாசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை இருந்தும், தனித்த பெரிய கட்சியாக அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்த இராஜாஜி ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார். தில்லி காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் விருப்பத்திற்கேற்ப கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையிலான ஒரு தவறான முன்னுதாரணமாக ஆளுனரின் முடிவு அமைந்தது. ஆனால் 1971ல் அமைக்கப்பட்ட திரு ஷாய் பகவான் தலைமையிலான கவர்னர் கமிட்டி (Committee of Governors) வரையறுத்த வழிமுறைகளில், அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது எனும் வழிமுறையை சொன்னது. இந்த வழிமுறையை 1988ல் அமைக்கப்பட்ட சர்காரியா கமிசன், அதன் பின்பான எம்.எம்.பூன்ஜி கமிசன், அதன் பின்பு வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உறுதிப்படுத்தி உரிய வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளன. அவை தற்போது பின்பற்றப்படவில்லை.

மாநில உரிமைகளை நசுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-தில்லி அரசின் முகவராக செயல்படும் ஆளுனரின் எதேச்சதிகார போக்கினை நாம் கட்சி-இயக்க எல்லை கடந்து கண்டித்தாக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த கட்சிகளுக்கான ஆட்சியமைக்கும் வாய்ப்பை மறுப்பது சனநாயக விரோதம் மற்றும் மாநில அதிகாரங்களை ஒடுக்கும் செயலாகும். இது தவறான முன்னுதாரணமாக அமைந்து, இனிவரும் காலங்களில் அனைத்து கட்சிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படலாம்.

அறிஞர் அண்ணா சொன்னதை போல ஆளுநர் என்பவர் மாநில அதிகாரத்தை கட்டுப்படுத்தும் பண்ணையாராக செயல்படுகிறார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனரும் எதற்கு எனும் கேள்வியின் நியாயம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மாநில உரிமைகளை நசுக்கும் ஆளுநரின் போக்கினை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை முன்வைக்கிறது. இந்த எதேச்சதிகார போக்கை நாம் இன்று அனுமதித்தால் நாளை, எஞ்சியிருக்கும் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படும். ஆளுநர் வாயிலாக ஒன்றிய பாஜக அரசு தனது அதிகாரத் திணிப்பை செய்வதும், மாநில உரிமை மீது தாக்குதல் தொடுப்பதையும் மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

திருமுருகன் காந்தி

ஒருங்கிணைப்பாளர்

மே பதினேழு இயக்கம்

06-05-2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »