தமிழர் அரசியலை திசைமாற்றும் கருத்துருவாக்க அடியாட்களும் போலி புரட்சிப்படைக் கும்பலும் – திருமுருகன் காந்தி

(மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூகவலைத்தள பதிவு.)

ORF – Observer Research Foundation – இது இந்திய அரசு சார்பு வெளியுறவு – பாதுகாப்புத்துறை ஆலோசனைக் குழு Think Tank. எம்.கே.நாராயணன் போன்றவர்களால் வளர்க்கப்பட்ட நிறுவனம். சென்னையில் இதன் கிளை உள்ளது. எப்படியான கொள்கைகளை எடுக்க வேண்டுமென அரசுக்கு/அரசுகளுக்கு ஆலோசனை சொல்பவர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள்.

இதன் சென்னைப் பகுதி சத்யமூர்த்தி எனும் பார்ப்பனரால் வழிகாட்டப்படுகிறது. இவரது கட்டுரைகளை ‘தி இந்து’, ‘தினமணி’ போன்ற பார்ப்பன ஊடகங்கள் வெளியிடும். இலங்கை சார்பாக இயங்கக் கூடியவர்கள். தொடர்ந்து இயங்கக் கூடியவர்கள். இலங்கை சிங்களப் பேரினவாதிகளோடும், இந்திய பார்ப்பனர்கள் (குறிப்பாக தமிழக பார்ப்பனர்களோடு) இணைந்து சிங்களப் பேரினவாத-இந்திய அரசின் நலன்களுக்காக ஆலோசனை வழங்குபவர்கள்.

சத்யமூர்த்தி

இந்த குழு ஈழத்தமிழர்கள் குறித்து நடத்த முயன்ற என்.ராம் உள்ளிட்ட அனைத்து தமிழக பார்ப்பனர் கூட்டத்தை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியதை அடுத்து அக்கூட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தனர். இந்த குழுவின் சத்யமூர்த்தி 2010-ல் சி.பி.எம். இன் கூட்டத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர் எனும் போர்வையில் கலந்துகொண்டார். என்.ராம் போன்ற சோ-கால்டு இடதுசாரியும், சுப்பிரமணிய சாமி போன்ற பாசிச வலதுசாரியும் இணையும் புள்ளி இது போன்ற நிறுவனங்களில் தான்.

இவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக இலங்கை அரசை வலுப்படுத்தவும், தமிழர்களை பலவீனமாக்கவும் நடத்திய கூட்டங்கள் ஏராளம், வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகள் ஏராளம். இவர்கள் இடதுசாரி, வலதுசாரி என அனைத்து பகுதி பார்ப்பனரோடு இயங்குபவர்கள். இவர்களிடமிருந்து சற்று தொலைவில் இருந்து கொண்டு மார்க்சிய-லெனினிய அரசியலென்று இதே பார்ப்பன அரசியலை வாந்தி எடுப்பவரும் உண்டு.

இது போன்ற குழுக்களை மே17 இயக்கம் ‘கருத்துருவாக்க அடியாட்கள்’ என 2012ல் பெயரிட்டது. இக்குழுக்கள் சர்வதேச கருத்துருவ அடியாள் குழுக்களாக செயல்படும் ICG – International Crisis Group – போன்ற குழுக்களின் கொள்கைகளை பிராந்தியமயப்படுத்துவார்கள். இந்த ICG பல நாடுகளில் ஆட்சிமாற்றங்களுக்காக அமெரிக்க திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இக்குழு 2002 ஈழ அமைதிப் பேச்சுவார்த்தையில் உதவுவதாக செயல்பட ஆரம்பித்து சீரழிவு வேலைகளை செய்தது.

2009க்குப் பின்னர் தமிழ்நாட்டில் கடுமையாக வேலை பார்க்கிறது. இவர்கள் முன்வைத்த கொள்கைத் திட்டமே போராளிகள் மீது குற்றவிசாரணை, போர்க்குற்றம், தமிழர் அழிப்பிற்கு போராளிகளே காரணம் போன்றவை. இவற்றை கொள்கைத்திட்டமாக 2011ல் வெளியிட்டதை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியது. இங்குள்ள கட்சிகள் பலவற்றை நேரடியாக சந்தித்து அமெரிக்காவின் ஐ.நா. ஒப்பந்தங்களையும், புலிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் ஆதரிக்கச் சொன்னது.

இதை மே 17 இயக்கம் அம்பலப்படுத்திய போது, எங்களை தனிமைப்படுத்த முயன்றனர். இச்சமயத்தில் ICG-யின் சதிகளை எதிர்க்க பெரிதும் துணை நின்றவர் ஐயா வைகோ அவர்கள். அவர் ஒருவரே இந்தக் கும்பலின் அரசியலை கண்டறிந்து எமக்கு ஆதரவளித்தார். இதனாலேயே ICG-யின் திட்டங்கள் 2011-2015 வரை எடுபடாமல் போனது. இக்காலகட்டத்தில் இந்த சதிகளைப் பற்றி எதுவும் அறியாமலும் அல்லது அறிந்தும் பேசமலும் இச்சதிக்கு துணை செய்யும் வகையில் ஐயா வைகோ மீது கடுமையான அவதூறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இழிவுபடுத்தவும், தனிமைப்படுத்தவும் பல பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்க்கப்பட்டன.

மிக மிக நெருக்கடியான வரலாற்று சூழலில் தமிழர்களின் எதிர்வினையை திட்டமிட்டு திசை திருப்பிய போதிலும், மே17 இயக்கம் இக்குழுவினை தொடர்ந்து அம்பலப்படுத்தி அமெரிக்கத் தீர்மானத்தை எரித்தது. மாணவர்களின் போராட்டத்தில் இந்த நிலைப்பாடு மையம் கொள்ள ஆரம்பித்து அமெரிக்க பொருட்கள் எதிர்ப்பு என வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்கக் கொடியும் எரிக்கப்பட்டது.

இச்சமயத்தில் தமிழர் கோரிக்கை திசை திரும்பாமல் பாதுகாத்த பணிகளில் மதிமுக தோழர்களுக்கு  பெரும்பங்குண்டு. திமுக -அதிமுக உட்பட திராவிட எதிர்ப்பு குழுக்கள், சில புரட்சிகரக்குழுக்கள் என்றழைத்துக்கொண்ட பார்ப்பன தலைமைகளும் ICG-யின் திட்டங்களுக்கு துணைபோகின. ஆனால் அமெரிக்கவின் திட்டங்களை பார்ப்பன குழுக்கள், ஊடகங்கள் முழுமையாக பரப்பின. அச்சமயத்தில் இந்த ORF குழுவும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டது. மாணவர் எழுச்சி இந்த திட்டங்களை தவிடுபொடியாக்கியது.

தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து மே 17 இயக்கம் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கும் அரசியலை விளக்கினோம். உடன் நின்றவர்கள் மதிமுகவினர். அமெரிக்க தீர்மானத்தின் மூலமாக தமிழர்களை தன்பக்கம் இழுத்து, இலங்கையில் தமக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம் என நினைத்த மேற்குலகின் திட்டம் செல்லுபடியாகவில்லை.

அமெரிக்க எதிர்ப்பு வலுத்ததையும், ஈழப்படுகொலையில் அவர்கள் பங்களிப்பை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தி போராட்டமாக்கியதைக் கண்டும், மாணவர்கள் அமெரிக்க கொடி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்ததைக் கண்டு பதட்டமடைந்த அமெரிக்காவின் தெற்காசிய பொறுப்பாளரும், அமெரிக்க அரசியலில் முக்கிய நிலையில் இருந்தவரும், ஈழ அமைதிப்பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணாகவும் இருந்த ராபர்ட் ப்ளேக், “எங்களை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், இலங்கை அரசே குற்றங்களுக்கு பொறுப்பாளி” என்பதாக அறிக்கை வெளியிட்டார்.

இவ்வாறு தமிழர் விரோத அரசியலின் மையத்தை நோக்கி நகர்ந்த அரசியலை திராவிட எதிர்ப்பு திரிபுவாதிகள் திட்டமிட்டு உள்முரணாக மடைமாற்றினர். வெட்கமின்றி ஈழத்திற்கு எதிராக 20 நாடுகளை திரட்டிய மேற்குலகிற்கு துணை நின்றார்கள். 2009 அழிப்பிற்கு பின்பாக நீதி பெறும் போராட்டத்தை மடைமாற்றி வெற்றிகண்டனர். இதே சமயத்தில் 40 ஆண்டுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு என வேடமிட்ட கும்பல் புலி எதிர்ப்பு என பம்மாத்து காட்டியது. சிங்களப் பேரினவாதத்தை அடையாளம் காட்டாமல் தெலுங்கர் சதி என திரிபுக்கூட்டம் மடைமாற்றி பார்ப்பனரை காப்பாற்றினார்கள்.

மறுபுறம் புலிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி பார்ப்பன-சிங்கள இனவாத அரசியலை காப்பாற்றியது பார்ப்பனிய போலி-முற்போக்கு கும்பல். சிங்கள இனவாதத்தை பற்றி கேள்வி எழுப்பாமல் நீதிகேட்ட தமிழர்களை ‘இனவாதிகள், இனவாதம் பேசுபவர்கள்’ என்றார்கள். இருவருமே இன்றளவும் பார்ப்பன கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள். இந்த சுழலில் சிக்கிய திமுக, அதன் அரசியல் சிந்தனையாளர்கள் ஈழ விரோத, புலி எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்தால் தப்பிப் பிழைக்கலாமென பார்ப்பன சதியில் சிக்குண்டுள்ளனர்.

முதல்வரைச் சுற்றி என்.ராம், ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மற்றும் அவரது கும்பல் சிந்தனையாளர் குழு என்ற போர்வையில் வளைத்து நிற்கிறது. தன்னுடன் முதல்வர் நடைபயணம் மேற்கொள்வதை தெற்காசிய அரசியல் புரோக்கர் என்.ராம் பெருமையாக்குகிறார். முதல்வர் பெரியாரிஸ்டுகளைக் காட்டிலும் இவரோடு ஏன் நெருக்கமாகிறார் என பல மூத்தவர்கள் கேள்வி எழுப்பாமல் எம்மை நோக்கிய அவதூறுகளுக்கு மகிழ்ச்சியாக அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்தமிழர் என பேசிய திராவிட இயக்க மரபை உடைத்து இலங்கைத் தமிழர் என பார்ப்பனக் கூட்டத்தின் திட்டத்திற்குள்ளாக முழுமையாக கொண்டு வந்தாயிற்று.

தேசிய இன விடுதலையை பேசியவர்கள், இலங்கைக்கு  உதவிப்பொருள் அனுப்பி நற்பெயரெடுக்க ஆலோசனை கொடுத்தாயிற்று. இலங்கையில் நடந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் World Bank, IMF மட்டுமே, ஈழப்போரோ, சிங்கள ராணுவப் பெருக்கமோ காரணமல்ல என தலைகீழாக நின்று நிரூபிக்க போலி-புரட்சி பார்ப்பனீய யூட்யூபர்கள் முயன்றார்கள். இதை ஆதாரப்பூர்வமாக மே 17 இயக்கம் மறுத்த போது கள்ளமெளனத்தோடு கடந்தார்கள். இலங்கை ராணுவப்பெருக்கமும், ஆயுத கொள்வனவு, பேரினவாதமே பொருளாதார சரிவிற்கு காரணம் என்பதை மறைக்க விரும்பினார்கள் சில யூட்யூபர்கள்.

இலங்கை பொருளாதார போராட்டத்தின் போது சிங்களவரோடு தமிழர் பகுதிகள் இணையவில்லை என ஒப்பாரி வைத்தார்கள். சிங்களவரோடு இணைந்து தமிழர் தம் பிரச்சனைகளை தீர்க்கலாமென என்.ராம், சு.சாமி முதல் போலி புரட்சிக்கும்பல் வரை தமிழினத்திற்கு அறிவுரை வழங்கியது. “1985 முதலாக ஈழத்தமிழர்கள் இலங்கையில் பொருளாதார தடையில் தானே வாழ்கிறார்கள்! புதியதாக என்ன நெருக்கடியை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்? இப்போதுதானே சிங்களம் எதிர்கொள்கிறது. சிங்கள சனநாயகவாதிகள் தற்போதாவது இனப்படுகொலை குறித்து பேசுவார்களா?” எனும் கேள்விக்கு பதிலில்லை.

மாறாக ஈழப் போராட்டத்தை இனவாதமாக மட்டுமே கட்டமைப்பதும், போராளிகளை பாசிஸ்டுகள் என பிரச்சாரம் செய்வதை மட்டுமே செய்தார்கள். இதையெல்லாம் மே 17 இயக்கம் ஆதாரங்களுடன் எதிர்கொண்ட பொழுது காங்கிரஸ்-பாஜக ஒன்று, திமுக-அதிமுக ஒன்று என மே17 அரசியல் தெளிவற்று இருப்பதாக பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இந்த காழ்ப்புணர்வு அரசியலில் சில பெரியாரிஸ்டுகள்  பார்ப்பனர்களின் ஆயுதங்களாகி போனார்கள்.

ORF- sinhala military economy

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த பார்ப்பன ORF அமைப்பு வெளியிட்ட கட்டுரையில் இலங்கையின் ராணுவகுறைப்பினை பற்றி எழுதியது. அதில் பொருளாதார வளர்ச்சியின்மைக்கு இராணுவ-ஆயுத தளவாட கொள்முதல் கொள்கை முக்கிய காரணமென்றது. மேலும் இலங்கையின் 21 படையணிகளில் 14 தமிழர் பிரதேசங்களில் நிலை கொண்டுள்ளது. சில இடங்களில் 2 தமிழர்களுக்கு 1 சிங்கள ராணுவம் நிற்கிறார்களென இந்த  பார்ப்பன  நிறுவனமே எழுதியுள்ளது, போலி புரட்சிப்படைக்கும்பலின் ஒப்பாரியை அம்பலப்படுத்தியுள்ளது.

ஈழ அரசியலில் ஏற்படுத்தப்பட்ட குழப்ப நிலைகள் தமிழ்நாட்டு அரசியலுக்குள்ளும் ஏற்படுத்தப்படுகின்றன. சகோதர-தோழமை அமைப்புகளுக்குள் இருக்கும் நட்பு முரண்களை, போட்டி அரசியலாகவும், பகை முரணாகவும் மாற்றும் முயற்சி கடுமையாக நடக்கிறது. எவ்வாறு 1980-களில் திம்புப் பேச்சுவார்த்தையின் போது ஒன்றாக நின்ற ஈழத்தமிழர் இயக்கங்களை சில வருடங்களுக்குள்ளாக பகை சக்திகளாக மாற்றிய சோ, சு.சாமி, என்.ராம் ஆகியோரின் அரசியல் தமிழ்நாட்டிற்குள்ளும் வளர ஆரம்பித்துள்ளது.

போராளிகளுக்குள்ளாக எவ்வாறு போட்டிகளை, படுகொலைகளை இந்திய பார்ப்பனியம் ஊக்குவித்தது என்பதை இந்திய அமைதிப்படையின் தலைமை தளபதி ஹர்கிராத் சிங் வெளிப்படையாக எழுதினார். அச்சமயத்தில், பகையை வளர்க்க பெரிதும் பணியாற்றிய தீட்சித், பண்டாரி போன்றவர்களால் பயிற்சியான பார்ப்பன கும்பலே தற்போதய திமுக அரசையும் சுற்றியுள்ளது. மறுபுறத்தில் இக்கும்பலே திராவிட எதிர்ப்பு திரிபு கும்பலையும் வளர்க்கிறது. இச்சமயத்தில் இந்த சதிகளை உடைக்க தேர்தல் அரசியலில் உள்ள மதிமுக, விசிகவின் பங்களிப்பு மிக அவசியமானது.

இதனாலேயே இவர்கள் மீது கடுமையான அவதூறுகளும், உள்நெருக்கடிகளும் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன என்பதை அதன் தோழர்கள் கவனமெடுப்பது நல்லது. நம் மீது எங்கிருந்து அம்புகள் ஏவப்படுகின்றன எனும் திசையை கண்டறிந்து சதிகளை முறியடியுங்கள். தமிழினத்தின் மிக முக்கிய அரசியல் நெருக்கடி காலகட்டத்தில் நாம் இச்சதிகளை வீழ்த்துவது வரலாற்று தேவை.

சின்னஞ்சிறு சச்சரவுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. முகமற்றவர்களால் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. சக தோழமைகள் பற்றி அவதூறுகள் சகோதரர்களுக்குள் முரண்பாடு ஏற்படும் விதமாக உருவாக்கப்படுகின்றன. மறுபுறத்தில் பார்ப்பனர்கள் எவ்வித சிரமும் இன்றி தமது இலக்கை நோக்கி நகர்கின்றனர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு புறத்திலும் தமது அணிகளை பார்ப்பனியம் ஊடுருவி நிற்கிறது.

ஈழம் பலவற்றை தமிழருக்கு கற்றுத்தரும். அந்த வரலாற்று பாடங்களின்  வழியே, பெரியார், தேசிய தலைவர் அரசியல் திசை வழிகாட்டலில் தோழமையுடன்  முன்னேறுவோம்.

நாம் வெல்வோம்!

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்
சூலை 10, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »