சர்வதேச நீதிமன்றத்தில் இசுரேல் – திருமுருகன் காந்தி

இசுரேல் மீது தென்னாப்பிரிக்கா பதிவு செய்த இனப்படுகொலை வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணக்கு வருகிறது. இது ஒரு வரலாற்று முக்கியமான தினம் என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 10/01/2024 அன்று தனது முகநூல் கணக்கில் பதிவு செய்தது:

உலகம் முழுவதும் பாலஸ்தீன இனப்படுகொலையை எதிர்த்து பெருந்திரளாய் மக்கள் போராடுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து உதவியுடன் இசுரேல் படுகொலையை தீவிரப்படுத்துகிறது. இசுரேலை பாதுகாக்க அமெரிக்கா மேற்கு ஆசியாவில் தாக்குதலை நடத்துகிறது. ஈரானில் குண்டு வெடிப்பை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூலமாக நடத்தி 200 பேரை கொன்றார்கள். ஈராக்கில் தாக்குதலை நடத்தியுள்ளது. லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. சிரியாவின் தலைநகர் டெமாஸ்கஸ் மீது குண்டு வீசுகிறது. அமெரிக்க படைகளை தம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமென ஈராக் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை அமெரிக்கா உதாசீனப்படுத்தி, தாம் ஈராக்கில் இருப்பதற்கான தேவை உள்ளதாக சொல்கிறது. பிற நாட்டில் அத்துமீறி தன் ராணுவத்தை நிறுத்திவைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு வெறியை யாரும் கண்டிக்கவில்லை. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனின் படைகள் பாப்-எல்-மெண்டெப் கடல் சந்தியை அடைத்திருப்பதால் இசுரேலுக்கு செல்லும் கப்பல்கள் தடைப்படுகின்றன. இதனால் இசுரேலின் ஹைஃபா துறைமுகம் ஆள் அரவமின்றி மாறிவிட்டது. இது அதானியின் கையில் இருக்கும் துறைமுகம். இதன் மீது இருநாட்களுக்கு முன் குண்டு வீசப்பட்டது. யேமனின் தடையை நீக்கி கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அமெரிக்க கப்பல்படை அறிவித்தது. உலக நாடுகளுக்கும் அறைகூவல் விடுத்தது. எவரும் சேர்ந்தபாடில்லை. இந்த தடையால் இசுரேல் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் செல்கிறது.

இந்நிலையில் அல்ஜீரியாவின் வான்பரப்பில் நுழைந்து இசுரேல் நோக்கி சென்ற அமெரிக்க விமான படை விமானத்தை திருப்பி அனுப்பியது அல்ஜீரியா. லிபியா தனது கடற்பரப்பில் இசுரேலின் கப்பலை அனுமதிக்கப் போவதில்லை எனும் செய்தி வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. லெபனானில் இருந்து இசுரேல் நோக்கிய தாக்குதலை ஹிஸ்புல்லா மேற்கொள்கிறது. அதன் தளபதிகள் கொல்லப்பட்ட போதும் தாக்குதலை நிறுத்தவில்லை. இசுரேலை கடல் முற்றுகைக்குள் யேமனும், லெபனானும் தள்ளுகின்றன. ஈரானின் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொலை செய்கிறது. மேற்கு ஆசியாவில் கிட்டதட்ட 40,000 படைகளை அமெரிக்கா வைத்துள்ளது. இசுரேலுக்கு சவுதி, அமீரகம், ஜோர்டான் அரசுகள் மறைமுக உதவிகள் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இசுரேலுக்கான கச்சா எண்ணையை துருக்கி இன்றும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. துருக்கி அதிபர் இசுரேலை கடுமையாக எச்சரித்துக்கொண்டே மறுபுறம் அவரது மகன் நடத்தும் நிறுவனம் மூலமாக இசுரேலுக்கு அனுப்பப்படும் பொருட்களை தடை செய்ய மறுக்கிறார். நேட்டோ படையில் இருக்கும் துருக்கி இசுரேல் மீதான நெருக்கடியை கொண்டுவரவில்லை. ஆனால் இந்நாடுகளில் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் திரள்கிறார்கள். சவுதி, அமீரகம், ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகள் கைகோர்த்திருந்தால் பாலஸ்தீன மீதான கொடூர போர் இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்திருக்கும்.

இந்நிலையில் இசுரேலுக்கு எதிராக, இனப்படுகொலை குற்றச்சாட்டு வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா பதிவு செய்தது. மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணைக்கு முன் தினம் போப்பாண்டவர் இசுரேலை கண்டித்து அறிக்கை வாசிக்கிறார். பாலஸ்தீனம் மீதான இசுரேலின் கொடூர போர் இலங்கையின் போர் மாதிரியை கொண்டது. இந்த இருபோர்களும் சில வித்தியாசங்களை கொண்டவை. முள்ளிவாய்க்கால் போர் சாட்சிகளற்ற போராக நடந்தது. ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள், ஊடகம், செஞ்சிலுவை போன்ற அமைப்புகள் வெளியேற்றப்பட்டன. ஐநாவில் கொண்டுவரப்படும் முயற்சிகள் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியோரால் தடுக்கக்கப்பட்டன. இன்றளவும் இதே நிலை. ஈழ மக்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தை திரட்ட இயலாத அளவு பல முற்போக்கு அறிவுசீவிகள், அமைப்புகள் மிக மோசமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். விடுதலை புலிகள் மீது குற்றம் சுமத்திவிட்டு இலங்கை பேரினவாதத்தின் போரை அதன் போக்கில் செல்ல அனுமதித்தனர். இன்றளவும் இதே நிலை தொடர்கிறது. இன்றளவும் நீதி கிடைக்கவில்லை, பேரினவாத அடக்குமுறை ஓயவில்லை, போராளிகள் மீதான அவதூறு நின்றபாடில்லை.

இதே சமயம், காசா படுகொலை சாட்சிகளுடன், கண்முண்ணே காணொளியாக உலகம் காண்கிறது. ஊடகம் நிற்கிறது, ஊடகவியலாளர்கள் படுகொலையாகிறார்கள். ஆனாலும் போரை நிறுத்த இயலவில்லை. ஐ.நா அமைப்பு மட்டுமல்ல, அதன் ஊழியர்கள் 120 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலகெங்கும் இசுரேலிய ஆதரவு பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதை அரசியல் செயல்பாட்டாளர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். ஹமாஸின் செயல்களை கண்டியுங்கள் என்பதை அறிவுசீவிகள் புறந்தள்ளிவிட்டார்கள்.

விடுதலை புலிகள் மீது குற்றம் சுமத்திவிட்டு அமைதிகாக்கும் அறமற்ற இந்திய- தமிழக அறிவுசீவிகளைப் போல அல்லாமல், இசுரேலின் ஜியோனிசத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள். ஜியோனிசத்தை யூதர்களே எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இசுரேலிய உழைக்கும் வர்க்கத்தை ஏன் ஹமாஸ் வென்றெடுக்கவில்லை என இந்திய போலி புரட்சியாளர்களைப் போல வரட்டுவாதத்தை மேற்குலக இடதுசாரிகள் பேசவில்லை. நோவாபால்ஹரிரியின் புலம்பல்கள், அதற்கு முட்டுக்கொடுத்த சைஜக் போன்ற இசுரேலிய சமரசவாதிகளின் கதையாடல்கள் எடுபடவில்லை. பாலஸ்தீன தேசிய விடுதலையை இடதுசாரி உலகம் அங்கீகரிக்கிறது. 1945க்கு பின் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வெளியேற்றிய ‘நக்பா’ நிகழ்வை ஒட்டியே இலங்கை பேரினவாதமும் சோல்பெரியை சாதகமாக்கிக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றி தமிழர்களை வெளியேற்றும் திட்டத்தை 1949ல் நடத்துகிறது. இரண்டு நிகழ்வும் கிட்டதட்ட சமகாலத்தவை. பாலஸ்தீனத்தை போல ஈழமும் 16,000 சதுர கிலோமீட்டரை 20-30 ஆண்டுகளுக்குள் இழந்தார்கள், தமிழ் மக்கள் தொகையில் இரு மில்லியனை நாடற்றவர்களாக இலங்கை மாற்றியது.

அமெரிக்க-இங்கிலாந்து ஆதரவுடன் இசுரேலின் ஜியோனிசம் வலிமையான ராணுவக் கட்டமைப்பை உருவாக்கியது. இதே மேற்குலக, இந்திய பார்ப்பன அதிகாரிகளின் உதவியோடு இலங்கை சிங்கள பேரினவாதம் வலிமையான ராணுவத்தை பெற்றது. 1983ல் இலங்கை சிங்கள இராணுவம் 12,000 எனும் அளவில் இருந்த போது ஒட்டுமொத்த தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை 40,000. தமிழ் போராட்டம் வெற்றியடைந்து, இலங்கை ராணுவம் சரணடையக்கூடிய நிலையை மாற்ற பல்லாயிரக்கணக்கான படைகளை இந்தியா இறக்கியது, போராளி குழுக்களுக்குள்ளாக முரணை வளர்த்து சமநிலையை மாற்றியது. இதேபோல பாலஸ்தீனத்தின் படையை முடக்குவதில் சக அரபுநாடுகள் ஒத்துழைத்தன. ஈரானின் உதவியில்லாமல் போயிருக்குமெனில் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுத்தீஸ் எழுந்திருக்க முடிந்திருக்காது. இந்த மக்கள் படைகளே இன்று இசுரேல், மேற்குலக படைகளை எதிர்கொள்கின்றன.

ஒருவகையில் ஈரானின் மீதான நேரடியான மேற்குலக போரை தடுத்தும் வருகின்றன. பாப்-எல்-மாண்டெப், ஹோர்முட்ஸ் ஆகிய உலகின் போக்கை திசைமாற்றும் வலிமை கொண்ட கடல் சந்தியை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இப்போராளி குழுக்களே காரணம். இப்பிராந்தியம் முழுமையும் தமக்கான அரசியலையும், சாமானிய இசுலாமிய மக்களுக்காக பாதுகாப்பையும் உருவாக்கியதன் வழியாக ஈரான் பிராந்திய வலிமை கொண்டதாக மாறியிருக்கிறது. மாறாக, இந்தியாவின் பார்ப்பனியத்தின் தமிழின விரோத கொள்கைகள், இலங்கை, இந்திய கடல்பரப்பிற்குள்ளாக அமெரிக்க, சீன கடல்படை தளத்தை உருவாக்குமளவு தோல்வியில் முடிந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் ஆற்றல்மிகு படைகளாக எழுந்த புலிகளை அழித்ததன் மூலமாக இப்பிராந்தியத்தை மேற்குலகிற்கும், சீனாவிற்கும் தாரை வார்த்தார்கள் தமிழக பார்ப்பனர்கள்.

இதில் ‘தி இந்து’ ராம், சு.சாமி, சோ ஆகியோரின் பங்களிப்பு மிக மிக காத்திரமானது. பர்மா போராளி குழுக்கள், பங்களாதேச போராளிகள், நேபாள போராளிகள், ஈழ போராளிகளை அழித்ததன் மூலமாக நிரந்தர பகையை அண்டைநாடுகளில் இந்தியா உருவாக்கியதற்கு காரணம், இந்திய வெளியுறவு-பாதுகாப்பு துறைகள் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் இருந்ததே காரணம். இந்த நாடுகள் மட்டுமல்லாது, தற்போது மாலத்தீவு, பூடான் போன்ற மிகச்சிறு நாடுகள் சீனத்துடன் கைகோர்க்கின்றன. உள்நாட்டிற்குள் சாமானிய மக்களை சனதானத்தின் கீழ் அடக்குகிறது, அண்டை நாடுகளில் மேலாதிக்க மனோபாவத்தின் கீழ் முரண்படுகிறது. எல்லாவகையிலும் இந்திய பார்ப்பனிய ஆளும் வர்க்கம் இந்தியாவை தோல்வியடைந்த நாடாக மாற்றிவிட்டது. இது நம் மீது பேரழிவை கொண்டுவருவதை தவிர்க்க இயலாது.

பாலஸ்தீன அழிவிற்கு ஏன் தென்னாப்பிரிக்கா நீதிகேட்க செல்கிறது? நேற்று ஈழம், இன்று பாலஸ்தீனம், கடந்த நாட்களில் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, லெபனான் என அழிவுக்கரங்கள் நீண்டன. இது நாளை யாரை வேண்டுமானாலும் அழிக்கலாம். இதை நிறுத்தியாக வேண்டும். இது மானிடகுலத்திற்கு எதிரானது. பாலஸ்தீன போர் ஆப்பிரிக்காவிற்கும் பரவும், ஆசியாவில் விரிவடையும். ஈரானுடன் மோதல் துவங்குமெனில், அமெரிக்காவின் பாதுகாப்பான கடல்தளமாக திருகோணமலை மட்டுமல்ல, காட்டுப்பள்ளி துறைமுகமும் முக்கியத்துவம் பெரும். அப்படி எனில் தமிழ் கடல்பரப்பும், நிலப்பரப்பும் இராணுவ முக்கியத்துவம் பெறும். இலங்கை கடற்ப்படை தாக்குதலில் இருந்தே தமிழரை காக்காத இந்தியப்படை உலகளாவிய போரில் என்ன பாதுகாப்பை செய்துவிடும்?

ஈழ அரசியலின் சர்வதேச தன்மையை, பார்ப்பனிய ஆதிக்கத்தை புரிந்துகொள்ளாத எவரும் முழுமையான அரசியல் நோக்காளர்களாக முடியாது. ஈழ அரசியல் தமிழ்நாட்டுக்கெதற்கு என கேட்பவர்கள், ஈழ – இலங்கை அரசியலில் எதற்காக பார்ப்பனக் கூட்டம் இன்றளவும் அதிதீவிர ஆர்வம் காட்டுகிறது என்பதற்கு பதில் தேடட்டும். சிங்களனோடு பார்ப்பனர்களுக்கான உறவு வலுப்பெற்றுக் கொண்டிருக்குமெனில், தமிழர்கள் மட்டும் ஏன் பிரிந்து நிற்க வேண்டும் என்பதற்கும் பதில் கண்டறியட்டும். பாலஸ்தீனத்திற்கு சகசாமானியர்களே குரல் கொடுக்கிறார்கள். உலகளாவிய கட்சி அரசியல் தோற்றிருக்கிறது. கட்சி-ஆட்சி கடந்து மக்கள் பாலஸ்தீனத்திற்காக குரல் எழுப்புகிறார்கள், போராடுகிறார்கள். மக்களே மக்களுக்கான பாதுகாப்பு என்பதை வரலாறு மீண்டும் நமக்கு சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »